Friday 28 March 2014

ஸ்ரீ சங்கரர் அருளிச்செய்த துர்வாஸனா ப்ரதிகார தசகம்:

ஸ்ரீ சங்கரர் அருளிச்செய்த துர்வாஸனா ப்ரதிகார தசகம்:

உலகில் மனிதப்பிறவி எடுத்துள்ள ஒவ்வொருவரின் குணாதிசயங்களும் அவரது வாஸனா பலத்தைப் பொருத்தனவே ஆகும். இப்பிறவியில் நாம் அனுபவிக்கும் நல்ல விஷயங்களோ அல்லது தீய விஷயங்களோ, அவ்வனுபவங்கள் அழியும் போது நம்முடைய ஆழ்மனஸில் ஒரு ஸம்ஸ்காரத்தை ஏற்படுத்திச் செல்கின்றன. இந்த ஸம்ஸ்காரத்தினுடைய ஒருங்கிணைப்புதான் ஒருவனது குணங்களை நிச்சயிக்கின்றது. எனவேதான் ‘ஒருவரது எண்ணங்களே ஒருவரை உருவாக்குகின்றன’ என்று கூறுகிறோம். நம்முடைய சரீரம் ‘இரும்பு' என்றால் அஃதை அடித்து உருவம் கொடுக்கும் சம்மட்டியானது நம்முடைய எண்ணங்களே. இப்படிப்பட்ட ஸம்ஸ்காரத்தை ‘வாஸனை’ என்று குறிப்பிடுகிறோம். நல்ல மணமுள்ள புஷ்பங்களை வைத்து மூடிய பாத்திரத்திலிருந்து அவற்றை எடுத்த பிறகும் எவ்வாறு அப்பாத்திரம் சுகந்தத்தைக் கொண்டுள்ளதோ, அதே போன்று நற்செயல்களில் முன்பிறவியில் ஈடுபட்டால் அஃதிலிருந்து உதித்த நல்வாஸனை இப்பிறவியிலும் நம்மை நற்செயல்கள் செய்வதில் ஈடுபடுத்தும். ஆனால் துர்கந்தம் வீசும் பதார்த்தங்கள் கொண்ட பாத்திரம் அவற்றை நீக்கிய பின்பும் பல காலம் துர்நாற்றத்தையே வீசும். இவ்வாறே முற்பிறவிகளில் தீய செயல்களில் ஈடுபட்டால், அதனின்று உதித்த துர்வாஸனைகள் இப்பிறவியில் நம்மை தீய செயல்களையே செய்யத் தூண்டிவிடும். ஆகையால் நற்செயல்களோ அல்லது தீய செயல்களோ செய்ததால் அதிலிருந்து நாம் சேகரித்த வாஸனையின் பலத்தினால், அதன் தரத்தை அநுசரித்தே இப்பிறவியில் இயற்கையாகவே நாம் நற்செயல்களிலோ அல்லது தீய செயல்களிலோ ஈடுபடுகிறோம். நல்ல வாசனையின் பயனாக நாம் செய்யும் நற்செயல்களால் நாமும் நம்மைச் சார்ந்தோரும் பல நன்மைகளை அடைகிறோம். மாறாக தீயவாஸனைகளின் விளைவாக தீய செயல்களில் ஈடுபட்டு நாமும், பிறரும் பல இன்னல்களை எதிர்கொள்கிறாம். ஆகவே துர்லபமான இந்த மனிதப் பிறவியில், இனி வரும் பிறவிகளில், நம்மை மேன்மேலும் உயர்த்திக் கொள்ள எப்பொழுதும் நற்செயல்களிலேயே ஈடுபட்டு நாம் நல்ல வாஸனைகளையே சேகரித்துக் கொள்ள வேண்டும். ஆனால் என்ன செய்வது? நம்முடைய ப்ராரப்த கர்ம பலத்தால் நம்மையும் மீறி சில சமயம் கெட்ட வாஸனைகளையும் பற்றிக் கொண்டு விடுவோம். ஜீவராசிகளிடம் பரமகருணை கொண்ட ஸ்ரீசங்கரர், அவர்களுக்கு உபதேசம் செய்யும் வகையில் துர்வாஸனைகளிலிருந்து விடுபடும் எளிய வழிமுறையை நமக்கு ‘துர்வாஸனா ப்ரதீகார தசகம்’ என்ற பத்து ஸ்லோகங்களில் மிக அழகாக வர்ணித்துள்ளார்.
தீய வாஸனைகள் வேரோடு அகற்றப்பட வேண்டும். எங்ஙனம்? அதற்கு மூன்று வழிகள் உள்ளன. 1) துர்வாஸனைகள் செயல்பட்டு நம்மை ஆட்டிப் படைக்கும்போது, அவற்றை எதிர்த்து நல்வாஸனைகளைத் தரும் நற்பழக்கங்களைக் கடைபிடிப்பது. துர்நாற்றத்தை நீக்க நாம் சுகந்தத்தைத் தெளித்துக் கொள்வது போன்று இது உதவும். அதாவது சுகந்தமானது துர்நாற்றத்தால் நமக்கு ஏற்படுத்தும் பாதிப்பைக் குறைக்கும். ஆனால், சுகந்தம் சற்றே குறையப் பெற்றாலும் துர்நாற்றம் மீண்டும் தலைதூக்கும். அதே போன்று, துர்வாஸனைகள் கெட்ட மணத்தைப் போன்று மீண்டும் வெளிப்படும். இந்நிலை ஏற்படாமல் இருக்க, அதாவது துர்வாஸனைகள் தலை தூக்காமல் இருக்க நல்வாஸனைகளைப் பெற நற்செயல்களில் இடையறாது ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

2) துர்வாஸனைகளோடு கூடிய மனத்தையே இயங்க விடாமல் அடக்கிவிடுவது. துர்மணம் பரப்பும் குப்பையை நெருப்பில் எரித்து அதிலிருந்து எவ்வாறு விடுபடுகிறோமோ அவ்வாறே துர்வாஸனைகளைக் கொடுக்கும் சூழலிலிருந்து நம்மை விடுவித்துக் கொண்டு அவற்றை அழிக்க முற்பட வேண்டும். உதாரணமாக, மனத்தைப் பாதிக்கும் எத்தனையோ தொலைக்காட்சி நிகழ்ச்சிகள். அவற்றிலிருந்து நாம் சுலபமாக விடுபட இயலும்.

3) துர்வாஸனைகளால் ஏற்படும் விளைவுகளை நம் மனத்திற்கு எடுத்துக்கூறி அம்மனத்தை வாஸனைகளிலிருந்து விலகப் பழக்க வேண்டும்.

ப்ரஹ்மானந்தத்தை அடையும் ஸாதனங்களாக இம்மூன்றையும் ஸ்ரீசங்கரர் தாம் இயற்றியுள்ள ‘துர்வாஸனா ப்ரதீகார தசகம்’ என்ற நூலில் விளக்கியுள்ளார்.

வேதங்களில் விதிக்கப்பட்டுள்ள செயல்களைச் செய்து கொண்டும், அவற்றில் தவிர்க்கப்பட்டுள்ள நிஷித்தமான செயல்களைச் செய்யாமலும், அவரவர் நிலைக்கேற்ப செய்யத் தக்க செயல்களையும், இம்மையிலும் மறுமையிலும் நன்மை பயப்பனவென்பதையும் பொழுது புலரும் சமயத்தினின்றே செய்ய ஆரம்பித்து அதன் மூலம் மனத்தூய்மை (சித்த சுத்தி)யை அடைந்து ஒருவன் ஆத்ம சிந்தனத்தில் ஈடுபட வேண்டும். அஃதை அனுசரித்து, துர்வாஸனைகள் நமக்கு ஏற்படுத்தும் இன்னல்களையும், நல்ல வாஸனைகளால் நாம் அடையப் பெறும் மகத்தான பலன்களையும், இதிஹாஸங்களின் கதாநாயகர்கள் தமது வாழ்க்கையின் மூலம் நமக்கு எடுத்துரைக்கும் நற்செயல்களையும், ப்ரதானமாக ஸ்ரீ மஹாபாரதத்தின் மோக்ஷதர்மப் பகுதியையும், வஸிஷ்டர் ஸ்ரீ ராமருக்கு போதித்த ‘யோக வாஸிஷ்டம்’ என்னும் ‘ஸ்ரீவாஸிஷ்ட ராமாயண’த்தையும் கருத்தூன்றி ஒரு மனமாகப் படித்து அறிந்து அதன் ஸாரத்தை உணர்ந்து செயல்பட வேண்டும். இவ்வாறாக ‘ஸத்வாஸனைகள்’ நிலைபெற்றிருக்கும் நிலையில், அது தொடர்ந்து இறைவனிடத்தில் மாறாத பேரின்ப அனுபவமாக மாறுவதற்கு, மாலை நேரங்களில் ‘ஸ்ரீமத் பாகவதம்’ என்ற க்ரந்தத்தில் கூறப்பட்டுள்ள வ்ருத்தாந்தங்களை (கதை) படித்து அனுபவிக்க வேண்டும். இவ்வாறாக பகல் நேரங்களில் செய்யக்கூடிய சிறிய இடைவிடாத முயற்சிகளால் ‘மனோலயம்’ ஸித்தித்து இருப்பதற்கு, இரவில் ஆத்ம சிந்தனையில் திளைத்து, ‘ஆத்மானந்தானுபவம்’ பெற வேண்டும். நம் சரீரம், இந்த்ரியம், முதலானவற்றைப் போஷிப்பதற்கான உலக வ்யவஹாரங்களில் நமக்கு இந்த உடலுடன் உறவை ஏற்படுத்தித் தற்போதுள்ள நிலைக்குக் கொணர்ந்துள்ள நம்முடைய ப்ராரப்த கர்ம வினைகளே மிஞ்சியுள்ள நமது வாழ்நாளின் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளும். இவ்வாறான மன நிறைவுடன் ‘நான்’ ‘எனது’ (அஹம், மம) என்ற வாஸனைகளை மீண்டும் தூண்ட வழியில்லாமல் செய்து கொண்டு வாழ்நாளைக் கழிக்க வேண்டும்.
குறிப்பு: நாம் செய்யும் வினைகள் ஸஞ்சிதம் (சேர்த்து குவிக்கப்பட்டவை). ஆகாமி (வருங்காலத்தில் சேமிப்பவை) என்று இரு வகைப்படும். அவற்றில் பக்குவத்தை அடைந்து தற்போதுள்ள ஸரீரத்தை கொடுத்துள்ள ஸஞ்சித வினையின் ஒரு பாகமே ப்ராரப்தம் எனப்படும். இந்த சரீரத்தில் நல் வாஸனைகளை அடையப்பெற்று இனி வரும் பிறவிகளில் நம்மை உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்வோமேயானால் ஏதோ ஒரு பிறவியில் ஆத்மஞானத்தை அடைவது நிச்சயம். அப்போது முற்பிறவியின் மூட்டைகளாக உள்ள ஸஞ்சித வினைகள் வேரோடு அகன்றுவிடும். ஆகாமி என்பது ஒட்டாது. இதையே பகவான் கீதையில் ஞானாக்னி: ஸர்வகர்மாணி பஸ்மஸாத் குருதே ததா (ज्ञानाग्निः सर्वकर्माणि भस्मसात् कुरुते तथा) என்று குறிப்பிடுகிறார்.
நம்முடைய மனதை நோக்கிக் கூறும் அறிவுரையாக அமைந்துள்ளது இந்த ஸ்லோகத்தின் கருத்து.
“ஓ மனமே! அனாதியான அஜ்ஞானம் அல்லது மாயா என்ற தத்துவம்தான் ‘இந்த பஞ்சகோசங்களாலான உடல்தான் நான்’ என்ற பிணைப்பை ஏற்படுத்தியது. துக்கமயமானதும், அசுத்தமானதும், அழிவுறக்கூடியதும் அஜ்ஞானமயமானதுமான இந்த கோசங்கள் நான் அல்லேன்; ‘எங்கும் நிறைந்ததும் அழிவற்றதும், ஸத், சித், ஆனந்த ஸ்வரூபமுமான ப்ரஹ்மமே நான்’ என்ற பாவனை மூலம் இந்த அஜ்ஞானத்தைக் கடக்க முயன்று அகற்ற வேண்டும். உன் அனுபவத்தில் உலகில் காண்கின்ற காட்சியனைத்தும் நிலையற்றன, பொய். அவையனைத்திற்கும் ஆதாரமாக நிற்கும் ஸத், சித், ஆனந்த ப்ரஹ்மஸ்வரூபமே மெய். அப்படிப்பட்ட ப்ரஹ்மத்தைத் தவிர நான் வேறல்லேன் என்று நினை. உண்மையில் அந்த ப்ரஹ்மத்தைத் தவிர நீ வேறல்லாததால் இந்த ப்ரபஞ்சத்தைப் பற்றிய ஸ்வரூப கற்பனைகளை அறவே ஒழித்து விடு. மனஸின் சஞ்சலத்தால் அவ்வப்போது உன் மகிழ்ச்சிக்காக உலக இன்பங்களில் நாட்டம் ஏற்பட்டு ‘இவை இவை வேண்டும்’ என்ற ஆசை மேலிடும். ஆனால் இவைகளை அடைவதால் ஏற்படும் துக்கத்தின் தொடரை நினைத்து நினைத்துப் பார்த்து அந்த ஆசைக்கு ஒருபோதும் இடம் தராதே. உன் ஆசை நிறைவேறாத போதோ அல்லது அஃதை அடைய தடை ஏற்படும்போதோ அதற்குக் காரணமானவைகளில் கோபம் உண்டாகும். கோபம் என்பதும் ஒரு கெட்ட வாஸனை. அதைத் தவிர்க்க சிறந்த உபாயம் பொறுமை. கோபம் உண்டாகும் சமயத்தில் அதைச் சிறிது நேரம் தள்ளிப் போடமுடியுமென்றால், அதாவது பொறுமையைக் கடைபிடிக்க முடியுமானால் கோபம் தானே அடங்கும். காமத்தின் மற்றொரு வகை லோபம். பிறரிடம் உள்ளது தன்னிடம் இல்லை. அதுவும் தனக்கு வேண்டும் என்ற உணர்வே லோபம். தன்னிடம் இருப்பதைக் கொண்டுத் திருப்தியடையும் பழக்கத்தை வளர்த்துக் கொண்டால் லோபத்தை வெல்லலாம்.
தொடர்ந்து மனதை நோக்கிக் கூறுகிறார். ஓ மனமே! சிற்றின்பம் என்பது உடலால் கிடைப்பதாகும். அதில் ஆனந்தம் கிடைப்பதாக நினைப்பது ஒரு ப்ரமை. இந்த ஆனந்தானுபவத்தை அனுசரித்து அதைத் தொடர்ந்து ஏற்படும் துக்க விளைவுகளை ஆராய்ந்து பார்ப்பதன் மூலம் இந்த ப்ரமையை நீ விட்டுவிடலாம்; கடுமையான சொற்கள் பேசுவது என்பது பழக்கத்தால் இயல்பாகிவிட்ட வழக்கம். இந்த குணத்தை இனிமையாகப் பேசுவதன் மூலம் மாற்றிக் கொள்ளலாம். வீணாகப் பேசுவதைக் குறைக்க மௌனத்தைக் கடைபிடி. தீயவர்களின் சேர்க்கையைத் தவிர்க்க முடியாமல் போகில் அதை மாற்ற நல்லோர்களுடன் நிர்பந்தமாக பழக முயற்சி செய். கர்வம் கொண்டவர்கள் அனைவருக்கும் பங்கம் ஏற்பட்டுள்ளதைக் கவனித்து கர்வம் கொள்ளாமலிருக்கப் பழகிக் கொள். பிறர் நிந்தித்தால் அதனை எதிர்த்து நீயும் நிந்திக்க முயலாதே. பிறர் உன்னை நிந்திக்க நேர்ந்தால் நிந்தையை எதிர்கொண்டு மனிதனாக வாழ்ந்து காட்டிய அவதார புருஷர்களான ஸ்ரீராமன், ஸ்ரீக்ருஷ்ணன், மஹர்ஷிகள் போன்ற பெரியோர்களையே இந்த உலகம் எவ்வாறு நிந்தித்தது என்பதை நினைவிற் கொண்டு, உன்னை மற்றவர் நிந்திப்பதைப் பொருட்படுத்தாதே. ஏனெனில் அவ்வாறு அவர்களை நிந்தித்தவர்கள் துன்பப்பட்டதையும் நீ அறிவாய்!
குறிப்பு: மற்றவர் நம்மை நிந்திக்கும்போது அதை எவ்வாறு எதிர் கொள்ள வேண்டும் என்ற கருத்தை “ஞானாங்குசம்” என்ற க்ரந்தத்தில் ஸ்ரீசங்கரர் கூறுகையில் என்ற ஸ்லோகத்தில் கூறுகிறார். இதன் கருத்து:

எந்த ஸாரமும் அற்ற இவ்வுலகில் ஒரு வேளை என்னை நிந்தித்துப் பேசுவதால் ஒருவனுக்கு அளவற்ற மகிழ்ச்சி கிட்டுமேயாகில், என் முன்பாகவோ அல்லது வேறு யாரிடமோ நிந்தித்துப் பேசட்டும். ஏனெனில் துக்க மயமான இவ்வுலகில் நம்மை நிமித்தமாகக் கொண்டு எவரேனும் மகிழ்ச்சியுற்றால் அது கிடைத்தற்கரிய பாக்யமன்றோ?

தமோ குணம் நிறைந்து நிற்கும்போது ஏற்படுவது நித்திரை. தமோ குணத்தை வளர்க்கிற பொருட்களால் தூக்கமும் அதிகமாகும். அதை வெல்ல ஸத்வ குணத்தை வளர்க்கிற உணவு வகைகளையே அதிகம் உண்ண வேண்டும். நித்திரையையும், விழிப்பற்ற நிலையான கனவு நிலையையும் எப்போதும் விழித்துக் கொண்டிருப்பதன் மூலம் அகற்று. (மனம் களைத்துப் போகும் வரை விழித்திரு; மனம் அடங்கினால் நன்கு நித்திரை வரும். மனம் அடங்கா நிலையில் கனவு ஏற்படும்). உணவை மிதமாக, அதாவது முன்பு உண்ட உணவு ஜீர்ணமானதை அறிந்து உட்கொண்டால் நோய்களைத் தவிர்க்க இயலும். ரஸனேந்த்ரியத்திற்கு அடிமையாகித் தவறான நேரத்தில் உணவு உட்கொள்வதன் விளைவே நமக்கு ஏற்படும் நோய்களின் காரணம். 1. ‘எனக்குத் துக்கமேற்படும்போது உதவுபவர் எவரும் இல்லையே’ என்று தீனமாக ஏங்கி நிற்காதே. ‘நான் நித்யன், என்னை ஒருவரும் அழித்துவிட முடியாது, உலகின் உயர்வும், தாழ்வும் என்னைப் பாதிக்காது’ என்ற மனோதைர்யமே இந்த தீன உணர்வை விரட்டி அடிக்கும். ‘வேண்டியதாயினும், வேண்டாததாயினும் இருந்துவிட்டுப் போகட்டும்’ என்றும் நீ சேர்த்து வைத்த பொருட்கள் அனேகம். இவையனைத்தும், உனக்கு இவற்றில் ஏற்பட்ட நப்பாசை காரணமாகச் சேர்க்கப்பட்டவையே! உண்மையில் இவை உனக்குத் தேவையில்லை. தேவையற்றதாயின் விலக்குவேன் என்ற திடபுத்தியுடன் நீ சீர்தூக்கி, விலக்க வேண்டியவற்றை விலக்க முற்பட்டாயேயானால் பெருஞ்சுமையானது உன்னைவிட்டு விலகும். 2. பெண்ணாசை பொல்லாதது. இதனால் மடிந்தவர் ராவணன் போன்ற மஹா பலசாலிகள் என்பதை மனதிற்கொண்டு அதனைத் தவிர்த்து விடு. ‘அது கஷ்டம், இது கஷ்டம்’ என எங்கு நோக்கினும் கஷ்டத்தையே காணாதே. ஏனெனில் நீ ஆனந்தமயமான ஆத்மஸ்வரூபம் என்பதை நினைவிற்கொண்டு அதில் நிலைத்தால் தோற்றத்தில் துக்கமாகத் தோன்றுபவையும் ஆத்மஸ்வரூபமாகி கஷ்டமானவை என்ற நினைவு அகன்று விடும்.

குறிப்பு: 1. ஆஹாரத்தில் நியமத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்ற கருத்தை ஸ்ரீ விஷ்ணு புராணத்தில் ப்ரஹ்லாத ஸ்வாமியின்
என்ற ஸ்லோகத்தில் காண்கிறோம். இதன் கருத்து -உணவை உண்பதற்காக வேதத்தில் விஹிதமான செயல்களைச் செய்ய வேண்டும். நம் உடலில் ப்ராணனை தங்கவைக்க எவ்வளவு உணவு தேவையோ அவ்வளவு உணவையே உண்ண வேண்டும். நம் உடலில் ப்ராணன் அவசியம்; ஏனெனில் அப்பொழுதுதான் தத்துவத்தை உணர முடியும். தத்துவத்தை உணர்வதால் பிறப்பென்ற துக்கம் மேலும் மேலும் தொடராது.

2. இதே கருத்தை ஸ்ரீ சங்கரர் பஜகோவிந்தத்தில்

என்ற ஸ்லோகத்தில் பொருள் சேர்த்து சொத்துக்களைக் குவிப்பது ஆபத்தானதாகும். கடுகளவும் பொருளால் ஆனந்தத்தை அடைய முடியாது. செல்வந்தன்கூட தன் பிள்ளைகளிடத்தில் பயப்படுகிறான். இதுவே உலக நியதியாக விளங்குகிறது என்று கூறுகிறார். பத்ருஹரி வைராக்ய சதகத்திலும், உலகில் பயம் நிறைந்தவற்றையெல்லாம் எடுத்துக் கூறி ‘வைராக்யமேவ அபயம்’ என்று முடிக்கிறார்.
மனைவியினிடத்தில் உள்ள உனது பற்று மனைவியினிடத்தில் பிரியத்தால் அன்று. உன் மனைவி என்பதாலும் உனக்குப் பிரியமானவள் என்பதாலும்; ‘எனது’ என்ற உன் அம்சம் கலப்பதாலேயே இந்தப் பற்று. உன் பிள்ளைகளிடத்தில் உள்ள அன்பும் இவ்வாறே. அவளுக்கும் உன்னிடத்தில் அப்படித்தான் பிரியம். செல்வத்தில் உனக்குள்ள பற்றும் அவ்வாறே. ஏனெனில் உன்னுடைய தனத்தையே கப்பாற்றி வைக்க முயற்சி செய்கிறாய். ஒன்றில் பிரியம் அதிகமாக ஆக மற்றொரு பொருளில் ஆதரவு குறையும். ஆத்மாவிடத்தில் பிரியம் அதிகமாக ஆக மனைவியினிடத்தில் வைத்த பற்று தானே குறையும். என்னைச் சேர்ந்தது என்ற நினைப்பினால் மட்டுமே ஒரு பொருள் நமக்குச் சுகத்தை அளிப்பதில்லை. ஏனெனில் அப்படி நினைத்த ஒரு வஸ்துவும் அநித்யம்தானே? அஃது அழியும்போது அதனால் ஏற்படும் துக்கத்தை மனதில் கொண்டு எதிலும் என்னுடையது என்ற பற்றை வளர்த்துக் கொள்ளாதே. பிள்ளை சொத்து ஆகியவற்றில் வைக்கும் பற்றைக் குறைக்க இஃது ஒரு வழியாகும். ஒரு வஸ்து நம்மிடம் இருந்தால் நன்றாக இருக்கும் என்ற மோஹமே நம்மை அதன் மேல் பற்று வைக்கத் தூண்டுகிறது. அந்த மோஹத்திலிருந்து விடுபட்டால் பற்று தானாகவே அகன்று விடும். வெளியே இனியவன் போலத் தோன்றுபவன் உள்ளே கொடியவனாக இருக்கலாம். ஆனால் வெளியிலுள்ள இனிமையை மனத்திலும் கொண்டுவர கருணையை உள்ளதில் ஊன்ற விடு. தோழன், பகைவன் என்ற சிந்தனையில் ஏற்படும் விளைவுகளை எந்த விஷயத்திலும் உதாசீனமாக இருக்கப் பழகுவதன் மூலம் தவிர்த்துவிடலாம். எதிரிகளாக இருக்கும் பத்துப் புலன்களும் (பஞ்ச கர்மேந்த்ரியங்கள், பஞ்ச ஞானேந்த்ரியங்கள்) அதனதன் விஷயங்களை நாடி நம்மை இழுத்து அல்லல்படுத்துவதைத் தவிர்க்க அவைகளுக்கு விஷய சுகத்தை அனுபவிக்க முடியாதபடியான ஏகாந்த ஸ்தானத்தை நாடிச் செல்.
ஓ மனமே! சோர்வு ஏற்படும்போது சுறுசுறுப்பாக இயங்கு. மனஸை அமைதியாக்குவதன் மூலம் உடல் களைப்பை நீக்கு. புதிய பணியில் உற்சாகத்துடன் ஈடுபடுவதால் சோம்பலை மாற்றிக் கொள். உலகில் ஏற்றத்தாழ்வுணர்வு காணப்பெற்றால், அவ்வாறான ஏற்றத்தாழ்வுடன் கூடிய பொருட்கள் அனைத்திற்கும் ஒரே மூலப் பொருள்தான் என்ற எண்ணத்தால் அதனைப் போக்கிக் கொள். தேஹத்தையே நான் என நினைத்து அதனால் ஏற்படுகிற அஹங்காரம், மமகாரம் போன்ற ப்ரமஜ்ஞானம், அதன் விளைவுகளை உண்மையான ஆத்ம சிந்தனையால் களைந்து விடு. பிறரது குற்றங்களைச் சுட்டிக்காட்டி ஏளனமாகப் பேசும் பழக்கம் உண்டெனில் ‘என்னிடமும் அந்தக் குறைகள் உள்ளனவே! அப்படியிருக்க மற்றவரைக் குறைகூற எனக்குத் தகுதி ஏது?’ என்று ஸமாதானப் படுத்திக்கொள்.

அதனால் பிறரை ஏளனம் செய்வது நின்றுவிடும். மற்றவரைக் கெடுக்க வேண்டும் எனும் எண்ணம் வந்தால் அதே நிலை எனக்கு நேர்ந்தால்? என எண்ணிப் பார்க்கில் அந்த சிந்தனையாவது துரோகத்தைக் கைவிடச் செய்யும். ஒருவர் உன்னை நாடி வரும்போது கோபமாக இருப்பினும் படபடவெனப் பேசாதே. வந்தவரை இனிய முறையில் வரவேற்றுக் குசலம் விசாரி. அதன் பிறகு படபடப்புடன் பேசுவதற்கு அவசியமே இல்லை என்பதை உணர்ந்து நீயே அதை நினைத்து வெட்கப்படுவாய். நீ ஒரு செயல் செய்யும்போது அதன் விளைவு கெட்டதாகுமோ என்ற பயம் ஏற்பட்டால் அதற்குக் காரணம் நீ செயலாற்றும்போது மெத்தனமாக அலட்சியமாக இருப்பதே என்று புரியும். எனவே எச்சரிக்கையுடன் முழு மனதோடு ஈடுபடு.

மனமே! கடந்துபோன விஷயங்களைப் பற்றி நினைப்பது வீண் சிரமம். கடந்தது கடந்ததே. நடந்து கொண்டிருப்பதைப் பற்றியும் நினைப்பதில் லாபமில்லை. அது நடந்து கொண்டுதானே இருக்கிறது. ஆகவே அது தானே மறையப் போகிறது. நடக்கப் போகும் விஷயங்களைப் பற்றியும் அதிகம் சிந்திக்காதே. வரப்போவது யாதென்று தெரியாது. ஆகவே அதுவும் வீண். ப்ராரப்தம் அஃதை எப்படி அமைக்க உள்ளதோ நாம் அறியோம். நல்லவரோ, கெட்டவரோ-மற்றவர் செய்வனவெல்லாம் நாமும் செய்ய வேண்டுமென்று அனாவசியமாக ஆசைப்படாதே. உன்னுடைய நிலைமைக்கேற்றவாறு உன் பணிகளை அமைத்துக் கொள். எவரிடத்திலும் அதிகமான விருப்பத்தையோ, வெறுப்பையோ வளர விடாதே. விருப்பு வெறுப்பு கொள்பவனும் விரும்பப் பெறுவதும் வெறுக்கப் பெறுவதும் - இவை அனைத்தும் முடிவில் பிடி சாம்பல்தானே! அதற்கு இத்தனை ஆர்ப்பாட்டம் ஏன்?

மனமே! பாபச் செயல்களால் ஏற்படும் பலன்களை உனக்கு ஏற்பட்டுள்ள ஜனனம், மரணம் என்கிற ஸம்ஸாரப் பிணிகளைக் கொண்டு உன்னால் ஊகித்துக் கொள்ள இயலும். இந்த கர்மவினை உன்னை மீண்டும் தொடர்ந்து துன்புறுத்தாமல் இருக்க, அதன் மூலம் பந்தங்கள் விலக, ஒரே சாதனமாக விளங்கும் ஆத்ம ஞானத்தை அடையப் பெறுவாய். ஏற்றத் தாழ்வு எண்ணங்களை எல்லாவற்றிலும் ஸமநோக்குடன் இருப்பதன் மூலம், அகற்றிவிடு. நன்மை பயக்காத ஒரே காரணத்தால் மற்றவரைப் பற்றி அவதூறாகப் பேசாதே. பிறர் உன்னை நிந்திக்கும்போது ஏற்படும் துக்கம் ‘நான் அந்த நிந்தனைக்கு ஏற்றவன்’ என்று நினைத்தால் எளிதில் அகன்றுவிடும். பிறர் நம்மைத் துன்புறுத்துகையில் பரிவுடன் அதைப் பொறுத்துக் கொள். அதாவது பிறர் துன்புறுத்தினால் அந்த அளவில் ‘என் முன்வினை தீர்ந்தது’ என்ற திருப்தியுடன் ஸகித்துக் கொள்.

பொத்தல்கள் நிறைந்த கூடையில் கொட்டிய ஜலம் போன்று இந்த உடலுக்குள் நுழைந்த உயிர் உடலைவிட்டுப் பல துவாரங்கள் வழியே வெளியேறிக் கொண்டிருக்கிறது. ஒரு பரத்தை செல்வத்தை இழந்து நிற்கும் காமுகனை விட்டு விலகுவது போல இந்த்ரிய சக்திகள் அனைத்தும் நம்மிடம் சொல்லிக் கொள்ளாமல் நம்மை விட்டு விலகி விடுகின்றன. காட்டுத்தீ பற்றி எரியும்போது தன்னை வளர்த்துத் தனக்கு அடைக்கலம் அளித்த காடு எரிகிறதே என்ற எண்ணம் சிறிதளவும் இன்றி உயிர் காக்க ஓடுகிற மான் கூட்டம் போல் நம் அறிவும் நம்மிடமிருந்து அகன்று விடுகிறது. இவை அனைத்தையும் கருத்தில் இருத்தி வேகமாக ஆத்மானுபவ மார்க்கத்தைக் கடைபிடி. எளிதில் கிடைத்தற்கரிய இந்த மானிடப் பிறவியை வீணடித்துவிடாதே.

இதன் பொருள்:
வேதாந்தமென்னும் பாற்கடலைக் கடைந்து ஆத்மஞானம் என்னும் அம்ருதத்தையும் முக்தி என்னும் லக்ஷ்மியையும் நீ அடைவாயாக. ஆனால் கடலைக் கடையும்போது துணைப் பொருட்களாக தைர்யம் என்னும் ஐராவதம், சாந்தி என்கிற காமதேனு, புலனடக்கமாகிய கல்பகவ்ருக்ஷங்கள், மைத்ரீ, கருணை முதலான அப்ஸரஸ் ஸ்திரீகள், விவேகம் என்கிற உச்சைஸ்வர குதிரை, ஸந்தோஷம் என்கிற சிந்தாமணி, வைராக்யம் என்னும் விலவு ஆகியவை தோன்றும்.

ஸ்ரீ சங்கரர் மாண்டூக்ய காரிகையின் பாஷ்ய உரையில் முடிவில் பரமகுரவான ஸ்ரீ கௌடபாதருக்குத் தனது வந்தனஙளைத் தெரிவிக்கும் ஸ்லோகத்தில்,

இதன் பொருள்:
தமது பரமகுருவான கௌடபாதர், தம்முடைய ப்ரஜ்ஞா என்னும் மத்தினால் வேதம் என்கிற பாற்கடலைக் கடைந்து, கோரமான ஸம்ஸாரத்தில் சிக்கித் தவிக்கும் ஜீவராசிகளிடம் மஹத்தான கருணை கொண்டு அமரர்களும் அடைய முடியாத ‘அத்வைதம்’ என்கிற அமுதத்தை எடுத்தருளியுள்ளார். அப்படிப்பட்ட பரம குருவிற்கு எம் வந்தனங்கள் என்று கூறுகிறார்.
ஸ்ரீதக்ஷிணாமூர்த்தியின் அருளாலும், வேதங்கள், எம் குருசரணர்கள் ஆகியோருடைய க்ருபையாலும் துர்வாஸனைகளை விலக்க மாற்றுபசாரங்களை விளக்குகிற இந்த பத்து ஸ்லோகங்கள் எம்மால் இயற்றப்பட்டுள்ளன.

Thursday 27 March 2014

கலியுகத்தில் நற்கதிக்கு வழி --- ஜகத்குரு ஸ்ரீமத் அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுபதேசம்

கலியுகத்தில் நற்கதிக்கு வழி:

ஜகத்குரு ஸ்ரீமத் அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுபதேசம்

ஜீவன் மாயையினால் மோகம் அடைந்து கர்மாக்களைச் செய்து ஜன்மத்திற்குப் பின் ஜன்மமாகப் பெற்றுக் கொண்டே இருக்கிறான்.
இதிலிருந்து விடுபட வேண்டுமானால் அவனுக்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. அது “தன் உண்மை ஸ்வரூபத்தை அறிந்து கொள்வதே” ஆகும்.
அதை அறிந்து கொள்ளும் மார்க்கம் எது? வேதங்களில் கூறப்படும் தர்மங்களை அனுஷ்டிப்பது. தர்மங்களில் அநேக விதமுண்டு.
(1) உடலால் செய்யப்படுபவை.
(2) வாக்கால் செய்யப்படுபவை.
(3) மனத்தால் செய்யப்படுபவை.

இவை தவிர ஒவ்வொரு யுகத்திற்கும் சிறந்த தர்மங்கள் எவை என்று கூட நம் முன்னோர்கள் தெரிவித்துள்ளார்கள்.

க்ருத யுகத்தில் த்யானம்
த்ரேதா யுகத்தில் யாகம் செய்தல்
த்வாபர யுகத்தில் பகவத் அர்ச்சனம்
கலி யுகத்தில் நாம ஜபம்.

இதிலிருந்து நாம் கலியுகத்தில் த்யானமோ, யாகமோ, அர்ச்சனமோ செய்தால் ‘அதர்மம்’ என்று முடிவு கட்டிவிடக் கூடாது. கலியுகத்தில் இவற்றைச் செய்யப் போதிய மனப்பக்குவமோ, ஈடுபாடோ, நேரமோ இல்லாது போக வாய்ப்புண்டு என்பதால்தான் மிக எளிதான நாம ஜபம் விதிக்கப்பட்டுள்ளது.
மாறாகக் கலியுகத்தில் த்யானமோ, யாகமோ, பகவத் அர்ச்சனமோ செய்வது மிக மிக விசேஷமானது; உத்தமமானது.

வேத அத்யயனம் ஆனவன்தான் யக்ஞங்களைச் செய்யத் தகுதியுடையவன் ஆகிறான். தகுதி உடையவர்கள் வேத அத்யயனத்தைத் தவறாது செய்ய வேண்டும்.

ஒரு குரு மூலமாகத்தான் வேத அத்யயனம் செய்யப்பட வேண்டும். தகுந்த கனபாடிகள் கிடைப்பது சிரமமாக இருந்தால் முதலில் இரு முறைகள் அவரிடம் ஸந்தைக் கற்றுக் கொண்டு விட்டால் கூடப் போதும். அப்படியும் சரிவர வார்த்தைகளை விளங்கிக் கொள்ள முடியாதவர்கள் ரிகார்டர் போன்ற கருவிகளைப் பயன்படுத்தி குருவிடம் இரு முறை கற்ற வேதத்தை நன்கு பயிற்சி செய்வதில் தவறில்லை.

இவ்வாறு கற்ற வேதத்தின் பொருளை நன்கு அறிந்து, பிறகு ஏதாவது வைதீகமாகச் சொல்லப்பட்ட கர்மாக்களைச் செய்தால் அதற்கு விசேஷமான பலனுண்டு.

வேத அத்யயனம் ஆகாதவர்கள் யக்ஞம் செய்பவர்களுக்கு உதவி செய்யலாம். யக்ஞத்தை ஸ்ரத்தையுடன் உட்கார்ந்து பார்க்கலாம். முடிந்த அளவு பண உதவி செய்யலாம்.

அடுத்து பகவானை அர்ச்சனை செய்யும் விதங்கள் பல உள்ளன. க்ரமமாக ருத்ரம் போன்ற மந்த்ரங்களைச் சொல்லி அபிஷேகம் செய்யலாம். முடியாவிட்டால் ‘ஸத்யோ ஜாதம்’ என்று தொடங்கும் மந்திரங்களை மட்டுமாவது சொல்லி அபிஷேகம் செய்யலாம். அதுவும் முடியாவிட்டால் ‘நம:சிவய’ என்று கூறி புரோக்ஷணம் செய்து நான்கு புஷ்பங்களைப் போட்டால் அஃதே அர்ச்சனை ஆகி விடும்.

சரி, இதுவும் கஷ்டம் என்றால் சிவ, சிவ அல்லது ஹரி ஹரி என பகவானின் திருநாமத்தை மனமுருக நினைத்தாலே போதும். அதுவே, த்யான, யாக, அர்ச்சனைப் பலனைத் தந்து விடும். ஆனால் ஒரு விஷயம்: த்யானமோ, யாகமோ, அர்ச்சனை செய்யச் சக்தியும் தகுதியும் உள்ளவர்கள் அவற்றைப் புறக்கணிக்கக் கூடாது.

த்யானம் செய்வதற்குச் சில தகுதிகள் தேவை. கடவுளின் மதிப்பிட முடியாத விசேஷ அந்தஸ்தை ஒருவன் பரிபூரணமாகப் புரிந்து கொண்டு, அவரை அடைய வேண்டும் என்னும் எண்ணத்தைத் தீவிரமாக்கிக் கொள்ள வேண்டும். இதனால் அவனுக்கு இதர விஷயங்களின் மேல் இருக்கும் ஆசை விலகி விடும். மனம் தன் வசப்படும். வைராக்யம் ஏற்படும். த்யானம் கை கூடும்.

த்யானத்திற்காக அமர்ந்திருக்கும் ஒருவன் தன் எதிரிலே மனத்திற்குப் பிடித்த பரமேச்வரனுடைய சித்திரம் ஒன்றை வைத்துக்கொண்டு இரண்டு மூன்று நிமிடங்கள் அப்படியே பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்.

இந்த உலகங்களைப் பற்றிய விஷயங்களை சற்றே மறந்தால் நமக்குள்ளே சித்திரத்தின் பிரதிபிம்பம் தெரியும்.

இரண்டு மூன்று நிமிடங்கள் கழிந்த பிறகு அந்த சித்திரம் உள்ளேயே இருக்கிறது. உள்ளே மாமிசம் முதலானவையெல்லாம் இல்லை. பகவான் ஹ்ருதயத்தில் இருக்கிறான் என்ற பாவம் ஏற்படும்.
பகவான் ஹ்ருதயத்தில் நாபிக்கு மேல் தாமரையில் வீற்றிருக்கிறான் என்று சிந்தனை செய்தால் அப்படியே சிறிது நேரம் நிற்கும்.

பிறகு மனம் உடனே சஞ்சலமாகிவிடலாம். ஆனால் கண்ணை மூடிக் கொள்ளும் காலத்தில் கண்ணும் அந்தர்முகமாகிவிட்டது என சிந்தனை பண்ணினால் ஒரு பிரகாசம் தோன்றும். இவ்வாறு அப்யாஸம் செய்ய செய்ய மனம் நிஷ்கலமாகி விடும்.

இறைவனை உபாஸனை செய்தால் அவன் என்றுமே நம்மை மோசம் செய்யமாட்டான். அந்த மனோபாவத்தை நாம் என்றுமே வைத்திருக்க வேண்டும்.
இந்தக் காலத்தில் புதிது புதிதாக தெய்வங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இவையெல்லாம் நமக்கு வேண்டாம்.

எந்த தெய்வங்கள் நம் பரம்பரையால் வழிபடப்பட்டு வருகின்றனவோ, எந்த தெய்வங்கள் சாஸ்திரங்களுக்கு உடன்பாடாய் இருக்கின்றனவோ மேலும் எந்த தெய்வங்களுக்கு பூஜா விதானம் போன்றவை தரப்பட்டிருக்கின்றனவோ அந்த தெய்வங்களை மட்டும் நாம் ஆராதனை செய்து வருவது மூலமும் மோக்ஷ சாதனையில் முன்னேறலாம்.

நாம் நம் தர்ம சாஸ்திரங்கள் கூறுவதைக் கடைப்பிடிக்க வேண்டும்.

உதாரணமாக, நம் தாய், தந்தையை அவர்களது முதிய வயதில் போற்றிப் பாதுகாக்க வேண்டும். அவர்கள் மனமுவந்து செய்யும் ஆசீர்வாதம் நிச்சயமான பலனைத் தரும்.

மனம் தீவிரமாக இருக்கும் ஒருவன் “மற்றொருவன் க்ஷேமமாக இருக்க வேண்டும்” என ஸங்கல்பம் செய்தால் அஃது ஆசீர்வாதம் ஆகி விடும்.

ஆகவே நம்மால் த்யானம் செய்ய முடியாவிட்டால் பகவத் ஆராதனைகளைச் செய்ய வேண்டும். அதுவும் செய்யாவிட்டால் பகவானுடைய கட்டளைகளின்படி வர்ணாச்ரம தர்மங்களையாவது கடைப்பிடிக்க வேண்டும்.

Monday 24 March 2014

தர்மமே துணையாகும்

தர்மமே துணையாகும்

அந்திய காலத்தில் நம் கூட வருவது எது? பணம் முதலியவை வீட்டிலேயே தங்கி விடுகின்றன. ஸ்நேஹிதர்களும் பந்துக்களும் மயானம் மட்டும் வந்து திரும்பி விடுகிறார்கள். அதற்கப்பாலோ? இவன் செய்த புண்ணிய பாபங்கள் மாத்திரம் இவனைப் பற்றிக் கொண்டு பின் தொடருகின்றன.

அர்தாம் க்ருஹே நிவர்தந்தே ச்மசானே மித்ரபாந்தவா: |
ஸுக்ருதம் துஷ்க்ருதம் சைவ கச்சந்தமநுகச்சதி ||

ஆதலால் புண்ணிய பாபங்களையறிந்து புண்ணியத்தை செய்ய வேண்டும், பாபத்தை விலக்க வேண்டும். நாம் நல்லதையே செய்து கொண்டிருந்தால் நாம் நன்மையடைகிறோமென்பது மாத்திரமல்ல, நம்மைப் பின்பற்றி சிலரேனும் நன்மை பெறுவார்கள். கெட்டவர்களும் கால அளவில் நன்மையான வழிக்குத் திரும்புவார்கள். ஜனங்களுக்கு உலக ஸுகங்களைப் பற்றியும் ஸுக ஸாதனங்களைப் பற்றியும் உபதேசிப்பதற்கு இதர தேசத்தார் பலர் இருக்கிறார்கள். நம் தேசத்திலும் அநேகர் இருக்கிறார்கள். அவ்வுபதேசங்களெல்லாம் ஆசையைப் பெருக்கி மனதுக்கு கலக்கத்தை உண்டு பண்ணுவதற்குத்தான் பிரயோஜனம். ஆசையைப் பெருக்கிக் கொண்டு போனால் உலகத்திலுள்ள சாமான்கள் முழுவதும் கிடைத்தாலும் போதாது. மேன்மேலும் அதிகம் வேண்டும் என்றே தோன்றும். அது மிகவும் கஷ்டம். இவ்வளவு போதும் என்று ஒரு தீர்மானம் நாமே செய்து கொள்ள வேண்டும். நாம் இங்கிருந்து புறப்படும் போது கூட வராத பதார்த்தங்களுக்காக இவ்வளவுதான் பாடுபடுகிறதென்று ஒரு வியவஸ்தை வேண்டாமா? நிரதிசயமாய் ஆத்ம ஸுகம் ஒன்றிருக்க அதைப் பெற நாம் பிரயத்தினம் செய்ய வேண்டாமா? நம் புத்தி அதில் கொஞ்சமேனும் செல்லுகிறதா? சாஸ்த்ரத்தை நம்பாதவர்களுக்கும், நம்பி அனுஷ்டிக்காதவர்களுக்கும், அவ்விஷயமாகச் சொல்லித் தருவது எப்படி? ஆகையால் சாஸ்திரத்தில் நம்பிக்கையுள்ள சிலராவது தர்மானுஷ்டானத்தை நழுவ விடாமல் நன்கு பரிபாலித்து வந்தால், அவர்களுக்கும் க்ஷேமமுண்டு. அவர்களைச் சேர்ந்தவர்களுக்கும் க்ஷேமமுண்டு. லோகத்திற்கே க்ஷேமமுண்டு. அவ்வித தர்மாசார சீலர்கள் ஜாஸ்தியாக ஜாஸ்தியாக ஸகல ஜனங்களுக்கும் கஷ்ட நிவாரணம் ஏற்படும். இவ்விதம் தங்கள் தங்கள் ஜாதி குலாசாரங்களைப் பரிபாலித்துக் கொண்டு தங்கள் தங்கள் ஸ்வதர்மங்களை அனுஷ்டித்து வருவதே குரு ஸேவையாகும். இதுவே அவருடைய ப்ரீதிக்கு ஹேதுவாகும். குரு ப்ரீதியடைந்தால் ஸகலவிதமான அபீஷ்ட ஸித்தியும் ஏற்படும். ஸத்குருப் பிரஸாதத்தால் எல்லாருக்கும் ஆஸ்திக்ய புத்தி துருடமாக ஏற்படவேண்டுமேன்று பிரார்த்திக்கிறோம்.

படிப்பும் பணமும் எல்லாருக்கும் ஞானம் வேண்டுமென்கிற எண்ணமும் இருக்கிறது. ஸுகம் வேண்டுமென்கிற எண்ணமும் இருக்கிறது. ஆனால் ஞானம் என்றால் என்ன? ஸுகம் என்றால் என்ன? என்று யாரும் விசாரிப்பது கிடையாது. ஒரு சின்ன ஸம்பந்தத்தைப் பெரியோர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

வித்யா தததி வினயம் விநயம் விநயாத்யாதி பாத்ரதாம் |
பாத்ரத்வாத்பமாப்னோதி தனாத் தர்ம தத: ஸுகம் ||

மோக்ஷத்தையாவது அதற்கு ஸாதகமான ஆத்மக்ஞானத்தையாவது இங்கே சொல்லவில்லை. ஸாமான்யமான வித்யையை குறித்தே சொல்கிறார். "வித்யை கிரமப்படி அப்பியஸிக்கப்பட்டால் வணக்கமேற்படும். வணக்கமிருந்தால் நல்ல யோக்கியதையேற்படும். யோக்கியதையுள்ளவர்களை ஜனங்கள் வெகுவாக ஆதரிப்பதால் பணம் கிடைக்கும். பணத்தைச் சரியானபடி உபயோகித்தால் தர்மம் கிடைக்கும். தர்மம் ஸித்தித்தால் ஸுகம் ஏற்படும்" என்று சொல்கிறார். இந்த ஸ்லோகத்திலிருந்து நாம் முக்கியமாய் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் இரண்டு. அதாவது, வித்யை சரியாக இருந்தால் விநயம் இருக்குமென்பது, தர்மமே ஸுகஸாதனம் என்பதும் இதிலிருந்து விநயத்தையேற்படுத்தாத படிப்புக்கு வித்யையென்று பெயர் பொருந்தாதென்பதும் நன்றாகத் தெரிகிறது. அநேக விதமான இக்காலத்திய வாசிப்பே வித்யை என்று சொல்லிக் கொண்டும் அவ்வாசிப்பையேற்படுத்திவிடும் ஸ்தலங்களுக்கு வித்யாசாலைகளென்றும் வியவஹாரம் இருந்தபோதிலும், அவற்றில் வாசித்து வெளியேறினவர்கள் விநய ஸம்பன்னர்களாக இருக்கிறார்களா என்று கவனித்துப் பார்த்தால், அந்த வியவஹாரம் எவ்வளவு தூரம் நியாயம் என்பது வெளிப்படும். வித்யா விநய ஸம்பத்து மூலமாகக் கிடைத்த தனம்தான் தர்மத்திற்கு உபயோகப்படுமென்பதும் இந்த சுலோகத்திலேயே தெரிகிறது. தகப்பனாருக்கு ஸம்ஸ்கிருதத்தில் பிதா என்று பெயர். பையனைப் பரிபாலனம் செய்கிறபடியால் அந்தப் பெயர் ஏற்பட்டது. இப்பொழுதுள்ள அநேகத் தகப்பனார்கள் தங்கள் மக்களைப் பரிபாலிக்கிறார்களாவென்று கவனித்துப் பார்க்க வேண்டும். எது குழந்தைகளுக்கு வாஸ்தவமாக அனுகூலமோ அதைச் செய்து கொடுப்பவர்களல்லவா அவர்களைப் பரிபாலிக்கிறார்களென்று சொல்லலாம்? அவர்கள் ஆசாரத்தைக் கெடுத்து ஆஹாரத்தைக் கெடுத்து எப்படியாவது பணம் ஸம்பாதித்தால் போதுமென்ற ஒரே நோக்கத்துடன் பணத்திலுள்ள ஆசையால் பையன்களைக் கெடுக்கிற தகப்பனார்களைப் பிதாக்கள் என்று எப்படிச் சொல்ல முடியும்? வாஸ்தவத்தில் இந்தத் தகப்பனார்களை உதாஸீனம் செய்வதும் வெறுப்பதும் ஸஹஜமாகி விட்டது. அவன் எப்படியிருந்தாலும் இருக்கட்டும். எங்கேயாவது பணம் ஸம்பாதித்தால் போதும் என்று நினைக்கின்ற தகப்பனார்களும் இருக்கிறார்கள். பணத்தினால் ஸாக்ஷாத்தாக ஸுகம் உண்டாகிறதும் கிடையாது. ஒரு மனுஷ்யனுக்கு வேண்டிய மட்டில் பணமிருந்தாலும், அந்தப் பணத்தைக் கொண்டு ஸாமக்கிரியைகள் வாங்கி சமையல் செய்து சாப்பிட்டாலொழிய பசி நிவிருத்தியாகாது. அதே மாதிரி தனத்தால் ஸாக்ஷாத்தாக ஸுகமடைய முடியாது. தனத்தால் ஸுகமடைய தர்மம் மார்க்கமாக இருக்கிறது. தர்மமென்றால் என்ன ஸுகமென்றால் என்ன என்பதை முதலில் நன்கு விசாரித்துத் தெரிந்து கொள்ள வேண்டும். தர்மத்தையும் வாஸ்தவமான ஸுகத்தையும் தெரிந்து கொள்வதற்கு சாஸ்த்ர பரிச்சயம் அவசியம் செய்ய வேண்டும். அல்லது சாஸ்திரமறிந்த சிஷ்டர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஜகத்தின் நியமனம்:

தர்மம்தான் உலகம் முழுமையினுடையவும் இருப்புக்குக் காரணமாயிருக்கிறது:

தர்மோ விச்வஸ்ய ஜகத: ப்ரதிஷ்டா |

என்று சொல்லப்படுவதால் தர்மம் என்பது பகவானுடைய ஸ்வரூபமேயாகிறது. அதை நாம் உபயோகப்படுத்தி ஒரு பலனையடைய வேண்டுமென்று நினைத்தால் அவருடைய ஆக்ஞா ரூபமான சுருதி ஸ்மிருதி முதலிய சாஸ்திரங்களில் சொல்லியபடி நடந்தால்தான் ஸாத்யமாகும். நித்தியமாக ஒரு நியமம் இல்லாத பக்ஷத்தில் ஜகத்தில் எந்தக் கார்யமும் ஸாத்யமில்லை. இவ்வுலகில் கண்ணால் பார்க்கின்ற நுட்பமான பொருள்களில் மிகவும் சிறியது தூசி. அந்த மண் தூசிகூட ஆகாயத்தில் தங்காமல் கொஞ்சம் கொஞ்சமாக கீழே வந்து விழுகிறது. மழையடிக்கும்போது மண்தூசி தங்குகிறதா? ஒரு மண்தூசிகூட தங்க முடியாத ஆகாசத்தில் நிராதாரமாக இந்த கனமான பூமி எவ்விதம் தங்கி நிற்கிறது? பூமியை ஆதிசேஷனும், அஷ்டதிக்கு யானைகளும் தாங்கினும், அவையும் சேர்ந்து யாவும் ஆகாசத்திலல்லவா நிற்கின்றன? நாம் காண்கின்ற இந்த பூமி விசாலமான ஸமுத்திரத்தின் மீது மிதக்கின்றது. தண்ணீரில் நாம் ஒரு சிறு கல்லைப் போட்டாலும் உடனேயே அடியில் போய் விடுகிறது, மேலே மிதப்பதில்லை. இவ்வளவு காடு மலைகளுடன் அதிக கனமான பூமியை ஸமுத்திர ஜலத்தின் மேல் அமைத்து அது கீழே மூழ்கிப் போகாமல் ஆகாயத்தில் நிறுத்துவது என்றால் இதை ஸ்ருஷ்டித்த பகவானின் பெருமை எப்படிப்பட்டது? அவருடைய கட்டுப்பாடாயிருக்கிற தர்மத்திற்கு கட்டுப்பட்டே ஜகத்தில் ஸகல கார்யங்களும் நடக்கின்றன. நாம் உட்கார்ந்திருக்கிற இந்த பூமி கீழே போகாமல் பாதுகாப்பதும், அந்தரிக்ஷம் சந்திர ஸூர்ய நக்ஷத்ராதிகளுடன் விளங்கிக் கொண்டு நமக்கு நன்மை செய்து வருவதும், ஆகாசம், திக்குகள், பூமி, ஸமுத்திரம் முதலானவை தரிக்கப்படுவதும் மஹாத்மாவான வாஸுதேவருடையை அபாரமான வீர்யத்தினால்தான்

த்யௌ: ச சந்த்ரார்க்கநக்ஷத்ரா கம் திஷோபூர்மஹோததி:|
வாஸுதேவஸ்ய வீர்யேண வித்ருதாநி மஹாத்மன: ||
ஸூர்யோப்ராம்யதி நித்யமேவ ககனே தஸ்மை நம:கர்மணே ||

“எதனால் ஸூர்யன் ஆகாச மண்டலத்தில் தினந்தோறும் ஸஞ்சரித்து வருகிறாரோ, அந்த கர்மத்திற்கு நமஸ்காரம்” என்று சொன்னவிடத்திலும் ஜடமான கர்மத்திற்கல்லாமல் கர்மாத்யக்ஷனாகிய ஈச்வரனுக்கே பெருமை கொடுத்ததாகும். நாம் யாவரும் ஜீவித்திருப்பது ஸூர்ய பிரகாசத்தினால்தான். ஸூர்யப் பிரகாசமில்லாமல் போனால் நாம் இருட்டில் இருக்க வேண்டியிருக்கும். உஷ்ணமில்லையானால் நாமே இருக்க முடியாது. ஸகல புல் பூண்டுகளும் இருக்க முடியாது. அவர் ஒரு நியமத்திற்குக் கட்டுப்படாமலிருந்தால் பகல் ராத்திரி என்ற விவஸ்தையாவது, வஸந்தம் முதலான ருதுக்களாவது இருக்க நியாயமில்லை. அவரும் பகவானுடைய நியமனத்திற்குக் கட்டுப்பட்டு நடக்கிறார் என்பதை “இவரிடத்தினின்றும் பயந்துதான் வாயு வீசுகிறார், ஸூர்யன் உதயமாகிறார்” என்ற உபநிஷத் வாக்கியம் கூறுகிறது. இவற்றையெல்லாம் சிந்திக்கும் பொழுது இந்த பிரஹ்மாண்டத்திற்கு ஆதார வஸ்துவாக விளங்குவோனும் ஜகத்திலுள்ள ஸகல வஸ்துக்களையும் தன் நியமனத்திற்குள்படுத்தி நடத்துவோனும் ஸகல ஜீவர்களாலும் செய்யப்படுகிற கர்மாக்களுக்குத் தக்கபடி பலனைத் தவறாமல் கொடுப்போனும் ஆகிய ஜகதீசுவரன் ஒருவன் மேலே இருக்கிறான் என்று தெரிகிறது. ஸகல ஜகத்தையும் அவரே நியமனம் செய்வதால் அவருடைய சக்திக்காவது ஞானத்திற்காவது எல்லையில்லை. ஜகத்தில் நடக்கும் ஸம்பவங்கள் சில நம்முடைய சிற்றறிவுக்கு நியாயமில்லை போலத் தோன்றலாம். வாஸ்தவத்தில் அவையும் ஒரு நியமப்படி நியாயமாக ஏற்பட்டவைகளாகவே இருக்கும்.

வெயில் காலத்தில் ஒரு நாஸ்திகன் காட்டின் வழியே ஸஞ்சரித்து வந்தான். களைப்பின் மிகுதியால் ஓர் ஆலமரத்தின் நிழலில் படுத்துக் கொண்டான். மரம் ஆகாயத்தையளாவியது. பூஷணிக்கொடி கூட எவ்வளவு பெரிதான காய் காய்க்கிறது. இந்த விசாலமான ஆல விருக்ஷத்திற்கு இன்னம் எவ்வளவு பெரிய கனியை அமைத்திருக்கலாம். கடவுள் ஒருவர் இருந்து அவருக்கு புத்தியுமிருந்தால், சிறிய பூஷணிக் கொடிக்கு அவ்வளவு பெரிய காயை அமைத்துவிட்டு, இப்பெரிதான ஆலமரத்திற்கு இவ்வளவு சிறிய கனியைப் படைத்திருப்பாரா? என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டான். சிறிது நேரத்திற்கெல்லாம் இவன் நித்திரை செய்யும் பொழுது இவன் மீது பல ஆலங்கனிகள் வீழ்ந்தன. அப்பொழுது அவனுடைய அப்பிப்ராயம் வேறு விதமாக மாறியது. “ஆகா! இவ்வளவு பெரிதான ஆலமரத்திற்குக் கடவுள் பெரிதான கனியைப் படைத்திருப்பாரானால் இப்பொழுது என் மீது விழுந்த கனிகளால் என் தலை முதலியவை உடைந்து நசித்திருப்பேன். என்னைப் போல் உள்ளவர்கள் நிழலுக்காக இங்கே வரக்கூடுமென்பதை அறிந்தே கடவுள் இதற்கு சிறியதாக கனிகளைப் படைத்தார் போலும்” என்று சொல்லிக் கொண்டான். இது போலவே நம்முடைய புத்திக்கு எட்டாத விஷயங்கள் பல இருக்கின்றன. ஆகையால் ஈச்வர் நியமன ரூபமான தர்மத்தின் ஸ்வரூபத்தை நம் புத்தியை வைத்துக் கண்டுபிடிக்கவோ தீர்மானம் செய்யவோ முடியாது. சாஸ்திரங்கள் மூலமாகத்தான் அறியத்தக்கது. நமக்கு இன்ன காரியம் செய்தால் நல்லது இன்னது செய்தால் கெடுதல், என்று நம் புத்தியால் மாத்திரம் அறிந்து கொள்ள முடியாது. அதற்காகவே சாஸ்திரங்கள் ஹிதாஹிதங்களைப் போதிப்பதற்காகப் பிரவிருத்திருக்கின்றன.

ஞான ஸாதனங்கள்:

மனிதர்களே ஞானத்திற்கு முக்கியாதிகாரிகளாக இருந்தாலும், எல்லா மனிதர்களும் ஞானத்தில் ருசி கொண்டு பிரவிருத்திப்பது கிடையாது. ஞான விஷயமான முயற்சி ஏற்பட வேண்டுமானால், அடிப்படையாக நான்கு ஸாதனங்கள் வேண்டும். இவற்றை ஸாதன சதுஷ்டயம் என்று சொல்வார்கள். அவற்றில் முதலாவது நித்யா நித்ய வஸ்து விவேகம் அதாவது ஆத்மா ஒன்றுதான் நித்யமாகவுள்ள வஸ்து என்றும், மற்றுள்ள யாவும் அநித்யமானவை என்றும் தெரிந்து கொள்ள வேண்டும். அவ்விதம் அறிவு ஏற்பட்டவுடன் அநித்யமாயிருக்கிற ஸகல பதார்த்தங்களிலும், போகங்களிலும் அதாவது இவ்வுலகத்தில் உள்ளதும் ஸ்வர்க்காதி பிரஹ்மலோக பர்யந்தமுள்ள ஸ்தானங்களில் கிடைக்கக் கூடியதுமான போக வஸ்துக்களிலும், நாயால் வாந்தியெடுக்கப்பட்ட அன்னத்தில் வெறுப்புண்டாவது போல, ஆசையற்றிருப்பது இஹாமுத்ரார்த்த பலபோக விராகம் என்ற இரண்டாவது ஸாதனம் ஏற்படும். அதன்பேரில் ஆறுவித நியமங்கள் கூடிய சமாதிஷட்க ஸம்பத்தி என்ற மூன்றாவது ஸாதனம் அவசியமாகும். நடந்த, நடக்கிற, நடக்கப் போகின்ற விஷயங்களைப் பற்றி நினைக்கிற மனோ வாஸனையை அடக்குவது சமம் எனப்படும். சக்ஷூராதி இந்திரியங்களை அவற்றின் விஷயங்களாகிய ரூபாதிகளில் செல்லாமல் தடை செய்வது தமமாகும். சீதோஷ்ணம், பசி, தாகம், ஸுக, துக்கம் முதலானவற்றை ஸஹித்துக் கொள்வது திதிக்ஷை. மனதின் ஒழிவே அல்லது ஸந்யாஸமே உபாதியாகும். குருவின் வாக்கியங்களிலும், வேத வாக்கியங்களிலும் இதுவே ஸத்யமென்று பக்தி கொள்வது சிரத்தையெனப்படும். மனது அமைதியாய் இருப்பது ஸமாதானம். இந்த ஆறும் சேர்ந்து மூன்றாவது ஸாதனமாகிற சமாதிஷட்க ஸம்பந்தியென்பார்கள். ஸம்ஸாரத்திலிருந்து விடுதலையடைகிறதாகிய மோக்ஷத்தை அடைய வேண்டுமென்கிற தீவிரமான விருப்பம் முமுக்ஷுத்வம் எனப்படும். அதுவே நான்காவது ஸாதனமாகும். இவை நான்கு ஸாதனங்களும் யாருக்கு இருக்கிறதோ அவர்தான் ஞானாங்கமான ஆத்ம விசாரத்தில் இறங்க அதிகாரியாவர். அவருக்கு ஆத்மவிசாரம் ஸபலமாகி ஞானமேற்பட முடியும்.

ஸாதனங்களை ஒரு ஜன்மாவில் அனுஷ்டித்தால் போதாது. அனேக ஜன்மாக்களில் ஸாதனங்களை அனுஷ்டித்தால் தான் பலன் கிடைக்கும். பகவத் கீதையில் பகவான் சொல்லும் போது

அநேகஜன்மஸம்ஸித்தஸ்ததோ யாதி பராம் கதிம் ||
பஹூனாம் ஜன்மனாமந்தே ஞானவான்மாம் ப்ரபத்யதே ||

என்று வெகு ஜன்மாக்கள் ஆக வேண்டுமென்பதை வற்புறுத்துகிறார். ஸாதனாப்யாஸமின்றி வெறும் வெகு ஜன்மாக்கள் மாத்திரம் ஸித்திக்குக் காரணமாயிருந்தால் நாம் இதுவரை எடுத்திருக்கும் ஜன்மாக்கள் கணக்கிலகப்படாததனால் நமக்கு முன்னமேயே ஸித்தி ஏற்பட்டிருக்க வேண்டும். அவ்விமேற்படாததால் ஜன்மாக்களின் வெறும் எண்ணிக்கை மாத்திரம் போதாதென்று தெரிகிறது. அப்பியாஸத்தோடு கூடிய வெகு ஜன்மாக்கள் ஏற்பட வேண்டும் என்று தெரிகிறது. அவ்விதம் நாம் ஸாதனாப்யாஸம் செய்யாததனாலேயே நாம் இன்னமும் ஜன்மாக்கள் எடுத்துக் கொண்டிருக்கிறோம். ஞானம் பெறவில்லை. இன்னும் கொஞ்சம் கவனித்துப் பார்த்தால் நமக்கு நல்ல கதி ஏற்படாமலிருக்க வேண்டுமென்று கூட நான் முயற்சியெடுத்துக் கொண்டிருக்கிறோமோ என்று நினைக்க இடமிருக்கிறது. பகவான் ஸ்ரீ ராமராகவும், ஸ்ரீ கிருஷ்ணராகவும் அவதாரம் எடுத்து அனுக்ரஹத்தினாலும், நிக்ரஹத்தினாலும், திருஷ்டியினாலும் ஸ்பர்சத்தினாலும் கணக்கில்லாத ஜனங்களைப் பரிசுத்தம் செய்து, ஸத்கதி கொடுத்திருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. நாமும் அந்த காலங்களில் ஜன்மம் எடுத்துத்தான் இருந்திருக்க வேண்டும். அப்படியிருந்தும் அந்த பகவந் மூர்த்திகளுக்குக் கட்டுப்படாமலே ஜாக்கிரதையாயிருந்திருக்கிறோமென்று தெரிகிறது. பகவானுடைய பாதாரவிந்தம் பட்ட தண்டகாரண்யத்தில் ஏதேனும் செடி, கொடியாயிருந்து அவர் காலின் தூசி பட்டிருந்தாலும் கிருதார்த்தர்களாக ஆகியிருப்போம். வெகு ஜாக்கிரதையாய் ஒதுங்கியே வாஸம் செய்திருக்கிறோம் என்று நினைக்க வேண்டியிருக்கிறது. ஆகையால் வெறும் வெகு ஜன்மாக்கள் பிரயோஜனமே இல்லை.
பகவத் ப்ரீதிக்கு ஸாதனமாயுள்ள பகவத் ஆராதனா ரூபமான கர்மாக்களை செய்வதிலேயே செலவழிக்கின்ற அநேக ஜன்மாக்கள் ஏற்பட வேண்டும். அப்படி பகவதாராதனாரூபமான கர்மாக்களைச் செய்வது மனுஷ்ய ஜன்மாவில்தான் ஸாத்தியமே தவிர இதர ஜன்மாக்களில் முடியாது. வேறு ஜன்மா எடுப்பது ஸுலபமாயிருக்கலாம். ஆனாலும் மறுபடியும் மனுஷ்ய ஜன்மா எடுப்பது மிகவும் துர்லபம்.
ஜன்மாவை வீணாக்கக் கூடாது

மனிதனாகவும், புருஷனாகவும் மாத்திரம் பிறந்து விட்டால் ஞானம் ஏற்பட்டுவிடாது. அதற்குத் தீவிரமான முயற்சி வேண்டும். ஞானம் ஏற்பட வேண்டுமானால் நன்கு விசாரணை செய்ய வேண்டும். விசாரணை செய்து அறிந்து கொண்ட விஷயத்தை ஸ்வானுபூதிக்கு விஷயமாக்க வேண்டும். இதையே ஞானாப்யாஸம் என்பார்கள். நான் யார்? இந்தப் பிறவி எனக்கு எப்படி வந்தது, இது இனி வராமலிருக்க வழி என்ன, என்ற விஷயத்தை ஆராய்வதே முக்கியமான விசாரணையாகும். கொஞ்சம் புத்தியுள்ளவர் யாவரும் இந்த விசாரணை செய்ய வேண்டியது அவசியம். ஆனால் பெரும்பாலோருக்கு இது தோன்றுவதே கிடையாது. பிறந்தது முதல் பதினாறு வயது வரை விளையாட்டில் பால்ய காலம் போய் விடுகிறது. பிறகு யௌவனத்தில் விஷய ஸுகத்திற்காக அங்குமிங்கும் அலைகிறார்கள். அதன் பிறகு இந்திரியங்களையும் தளரச் செய்கிற ஜரை வந்து விடுகிறது. பிறகு ஜன்மா முடிந்து விடுகிறது. ஆயுள் முழுவதும் கொஞ்சம்கூட ஞானாப்பியாஸத்திற்கு உபயோகப்படுத்தாமல் வீணாக காலத்தைக் கழிக்கிறார்கள். நாம் ஞானம் பெற்று முக்தியடைவதற்காகவே இம்மானிட ஜன்மாவையடைந்திருக்கிறோம் என்பதை மறந்து விடுகிறார்கள். இந்திரிய ஸுகமடைவதற்கு இந்த உயர்ந்த ஜன்மா வேண்டுமா? வாஸ்தவத்தில் கவனித்துப் பார்த்தால், நம்மைவிட மிருகாதிகளுக்கே இவ்விஷயத்தில் ஸௌகர்யம் ஜாஸ்தி என்று சொல்ல வேண்டும்.

ஸ்தால்யாம் வைடூர்யமய்யாம் பசதிதிலகலம் சாந்தனைரிந்த நௌதை:
ஸௌவர்ணைர்லாங்கலாக்ரேர்விலிகதி வரை தாமர்காலஸ்யஹேதோ: |
சிதவாகர்பூரகண்டான்வ்ருதிமிஹகுருதேகோத்ரவாணாம்ஸம்நதாத
ப்ராப்யேமாம்கர்மபூமிம் நபஜதிமனுஜோ யஸ்தபோ மந்தபாக்ய: ||
பர்த்ருஹரி என்று அழகாகச் சொல்கிறார். பிண்ணாக்கு வேக வைப்பதற்கு வைடூர்யத்தில் செய்த கிண்ணம் வேண்டுமா? சந்தனக்கட்டைகளைத்தான் எரியவிட வேண்டுமா? எருக்கச் செடி பயிரிடுவதற்காக தங்கமுனை வைத்த கலப்பை வேண்டுமா? கற்பூரத்தை வெட்டி வெட்டிக் கொள்ளுச் செடிக்கு வேலி கட்டுவதா? இவ்வுத்தமமான கர்ம பூமியையடைந்தும் எந்த மனிதன் தபஸ் செய்யவில்லையோ அவன் பாக்கியம் கெட்டவன் என்பதில் என்ன ஸந்தேஹம்? "இந்த கர்ம பூமி" என்று பர்த்ருஹரி சொல்லியிருப்பதை 'ஸகல கர்மாக்களையும் செய்ய அதிகாரமும் யோக்கியதையும் பெற்றிருக்கிற இந்த மானிட சரீரத்தைக் குறிப்பதாகவும் வைத்துக் கொள்ளலாம். வைதிக கர்மாக்கள் செய்தால் பலன் கொடுக்கக் கூடியதாய் புண்ணிய பூமியாயிருக்கிற இந்த தேசத்தைக் குறிப்பாகவும் வைத்துக் கொள்ளலாம். எப்படி இதர சரீரங்களெல்லாம் பெரும்பாலும் போக சரீரங்களாகவும் மனித சரீரம் மாத்திரம் கர்மாவுக்குரிய சரீரமாயுமிருப்பதாக முன் சொன்னோமோ அதே மாதிரி ஆஸேது ஹிமாசல மத்தியவர்த்தியாயிருக்கிற இந்த தேசத்தைத் தவிர மற்ற தேசங்களெல்லாம் பெரும்பாலும் போக பூமிகளாகவும், இந்த தேசம் மாத்திரம் கர்மாவுக்கு லாயக்கான தேசமாகவும் ஏற்பட்டிருக்கிறது.
இந்த தேசத்திலும் ஜன்மாவையடைந்து மனிதனாகவும் பிறந்து இவ்விசேஷ அனுகூலத்தை அடைந்திருக்கிற நாம் நம் ஆயுட்காலத்தை வீணாக்கினால் நமக்கு என்றுதான் ஸத்கதி கிடைக்கும்? இரண்டு ரூபாய் நஷ்டமாகிவிட்டால் மூன்று நாளாகிறது நமக்கு துக்கம் தீர. மிக மிகக் கிடைப்பதற்கரிதான மனித ஜன்மத்தைப் பெற்றும் ஞானம் பெறாமல் இதை நஷ்டமாக்கிக் கொண்டோமேயானால் இதற்காக நாம் என்ன பரிஹாரம் செய்து தீர்க்க முடியும்? தன் ஆயுஸ்ஸை சில நாட்கள் நீடிக்கும்படிச் செய்ய வேண்டுமென்று வைத்தியர்களுக்கு ஏராளமாகப் பணம் கொடுக்கத் தயாராக இருக்கிறோம். இப்பொழுது ஒரு வியாதியுமில்லாமல் ஸ்வஸ்தமாக இருக்கிற ஸமயத்தில் கணக்கில்லாமல் கண்டபடியெல்லாம் வீணாக்குகிறோம். இதனால்தான் கடோபநிஷத்தில் இந்த மானுஷ ஜன்மாவில் எவன் ஞானம் அடையவில்லையோ அவன் பெரிய நஷ்டமடைந்தவன் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

நம் கடமை:

சுகர் முதலியவர்கள் முக்தர்களாகிவிட்டார்களே, நான் மாத்திரம் இப்படியே இருக்கிறேனே என்றால் அவர்கள் பல ஜன்மாக்களில் ஞானாப்பியாஸம் செய்து முக்தி பெற்றார்கள். நாம் இன்னும் அது விஷயமான முயற்சிக்கே ஆரம்பிக்கவில்லை. முயற்சி செய்ய வேண்டுமென்ற எண்ணம் நமக்கு இன்னும் ஏற்படவில்லை. அவ்வெண்ணம் ஏற்பட வேண்டியதற்குத் தக்கபடி நம் மனதும் பரிசுத்தமாகவில்லை. சித்த சுத்திக்காக நாம் பகவதாராதன ரூபமான கர்மாக்களைச் செய்யவில்லை. ஆனால் அப்பெரியோர்களுடைய நிலை மாத்திரம் நமக்கு வந்துவிட வேண்டுமென்ற பேராசை இருக்கிறது. அதெப்படி ஸாத்தியப்படும்? ஒரு பள்ளிக்கூடத்தில் ஒரே வகுப்பில் இரண்டு மாணாக்கர்கள் படிக்கிறார்கள். ஒருவன் அதிகமான அக்கறையுடன் படிக்கிறான். மற்றொருவன் விளையாட்டு புத்தியுடன் இருந்து கொண்டு அவ்வளவு அக்கறையுடன் படிக்கிறதில்லை. இவ்விருவருக்கும் போஜன வஸதிகளோ படிக்க வேண்டிய ஸௌகரியங்களோ எல்லாம் ஒரே மாதிரி கிடைக்கின்றன. குருவின் உபதேசங்களும் ஒரே விதமாக இருக்கின்றன. இருந்தாலும் ஒரு வித்யார்த்தி பரீக்ஷையில் தேறுகிறான். மற்றொருவன் தேறுகிறதில்லை. இதற்குக் காரணம் இவர்களுடைய முயற்சியும் முயற்சியின்மையுமேயாகும். அதே மாதிரி சிலர் ஞானிகளாகி முக்தர்களாவதற்கும் மற்றவர்கள் அக்ஞானிகளாயிருந்து ஸம்ஸாரத்தில் உழன்று கொண்டிருப்பதற்கும் முயற்சியும் முயற்சியின்மையுமேயாகும். ஆகையால் யத்னம் அவசியம் செய்ய வேண்டும். அந்த யத்னமும் யாருக்காகச் செய்கிறோம்? நமக்கேற்பட்டு இருக்கிற கட்டை அவிழ்த்து நம்மை விடுவித்துக் கொள்ளவல்லவா இந்த முயற்சி? தான் ஒரு நிர்ப்பந்தமான கட்டில் அகப்பட்டுக் கொண்டு மற்றவர்களை ஸம்ரக்ஷிக்கிறேன் என்று சொல்வது கொஞ்சமேனும் பொருந்துமா? தான் நதியைத் தாண்டிப் போவதற்கு நீஞ்சத் தெரியாமலிருப்பவன் மற்றவர்களைத் தன் முதுகில் ஏற்றிக் கொண்டு எப்படித் தாண்டிப் போகச் செய்ய முடியும்? ஆனால் இக்காலத்தில் அநேகம் பேர் ஜன்ம விருத்தி விஷயத்தில் கொஞ்சமேனும் பிரயத்தினம் செய்திருக்க மாட்டார்கள். அப்பேர் பட்டவர்கள் தன்னையே வஞ்சித்துக் கொண்டவர்கள் என்று சாஸ்திரம் சொல்கிறது. தன்னையே தான் வஞ்சித்துக் கொள்ள வேண்டுமானால் அவர்களுடைய மௌட்டியம் எவ்வளவு ஜாஸ்தியாக இருக்க வேண்டுமென்று கவனிக்க வேண்டும். ஆகையால்தான் தன்னுடைய விடுதலையை உத்தேசித்துப் பிரயத்தினம் செய்யாதவனை மூட புத்தியுள்ளவன் என்று நமது ஆசார்யார் சொல்லியிருக்கிறார். துர்லபமான மனிதஜன்மாவை அடைந்து அதிலும் புருஷனாகப் பிறந்து வேதாந்த விஞ்ஞானமும் ஏற்பட்டுத் தன்னுடைய முக்திக்காக பிரவிருத்திக்காதவனை மூடபுத்தி உடையவன் என்று மாத்திரம் சொன்னால் போதாது. அவன் ஆத்மஹத்தி செய்தவன் என்றே சொல்ல வேண்டும்? அஸத் பதார்த்தங்களை கிரஹித்துக் கொண்டு, தன்னையே இல்லாமல் போலச் செய்து விடுகிறான் அல்லவா என்கிறார்கள் நமது ஆசார்யார்:

லப்த்வா கதஞ்சிந்நரஜன்ம துர்லபம்
தத்ராபி பும்ஸ்த்வம் ஸ்ருதிபாரதர்சனம்ர |
ய: ஸ்வாத்மமுக்தயே நயதேத்மூடதீ:
ஸ ஆத்ம ஹாஸ்வம் விநிஹந்த்யம்தத்கர்ஹாத் ||

அவன் வெறும் மூடன் என்பதில் என்ன ஆக்ஷேபணை? ஜகத்தில் மூடர்கள் அநேகர் இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விஷயத்தில் மூடர்களாயிருப்பார்கள். லோக வியவஹாரம் தெரியாமலிருக்கலாம். நான் இருக்கிறேனா இல்லையா என்றே ஸந்தேஹம் வந்து விட்டால், அவனை மூடன் என்று சொல்வதில் என்ன ஸந்தேஹம்? அதற்கும் மேலாக 'நான் இல்லை'யென்றே தீர்மானத்துடனிருப்பவனுக்கு மேல் மூடன் ஜகத்தில் இருக்க முடியாது. ஆகையால் தன்னைப் பற்றிய ஸந்தேஹமோ, தன்னைப்பற்றிய விபரீத புத்தியோ எவனுக்கு இருக்கிறதோ அவனைவிட மூடனாக யாரையும் சொல்ல முடியாது. இந்த ஸந்தேஹத்திற்கும், விபரீத புத்திக்கும் காரணம் தன் நிலையிலிருந்து நழுவினதுதான்.

அந்த நழுவுதலைத்தான் ‘பிரமாதம்’ என்று சொல்வோம். ஆகையால் தன் விஷயத்திலேயே நழுவினவனைப் பற்றி 'அவனுக்குமேல் மூடன் உண்டா' என்று ஆசார்யார் கேட்கிறார்கள்.

இத:கான்வஸ்திமூடாத்மா யஸ்து ஸ்வார்தே ப்ரமாத்யதி |
துர்லபம் மானுஷம் தேஹம் ப்ராப்ய தத்ராபி பௌருஷம் ||

ஆகையால் புத்திசாலியாயிருப்பவன் தன்னை அநாத்ம பந்தத்திலிருந்து விடுவித்துக் கொள்வதற்காக தீவிரமான பிரயத்தினம் செய்து கொள்ள வேண்டியது அவசியம். இப்பொழுது கிடைத்திருக்கிற மானிட ஜன்மாவையும், புருஷத் தன்மையையும் ஞானம் ஸம்பாதித்துக் கொள்ள வேண்டிய மற்ற ஸௌகர்யங்களையும் நாம் வீணாக்கிக் கொள்ளக்கூடாது. வெளியிலுள்ள அநாத்ம பதார்த்தங்களிலுள்ள ஆசையை ஒழிக்க வேண்டும். ஆத்ம ஞானமடைந்த ஒரு மஹானை சரணமாக அடைந்து அந்த ஸத்குரு மூலமாக உபதேசிக்கப்பட்ட விஷயத்தை நன்கு அதிலேயே மனதை நிறுத்தி ஸ்வரூப ஸாக்ஷாத்காரம் பெற்று முக்தனாக ஆக வேண்டும்.

இதுவே கர்மபூமி
மோக்ஷமடைவதற்கு மனுஷ்ய ஜன்மமே சிறந்த ஸாதனம். ஸ்வர்காதி ஸுகங்களை அடைவதற்கும் மனுஷ்ய ஜன்மமே சிறந்தது. இந்திரன் முதலான தேவர்களை உத்தேசித்து யாகம் செய்து ஸ்வர்க்கம் பெறலாம். அதையே நிஷ்காமமாகச் செய்து சித்த சுத்தி ஏற்பட்டு ஞானமடைந்து மோக்ஷம் பெறலாம். தேவர்களுக்கு அவ்விதமல்ல. இந்திரன் முதலிய தேவர்கள் யாகாதி கர்மம் செய்வதென்றால் தங்களுக்குக் கீழ்ப்பட்ட அக்கினி முதலான தேவர்களுக்கு ஹவிர்பாகம் கொடுப்பதா? தனக்கு மேற்பட்டவர்கள் விஷயத்தில் பக்தியோடு செய்யும் கர்மாதான் பலன் கொடுக்கும். தேவர்களுக்கு இது ஸாத்தியமில்லை. மனிதர்கள் செய்கிற யாகத்தில் தேவர்களைக் குறித்து ஹவிர்பாகம் கொடுக்கும் போது ‘இந்த்ராய இதம் ந மம’ "இந்திரனுக்கு இது, என்னுடையதில்லை" என்று தங்களுடைய அபிமான ஸம்பந்தத்தை விலக்கிக் கொள்கிறார்கள். இதை உத்தேசத் தியாகம் என்று சொல்வதுண்டு. மனிதர்களுக்கு மேல்பட்டவர்களாக தேவர்கள் இருப்பதால் அவர்களின் அனுக்ரஹம் வேண்டும் என்று யாகம் செய்ய முடிகிறது. தேவர்களுக்கு அவ்விதமில்லை. தேவர்கள் யாகம் செய்தால் அர்ப்பணம் செய்கிற ஹவிர்பாகங்களை "தன்னுடையதல்ல" என்று உத்தேசத் தியாகம் செய்ய வேண்டும். அவ்விதம் வாயால் சொன்னாலும் தேவர்கள் வியாபகர்களாக இருப்பதால் ஹவிர்பாகம் எங்கே செல்ல முடியும். ஆகையால் அவர்களுக்கு மேல்பட்ட வேறு தேவர்கள் இல்லாததினாலும் உத்தேசத் தியாகம் செய்ய இடமில்லாததாலும் அவர்கள் யாகாதி கர்மாக்களைச் செய்வது ஸாத்தியமில்லை. சில புராணங்களில் பிரஹ்மாதி தேவதைகள் சில ஸமயங்களில் யாகம் செய்ததாகச் சொல்லும்போது கூட அவர்கள் தன்னைவிட மேல்பட்ட தேவதையை உத்தேசித்து யாகம் செய்ததாகவே சொல்லியிருக்கிறது. ஆகையால் கர்மாவிற்கு ஏற்பட்டது அந்த லோகமென்றே ஏற்படுகிறது.

இதுவே ஞானபூமி
கர்மாவிற்கு இடமில்லாததால் தேவலோகத்தில் சித்தசுத்தி ஏற்படுவதும் ஸாத்தியமாகாது. கர்மாவிற்கு இடமில்லாமல் போனாலும் வேதாந்த விசாரம் செய்து ஞானமடையக் கூடாதா என்று கேட்கலாம். அதுவும் ஸாத்தியமல்ல. தேவாதி லோகங்கள் போக பூமிகள். தேவலோகத்தில் இந்திரிய ஸுகமே ஜாஸ்தி. அதிலேயே மனது ஈடுபட்டிருக்கும். கந்தர்வ லோகத்திலுள்ளவர்கள் போகலம்படர்கள் என்பது பிரஸித்தம். போகத்தில் ரமிக்கிற மனது ஞானத்தில் எப்படிச் செல்லும்? உபநிஷத்துக்களில் பிரஹ்மலோகமும் இவ்வுலகமும்தான் ஞானபூமி என்று வியக்தமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இவ்விரண்டு லோகங்களில் பிரஹ்மலோகமானது அனந்த விசேஷ புண்ணியம் செய்தவர்களுக்கே கிடைக்கத்தக்கது.

அவ்வித புண்ணியம் செய்தவர்கள் மாத்திரம் பிரஹ்மலோகம் சென்று பிரஹ்மாவின் முன்னிலையில் ஆத்மவிசாரம் செய்து ஞானம் பெறலாம். ஸாமான்யமான புண்ணியம் செய்தவர்களுக்கு பிரஹ்மலோகம் கிடைக்குமா? தவிரவும், பிரஹ்மலோகம் போய்ச் சேருவதற்கு வேண்டிய புண்ணிய கர்மாக்களை இங்கே பூலோகத்தில்தான் செய்ய வேண்டும். அது ஸுலபமாகச் செய்யக்கூடியதா? செய்வதானாலும் எவ்வளவு காலம் செல்லும்? எவ்வளவு சிரமம் எடுத்துக் கொள்ள வேண்டும்? அதற்காகச் செலவாகிற காலத்தை நாம் இவ்வுலகிலேயே ஞானம் பெறுவதற்காகச் செலவிடலாமே! அதற்காகப் படுகிற சிரமத்தையும் ஞானம் பெறுவதற்காக வைத்துக் கொள்ளலாமே! மேலும், துக்கம் ஜாஸ்தியாயிருக்கிற இந்த லோகத்தில்தான் ஞான ஸாதனமாகிய வைராக்கியம் ஏற்படக்கூடும். அது ஸ்திரமாகவும் இருக்கும். தேவாதி லோகங்களில் வைராக்கியம் ஏற்பட முடியாது. தவிரவும் ஆத்ம ஸ்வரூபத்தையறிய சரீராதிகளிலிருந்து ஆத்மா தனிப்பட்டவன் என்று உணர வேண்டுமானால் ஆத்மா சரீராதிகளுடன் சேர்ந்திருக்கும் தருணத்தையும் தனித்திருக்கும். தருணத்தையும் அனுபவிக்கிறவர்களுக்குத்தான் ஸுலபமாகும். தேவர்களுக்கு ஜாக்கிரத் அவஸ்தை மாத்திரம் தான் உண்டு. ஸ்வப்னமும் ஸுஷுப்தியும் கிடையாது. நாம் அம்மூன்று நிலைகளையும் மாறி மாறி அனுபவிக்கிறோமாதலால் ஸுகதுக்கானுபவம் ஏற்படுவதுடன் அவற்றுக்கு அதீதமான ஒரு நிலை உண்டென்று உணர்ந்துகொண்டு அதை அடைய முயற்சி செய்ய வேண்டும் என்கிற எண்ணம் ஏற்படுகிறது. ஜாக்கிரத் அவஸ்தை மாத்திரமுடைய தேவர்களுக்கு இது ஸாத்தியமில்லை. மேலும் அந்த சரீரம் அழியக்கூடியது. அநித்தியமானது. பலவித தோஷங்களுடன் கூடியது என்கிற விவேகத்தால் நமக்கு மோக்ஷ விருப்பமும் ஞானமும் ஏற்பட நியாயமுண்டு. தேவர்களுடைய சரீரம் தோஷரஹிதமாயிருப்பதுடன் வெகு காலம் மாறுதலில்லாமலிருப்பதால், நாம் சில ஸமயம் சில கார்யங்களைப் பிறகு பார்த்துக் கொள்ளலாமென்று ஒதுக்கி வைப்பது போல, பிறகு மோக்ஷம் அடைய முயல்வோமென்று அவர்கள் நினைத்துக் கொள்ளக்கூடும். அதாவது இந்திரிய ஜன்ய ஸுகத்திலுள்ள பிடிமானம் ஞானத்திலுள்ள சிரத்தையை மங்கும்படிச் செய்யுமென்று கருத்து. இவ்விதமாக எப்படி கவனித்துப் பார்த்தாலும் தேலோகத்தைவிட ஞானம் ஸம்பாதிப்பதற்கு நம் பூலோகமே உரித்தானதென்று தெரிகிறது.

மனிதனுக்குக் கீழ்பட்ட ஜந்துக்களுக்குப் பகுத்தறிவே இல்லாமையால் அவற்றுக்கு கர்மத்திலாவது, ஞானத்திலாவது அதிகாரம் கிடையாதென்பதைப்பற்றி அதிகமாய்ச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. மானிட ஜன்மா எடுத்தாலும் புருஷனாகப் பிறப்பது சிலாக்கியமென்பதை
துர்லபம் மானுஷம் ஜன்ம ப்ராப்ய தத்ராபி பௌருஷம் ||
என்கிற சுலோகத்தில் ஆசார்யார் காட்டியிருக்கிறார்கள். ஸ்த்ரீகளுக்கு வேதாத்யயனத்தில் அதிகாரம் இல்லையென்பதுடன் அவர்களுடைய ஸ்வபாவத்தினாலும், சாஸ்திரத்தினாலும் அவர்களுக்கு ஸ்வாதந்திரியமுமில்லை. அவர்களுக்கு ஸத்கதிக்கு பாதிவ்ரத்யமே ஸாதனம். கணவனையே தெய்வமாகக் கருதி திரிகரணங்களாலும் வழிபடுதல் பதிவ்ரதா தர்மமாகும். அவ்விதம் தன் பர்த்தாவை வழிபடும் பதிவ்ரதைகளான ஸ்த்ரீகள் ஜன்மாந்தரத்தில் புருஷ ஜன்மாவை அடைந்து ஞானம் பெற்று மோக்ஷமடைகிறார்கள் என்று சாஸ்திரம் சொல்கிறது. ஆகையால் பதிவ்ரதா தர்மமும் மோக்ஷ ஸாதனமேயாகும். ஆனால் ஸாக்ஷாத் ஸாதனமாகாது. பரம்பரையாக ஸாதனமாகும். புருஷனுக்கு இப்பொழுதே பிரஹ்ம ஞானம் அடைய ஸௌக்யமுண்டு. இந்தக் காரணத்தினாலேயே புருஷ ஜன்மா சிலாக்யமானது என்று சொல்லப்பட்டிருக்கிறது.

- ஜெகத்குரு ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சந்திரசேகர பாரதீ மஹாஸ்வாமிகள்

நன்றி: சங்கரகிருபா.

Friday 21 March 2014

வேதத்தின் மகிமை

வேதத்தின் மகிமை:

நம்முடைய ஸநாதன தர்மத்திற்கு அத்யந்தப் ப்ரமாணமானது வேதம். அதனால்தான் நம்முடைய தர்மத்திற்கு வைதீக தர்மம் என்று பெயர். இந்த தர்மத்திற்கு மூலமான வேதங்கள் நமக்கு அத்யந்த பூஜ்யமானது; பவித்ரமானது. வேதத்திற்குச் சமமாக வேறு எந்த ப்ரமாணமும் கிடையாது. மீதிப்ரமாணங்கள் எல்லாம் வேதத்திற்கு அனுசரனையாக இருந்தால் அதை நாம் ஏற்றுக் கொள்வோம். வேதத்திற்கு விருத்தமானதை நாம் ஏற்றுக் கொள்ள மாட்டோம்.

மீமாம்சையிலே பகவான் பிருங்கி மகரிஷி இதை ரொம்ப ஸ்பஷ்டமாக சொல்லியிருக்கிறார்
.
வேதத்திற்கு விரோதம் வந்தால் (விரோதம் என்றால்) என்ன அர்த்தம்? வேதம் சொல்வதற்கு விருத்தமாக வேறு ஏதாவது ப்ரமாணம் சொன்னால் அந்த ப்ரமாணம் நமக்குத் தேவையில்லை. எது வேதத்திற்கு அனுசாரமாக ப்ரமாணம் சொல்கிறதோ அந்த ப்ரமாணம்தான் தேவை.

ஸ்ம்ருதிகள், தர்ம சாஸ்த்ரங்கள், இதிகாசங்கள், புராணங்கள் இவை எல்லாம் வேதத்திற்கு அனுசாரமாக இருப்பதால் நமக்கு ப்ரமாணமாக இருக்கிறது. விருத்தமானால் அது நமக்குப் ப்ராமணமாகாது. அப்பேர்ப்பட்ட நம்முடைய பரமப்ரமாணமான வேதங்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நமக்கு எல்லோருக்கும் இருக்கிறது. அந்த வேதங்களில் நமக்கு எத்தனையோ விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.

பகவத் பாதாள் வேதத்தைப் பற்றி சொல்கிறபோது “ஸர்வக்ஞ கல்பஸ்ய” என்கிறார். வேதம் என்பது ஸர்வக்ஞமான பொருள். எது ஸர்வக்ஞமானது ஈஸ்வரன்தான் ஸர்வக்ஞன். ஈஸ்வரன் எப்படி ஸர்வக்ஞனான ஈஸ்வரனுக்கு தெரியாதது ஒன்றுமில்லையோ அதேபோல் வேதமும் ஸர்வக்ஞன் மாதிரி. அதாவது வேதத்திலேயிருந்து நமக்கு தெரியாத விஷயங்கள் என்பது ஒன்றுமில்லை. எல்லாவற்றையும் நாம் வேதத்திலேயிருந்து தெரிந்து கொள்ளலாம். அப்பேர்ப்பட்ட வேதத்திலே நமக்கு ஸ்ரத்தை ரொம்பவும் ஆவஸ்யகம் (அவஸ்யம்). ஏனென்றால் அந்த வேதத்திலேயிருந்து நமக்கு கிடைக்கக்கூடிய ஸந்தேஸங்கள் ரொம்பவும் அற்புதமானவை.
முதலில் ருக்வேத ஸம்ஹிதையின் கடைசியில் ஒருபெரிய ஸந்தேஸம் (செய்தி) ஸமஸ்த மனிதர்களுக்கும் சொல்லப்பட்டிருக்கிறது. ஸமஸ்தமானவ ஜாதிக்கு அந்த ரிக்வேதம் கொடுக்கக்கூடிய ஸந்தேஸம் எத்தனை நூற்றாண்டுகளானாலும் பொருந்தும். காலங்கடந்து நிற்கக் கூடியது.

ஸந்தேசம்: எல்லோரும் ஒரே அபிப்ராயத்தோடு இருங்கள் யாரும் யாரைப்பற்றியும் தப்பான அபிப்ராயத்தை வைத்துக் கொள்ளாதீர்கள். எல்லோரும் ஒரே மனதோடு இருங்கள். அப்படி இருந்தால் உங்கள் வாழ்க்கை மிகவும் பவித்ரமாக இருக்கும். இப்போது நாம் உலகத்திலே எந்த ஒரு சண்டை, சச்சரவு பார்த்தாலும் அங்கே ஒரே காரணம் அந்த இரண்டு பேருடைய ஒரு அபிப்ராய பேதம். அப்பா, பிள்ளை விஷயத்தில், அப்பா ஒன்று நினைத்தால் பிள்ளை ஒன்று நினைப்பான். பிள்ளை ஒன்று சொன்னால், பெண்டாட்டி இன்னொன்று சொல்வாள். குரு, சிஷ்யர்கள் விஷயத்தில் குரு ஒன்று சொன்னால் சிஷ்யன் இன்னொன்று சொல்வது வாடிக்கை. அப்போது இரண்டு பேருக்குள்ளும் அபிப்ராய சச்சரவுகளெல்லாம் வருகிறது. ஒரே அபிப்ராயம் இருந்தால் அதாவது நான் என்ன நினைக்கிறோனோ நீயும் அதையே நினைக்கிறதாக இருந்தால் இரண்டு பேருக்குள் சண்டை எப்படி வரும். ரிக்வேதம் எத்தனையோ வருஷங்களுக்கு முன் இந்த ஸந்தேஸம் நமக்கு கொடுத்தது.

ஒரே அபிப்ராயத்தோடு இருங்கள். ஒரே மனசோடு இருங்கள். ஒரே பகவானைப் பூஜை பண்ணுங்கள். இந்த ஸந்தேஸத்தை நாம் எடுத்துக் கொண்டால் எப்படி இருக்கும்? அப்போது நம்முடைய ஜீவனத்தில் ஏதாவது சண்டை வருமா? இந்த ஸந்தேஸத்தை நாம் பின்பற்றினால் நமக்கு எங்கேயும் சண்டை வராது. ஆனால் நாம் என்ன பண்ணுகிறோம், நம்முடைய அகங்காரத்துக்கு ப்ராதான்யம் கொடுக்கிறோம். நாம் நினைத்ததுதான் நடக்கவேண்டும். அப்பாவும், பிள்ளையும் இரண்டு பேரிடையேயும் அபிப்ராய பேதம் வரும்போது அப்பா என்ன நினைக்கிறார் நான் சொன்னதுதான் நடக்க வேண்டுமென்று, பிள்ளை என்ன நினைக்கிறான் அப்பாவுக்கு வயது ஆகிவிட்டது ஆகவே ஒன்றும் பண்ணமுடியாது, தான் சொன்னதுதான் நடக்கவேண்டும் என்று சொல்கிறான். இவர்கள் இரண்டு பேரும் அகங்காரத்தை விட்டுவிட்டால் அந்தச் சண்டை இருக்காது.

அதேபோல் குரு சிஷ்யர்கள், குரு ஒன்று சொல்லும்போது சிஷ்யன் இன்னொன்று சொன்னால் அங்கே எப்படி ஒரு ஐக்யம் என்பது வரும். குரு என்ன நினைக்கிறார் “நான் குரு நீ சிஷ்யன் நான் சொன்னபடி நீ செய்ய வேண்டும்.” சிஷ்யன் என்ன நினைக்கிறான் “நீங்கள் பேசாமல் இருங்கள். உம்மால் ஒன்றும் பண்ணமுடியாது. நான் சொல்வதைத்தான் நீங்கள் கேட்க வேண்டும்.” அப்போது எப்படி சரியாக இருக்கும். அதனாலே அந்த ரிக்வேதம் சொல்லி இருக்கக்கூடிய ஸந்தேஸம் முழு உலகத்திலே சாந்திக்கு (அமைதிக்கு) வேண்டியது இதை எல்லோரும் ஏற்றுக் கொண்டால் உலகத்திலே அமைதி ஏற்படும். அதற்கு வழி ஏற்படுத்தும். நாம் எல்லோரும் அமைதி வேண்டும் என்று அபேக்ஷிக்கிறோம். உலகத்திலே அநேகம் பேர் சொல்கிறார்கள் சாந்தியே இல்லை. ஏன் சாந்தியே இல்லை. இந்த ஸந்தேஸத்தை ஏற்றுக் கொண்டால் கண்டிப்பாக சாந்தி, அமைதி, நிம்மதி ஏற்படும். அப்பேர்ப்பட்ட ஸந்தேஸம் நமக்கு ரிக்வேதம் கூறியிருக்கிறது.

யஜுர் வேதத்தில் கிடைக்கக்கூடிய உபதேசங்கள், அநேகமானவை. யஜுர் வேதத்தில் அநேக அர்த்தவாதங்கள் வருகிறது. ஆனால் அந்த அர்த்த வாதத்திலிருந்து நமக்கு சில ஸந்தேஸங்கள் வந்திருக்கின்றன. மூன்றாம் கரணத்திலே முதல் ப்ரஸ்னத்திலே
முதலில் ப்ரம்மாவுக்கு ப்ரஜாச்ருஷ்டி பண்ண வேண்டும் என்று மனதில் வந்திருக்கிறது. தபஸ் பண்ணினார். தபஸ் பண்ணினதிலே பாம்புகள் வந்துவிட்டன. அவர் நினைத்தது நடக்கவில்லை. அப்போது சும்மா இருக்காமல் திரும்பவும் தபஸ் பண்ணினார். இரண்டாவது தபஸில் பக்ஷிகள் (பறவைகள்) வந்தன. இதுவும் சரியில்லை. திரும்பவும் தபஸ் பண்ணினார். அப்போது மனுஷ வ்ருத்தி ஆகிவிட்டது. இதிலேயிருந்து நமக்குத் தெரிவது என்னவென்று கேட்டால் நாம் ஒரு நல்ல கார்யத்தை ஆரம்பித்தால் அது ஸித்தியாகிற (நடக்கிற) வரையிலும் நாம் முயற்சியை விடக்கூடாது.
மூன்று விதமான மனிதர்கள் இருப்பார்கள். சிலர் நல்ல காரியம் பண்ணவேண்டும் என்று ஆரம்பிப்பார்கள். கடைசியிலே ஒரு விக்னம் வரும், விக்னம் வந்தவுடனே “சரி, இது என்னால் முடியாது” என்று சொல்லி விடுவார்கள். அதிலேயும் இன்னும் அதமர்கள் சிலர் இருக்கிறார்கள் ஆரம்பிக்கவே மாட்டார்கள். ஆரம்பித்தால் ஏதோ தடங்கல் வருகிறது யாருக்கு வேண்டும் இதெல்லாம். வேண்டவே வேண்டாம் என்று விட்டுவிடுவார்கள். ஆரம்பிக்கவே மாட்டார்கள். மத்யமாக உள்ளவர்கள் ஆரம்பிப்பார்கள். ஆனால் ஒரு நிலை வந்ததும் விட்டு விடுவார்கள். ஆனால் கடைசியில் உள்ளவர்கள் (உத்தமர்கள்) மட்டும் எத்தனை விக்னங்கள் வந்தாலும் விடாமல் அந்தக் காரியத்தை முடித்து விடுவார்கள். ப்ரும்மா ப்ரஜாஸ்ருஷ்டி செய்யவேண்டும் என்று ஆரம்பித்து தபஸ் பண்ணி முதலில் அவர் எதிர் பார்த்தது நிறைவேறாமல் திரும்பவும் தபஸ் பண்ணி அப்போதும் நிறைவேறாமல் திரும்பவும் தபஸ் பண்ணி அப்போதுதான் நிறைவேறியது.
இந்தக் காலத்தில் அதற்கு ஓரு உதாரணம் சொல்வதாக இருந்தால் சி.ஏ. பரீட்சை தேறுவது உதாரணமாக இருக்கும். யாரும் சி.ஏ பரீட்சை முதல் தடவையில் பாஸாகாமல் இரண்டு, மூன்று தடவையிலேதான் பாஸ் ஆவார்கள். எவ்வளவு புத்திசாலியாக இருந்தாலும் விடாமுயற்சியினால் இரண்டாவது, மூன்றாவது, நான்காவது தடவையோ தான் பாஸாக முடியும். எனக்குத் தெரிந்த ஒரு சிஷ்யன் பெங்களூரில் இருக்கிறான். அவன் 30ஆவது தடவைதான் பாஸ் பண்ணினான். சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள். விடவே இல்லை தீர்மானமாக பாஸ் பண்ணியே தீருவேன் என்று இருந்தான். ஏனெனில் நாம் எடுத்த காரியத்தை முடிக்க வேண்டும். ஸத்சங்கத்திலே நாமாகப் போய்ப் பங்கு எடுத்துக் கொள்ள வேண்டும். வேறு யாரும் கூப்பிடும்படியாக இருக்கக் கூடாது. ஸத்சங்கம் ஸத்காலக்ஷேபம் நடக்கிறபோது, யாருடைய ஆஹ்வானத்தையும் (அழைப்பு) எதிர் பார்க்காமல் நாமே அங்கே போய் உட்கார வேண்டும். ஏனென்றால் அங்கே அப்படி இருக்கும்போது நல்ல விஷயங்களைப் புரிந்து கொள்ளலாம். யாரும் கூப்பிடவில்லை என்று நினைத்துக் கொள்ளக் கூடாது. அங்கே நாம் போய் உட்கார்ந்து ஸத்விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும்.
இந்நத மாதிரி எத்தனையோ விஷயங்கள் நமக்கு யஜுர் வேதத்தில் அந்த அர்த்த வாதங்கள் மூலமாகத் தெரிகிறது. தைத்ரிய உபநிஷத்தில்

ஸத்யம் வத தர்மம் சர
ஆசார்ய தேவோ பவ |
அதிதி தேவோ பவ ||

ஸத்யத்தையே பேசு. தர்மத்தை ஆசரணம் செய். குருவிடம் ரொம்ப மதிப்போடு இருக்கவேண்டும். வந்த அதிதிகளுக்கு சேவை செய்யவேண்டும். ஸத்யத்தை விடக்கூடாது. தர்மத்தை விடக்கூடாது. மகான்கள் எப்படி அபேக்ஷிக்கிறார்களோ அப்படி அபேக்ஷிக்க வேண்டும். அந்த மகான்கள் போல் நடக்க வேண்டும். இந்த மாதிரி விஷயங்கள் யஜுர் வேதத்தில் நமக்கு இருக்கின்றன.

சாம வேதத்திலும் நமக்கு உபதேசங்களுக்கு ஒன்றும் குறைவில்லை. சாமவேதம் கானம்தானே அதில் என்ன இருக்கப்போகிறது என்று யாராவது நினைத்துக் கொள்வீர்களோ என்னமோ சாம வேதத்தில் நிறைய உபதேசங்கள் இருக்கின்றன. மனுஷ்யனுக்கு ஸ்ரேயஸை அடைவதற்கு நான்கு தடங்கல்கள் இருக்கின்றன. இந்த நான்கு தடங்கல்களை நிவர்த்தி செய்தால் அந்த ஸ்ரேயஸ் கிடைக்கும். நான்கு தடங்கல்கள் 1.கோபம், 2.லோபம், 3.அந்ருதம், 4.அஸ்ரத்தை ஆகிய நான்கும் ஆகும். ஸ்ரேயோ மார்க்கத்துக்கு பிரதிபந்தகமாக இருக்கின்றன. இந்த நான்கையும் நீக்கவேண்டும். இந்த கோபம் என்பதை அக்ரோதத்தினாலே (அக்ரோதம் என்று சொன்னால் க்ஷமை. பொறுமை) அதாவது பொறுமை என்ற அக்ரோதத்தினாலே கோபத்தை நீக்கவேண்டும் லோபத்தை தானத்தினாலே நீக்கவேண்டும். அந்தத் தானம் என்பதற்கு பகவத் பாதாள் ‘தசஸ்லோகியிலே’ தானம் ப்ரம்மார்ப்பணம் என்று எழுதி யிருக்கிறார். தானம் பண்ணும்போது ப்ரும்மார்ப்பணமாக தானம் பண்ணவேண்டும். வேறு எதையும் எதிர் பார்க்காமல் ஈஸ்வரார்த்தமாக தானம் பண்ணி லோபத்தை நீக்கவேண்டும்.

லோபம் என்று சொன்னால் இரண்டு விதம். எல்லாம் எனக்கு கிடைக்கவேண்டும் என்பது ஒன்று. எனக்கு கிடைத்ததை நான் யாருக்கும் கொடுக்க மாட்டேன் என்பது ஒன்று. இந்த லோபம் என்பது மனுஷ்யனுக்கு ஸ்ரேயோ மார்க்ககத்திற்கு ப்ரதி பந்தகமாக இருக்கிறது. இதெல்லாம் உத்தேசித்து பகவான் பகவத் கீதையிலே

த்ரிவிதம் நரகஸ்யேதம் த்வாரம் நாசன மாத்மன: |
காம: க்ரோதஸ்ததா லோபஸ்தஸ்மாதேதத்ரயம் த்யஜேத் ||

அதுதான் பகவத் கீதையை எல்லா வேதத்தின் ஸாரபூதம் என்று சொல்லுவோம் வேதத்தில் உள்ளது எல்லாவற்றையும் பகவான் பகவத் கீதையிலே ஸாரபூதமாக தந்துள்ளார். லோபம், க்ரோதம், அஸ்ரத்தை, அந்ருதம் ஆகிய நான்கையும், தானம், அக்ரோதம், ஸ்ரத்தை, ஸத்யம் என்கிற பாவத்தினாலே நீக்கவேண்டும். அக்ரோதம் பொறுமையினாலே கோபத்தை நீக்கவேண்டும் ஸத்யத்தினாலே அந்ருதத்தை நீக்கவேண்டும். ஸ்ரத்தையினாலே அஸ்ரத்தையை நீக்கவேண்டும். அஸ்ரத்தை இருக்கிறவனுக்கு தத்வம் புரியாது. அஸ்ரத்தையாக நாம் பண்ணக்கூடிய எந்தவிதமான கர்மா அல்லது, யாகமாகட்டும் அல்லது, தபஸாகட்டும் எது ஆனாலும் அது ஸார்த்தகமாகாது. பகவான் சொல்லியிருக்கிறார்.

அச்ரத்தயாஹுதம் தத்தம்
தபஸ்தப்தம் க்ருதம்ச யத் |
அஸதித்யுச்யதே பார்த
நசதத்ப்ரேத்ய நோ இஹ ||

நீ அஸ்ரத்தையினால் எந்தக் கர்மாவை செய்தாலும் அந்தக் கர்மா பலிக்காது. உனக்கு ஜன்மாந்தரத்திலேயும் அதனால் ஒன்றும் பலன் வராது. இப்பவும் பலன் வராது அதுதான் உபநிஷத்திலே
யதேவ வித்யயா கரோதி
ஸ்ரத்தயோ பநிஷதா
ததேவ வீர்யவத்தரம் பவதி ||
என்று சொல்லப்படுகிறது.

அதுமாதிரி நமக்கு அஸ்ரத்தையை ஸ்ரத்தையினாலே நீக்கவேண்டும். லோபத்தை தானத்தினாலும் நீக்க வேண்டும். க்ரோதத்தை அக்ரோதத்தினால் நீக்கவேண்டும் க்ஷமையினாலே பொறுமையினாலே நீக்கவேண்டும். அந்ருதத்தையை ஸத்யத்தினாலே நீக்கவேண்டும். அதாவது இந்த உபதேசத்தினால நாம் க்ரஹிக்க வேண்டியது என்னவென்று கேட்டால் நம்முடைய ஜீவிதத்திலே நமக்கு என்றைக்கும் தானம் செய்யக்கூடிய ஸ்வபாவம் இருக்கவேண்டும். அதுவும் ப்ரும்மார்ப்பணமாகத்தான் தானம் செய்யக்கூடிய ஸ்வபாவம் இருக்கவேண்டும். சாஸ்த்ரத்திலேயும், குருவாக்யத்திலேயும் ஸ்ரத்தை என்பது வேண்டும். பொறுமை என்பது ரொம்பவும் வேண்டும். ஸத்யம் என்பது என்றைக்கும் வேண்டும். அஸத்யத்தை என்றைக்கும் சொல்லக்கூடாது. “ஸத்யமேவ ஜயதே”
ஸத்யத்துக்கு ஜயம் என்பது நிச்சயம். தற்காலிகமாக அஸத்யம் ஜயிக்கிறது. ஸத்யம் ஜயிக்கிறது இல்லை என்று யாரும் நினைத்துக் கொள்ளக் கூடாது. ஸத்யத்துக்கு ஜயம் என்பதுதான் வாஸ்தவம். அதனாலே ஸத்யத்தை நாம் கடைப்பிடித்து வாழவேண்டும்.

இப்படி நாம் வேதங்களில் ஒவ்வொன்றையும் பார்த்தால் பரமாற்புதமான உபதேசங்கள் இருக்கின்றன. அப்பேர்ப்பட்ட உபதேசங்கள் அந்த வேதங்களில் இருக்கிறதனாலேதான் அந்த வேதத்துக்கு வேறு எதற்கும் இல்லாத ஒரு மகிமை இருக்கிறது என்று நாம் சொல்கிறோம்.

த்ரைலோக்ய நிர்மாண
நிபுண: பரமேஸ்வர
த்ரைலோக்ய நிர்மாண நிபுண: பரமேஸ்வர: என்று சொல்கிறது. அதனாலே அப்பேர்ப்பட்ட பரமேஸ்வரன் அந்த வேதத்தை அனுக்ரஹித்ததினால் தானே அந்த வேதத்திலே ஓர் அக்ஷரம் கூட அப்ரமாணம் என்று நாம் சொல்ல முடியாது.

இப்போது கிராமங்களில் வேத பண்டிதர்களைப் பார்க்க முடியாது. பெரிய ஊர்களிலாவது வேத பண்டிதர்களைப் பார்க்க முடிகிறது. இன்னும் பரவலாக பண்டிதர்களுடைய ஸ்ரத்தை எப்படி இருக்குமோ தெரியாது அதனாலே இந்த வேதங்களை ரக்ஷிக்கவேண்டும். அந்த வேதத்தில் பதம் கனம், கிரமம், ஜடை ஆகியவற்றை ரக்ஷிக்க வேண்டிய பெரிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. வேதங்களை சி.டி; டி.வி.டி போன்றவற்றின் மூலம் வெளியிடுகிறது.  உங்கள் எல்லோருக்கும் ஆசீர்வாதம் பண்ணி இந்த பாஷணத்தை முடிக்கிறேன்.


- ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகள்

Tuesday 18 March 2014

தர்மானுஷ்டத்தின் அவசியம்:

தர்மானுஷ்டத்தின் அவசியம்:

ஆதிசங்கர பகவத்பாதாளுடைய அவதாரம் சநாதன தர்மத்தை புனருத்காரணம் செய்வதற்காகத்தான் என்பது எல்லோருக்கும் தெரியும். பகவானுடைய ஒவ்வொரு அவதாரத்தின் லக்ஷ்யம் அதேதான். தர்மம் காப்பாற்றப்பட வேண்டும். அதர்மம் நீக்கப்பட வேண்டும். ப்ராதான்யம் கொடுத்து பகவான் தர்மத்தைக் காப்பாற்றுவதற்கு வேறு யாரையும் அனுப்பாமல், தானே வந்து விடுகிறான்.
உலகத்தில் கூட ஒரு பெரிய ஸ்தாபனத்தில் ஏதாவதொரு ப்ரச்னை வந்தால் அந்த ஸ்தாபனத்தின் எஜமானர் வந்து அதற்கு ஒன்றும் உள்ளே வரமாட்டார். ஏனெனில் அவருக்கு கீழ் நிறையப் பேர் இருக்கிறார்கள் இல்லையா? அவர்கள் எல்லாம் அதைப் போய்த் தீர்வு பண்ணிவிடுவார்கள் என்று சொல்லி அவர்களையே அனுப்புவார். எந்தப் ப்ரச்னையை வேறு யாராலும் தீர்வு பண்ண முடியாதோ அதை மட்டும் தீர்வு பண்ணுவதற்கு அந்த எஜமானரே வருவார்.

இங்கேயும் தர்மத்தை ரக்ஷணம் செய்வதற்கு வேறு யாராலும் முடியாததனால் ஸ்வயம் பகவானே வந்து அந்தக் கார்யத்தை செய்ய வேண்டி வந்துவிட்டது. வேறு யாராலும் ஏன் முடியாது என்று கேட்டால் தர்மம் என்பது அவ்வளவு ஸர்வ ஸ்ரேஷ்டமானது. அவ்வளவு ஸர்வஸ்ரேஷ்டமான தர்மத்தை உத்தாரணம் செய்யக்கூடியது அவ்வளவு லேசான கார்யம் இல்லை. அதனால் ஸ்வயம் அவதாரம் செய்ய வேண்டி வந்துவிட்டது.

பகவான் ஒவ்வொரு அவதாரத்திலேயும் தர்ம ரக்ஷணம் செய்திருக்கிறார் என்பது நமக்கு இதிகாச புராணங்களிலிருந்து தெரிகிறது. பகவான் தர்ம ரக்ஷணத்தை செய்தான் எனில் அந்தத் தர்மத்தை ஆசரணம் செய்ய வேண்டிய கடமை நம்முடயதுதானே!

நாம் சாப்பிடுவதற்கு வேண்டிய ஏற்பாடு எல்லாம் செய்யலாம். சமையல் சரியாக செய்துவைக்கலாம். பரிமாறவும் செய்யலாம். சாப்பிட வேண்டியது அங்கே உட்கார்ந்தவனைச் சேர்ந்ததுதானே? அதுவும் சமையல் செய்தவனோ, சாமான் கொண்டு வந்தவனோ செய்யக்கூடிய கார்யம் இல்லையே இது.
அதேபோல் பகவான் ஒவ்வொரு யுகத்திலேயும் அவதாரம் எடுத்து தர்மரக்ஷணம் செய்தார். தர்மரக்ஷணம் என்றால் என்ன? தர்மத்தை அனுஷ்டானம் செய்வதற்கு என்னவெல்லாம் விக்னங்கள் (தடைகள்) இருந்ததோ அவற்றையெல்லாம் நிவாரணம் செய்துவிட்டார். என்ன விக்னங்கள்? ராக்ஷஸர்கள் தர்மானுஷ்டத்திற்கு இடைஞ்சல் செய்து கொண்டிருந்தார்கள். ஒருகார்யத்திற்கு ஒருவன் இடைஞ்சல் செய்து கொண்டிருக்கிறான் என்றால் அந்தக் கார்யம் நடக்காது. அந்தக் கார்யம் நடக்கவேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் அந்த இடைஞ்சலை நீக்கவேண்டும்.



என்ன சௌகர்யம் என்றால் முதலில் பகவான் நமக்கு இந்த நர ஜன்மம் (மனித) கொடுத்தானே தர்மானுஷ்டானம் செய்வதற்கு சௌகர்யமாகட்டும் என்பதற்காக இந்த மனுஷ்ய சரீரத்தை கொடுத்தான். வேறு எந்த ப்ராணி சரீரம் கொடுத்தாலும் தர்மானுஷ்டானம் செய்ய முடியாது. அது எவ்வளவு பெரிய யானை சரீரமாகட்டும், ஒரு சின்ன பூனை சரீரமாகட்டும், யானையாகவோ, பூனையாகவோ பிறந்திருந்தால் நாம் தர்மத்தை அனுஷ்டிக்க முடியுமா? வேத அத்யயனம் செய்ய முடியுமா? ஒன்றும் முடியாது.

இந்த மனுஷ்ய சரீரம் என்பது எல்லாவற்றுக்கும் தகுந்தது உகந்தது. வேத அத்யயனமும் செய்ய முடியும். யாக ஹோம அனுஷ்டானமும் செய்ய முடியும். தேவாராதனையும் செய்ய முடியும். தேவோபாசனையும் செய்ய முடியும். ஞானத்தையும் அடைய முடியும். எல்லாவற்றுக்கும் அனுகூலமானது இந்த மனுஷ்ய சரீரம். இதை நமக்கு பகவான் அனுக்ரஹம் செய்திருக்கிறார்.
அதாவது தர்மானுஷ்டானத்திற்கு வேண்டிய சௌகர்யத்தை பகவான் செய்து கொடுத்திருக்கிறார். ஆனால் நாம் என்ன செய்கிறோம். இந்த சௌகர்யத்தை பயன்படுத்திக் கொள்ளவில்லை. நமக்கு இந்த தர்மத்தில் இருக்க வேண்டிய ஸ்ரத்தை வேறு எதிலேயோ போய் விடுகிறது. மீதி விஷயங்களில் நாம் எவ்வளவு உற்சாகம் காட்டுகிறோமோ அந்த உற்சாகத்தை நாம் தர்மானுஷ்டானத்தில் காட்டுவதில்லை.

ஒரு பத்து நிமிஷமாவது எந்த விஷயத்தையும் மனதிற்குக் கொண்டுவராமல் ஸந்த்யாவந்தனம் செய் என்று சொன்னால் யாராலாவது முடிகிறதா? முடியாது. சிலர் நான் 300தடவை காயத்ரி மந்த்ரம் ஜபித்திருக்கிறேன் என்று சொல்வார்கள். ஆனால் அந்த சமயத்தில் மனது எங்கே போனது என்று அவரைத்தான் கேட்க வேண்டும். மனது அங்கே இருப்பத்தில்லை. மனசு அங்கே இல்லாமல் நாம் சும்மா 1000தடவை காயத்ரி மந்த்ரம் ஜபித்தாகச் சொல்லிக் கொண்டால் என்ன ப்ரயோஜனம்? நாம் செய்கிற கார்யம் எப்படி இருக்கவேண்டும் என்று கேட்டால் த்ரிகரணசுத்தியாகச் செய்யவேண்டும். த்ரிகரணங்கள் என்று சொன்னால் மனம், வாக்கு, சரீரம் இந்த மூன்றும் சுத்தமாக இருக்கவேண்டும். மனதிலே வேறு எந்தவிதமான யோசனையும் வரக்கூடாது. வாக்கால் (வாயால்) வேறு எந்தவிதமான பேச்சும் வரக்கூடாது. சரீரத்தில் வேறு எந்தவிதமான கார்யமும் நடக்கக் கூடாது. ஜபத்துக்கு உட்கார்ந்தோம் அல்லது பூஜைக்கு உட்கார்ந்தோம் அல்லது த்யானத்துக்கு உட்கார்ந்தோம் என்று சொன்னால் அதில்தான் மனது இருக்கவேண்டும். வேறு எதிலேயும் மனது போகக்கூடாது. அப்படி செய்தால் அதற்குப் பலன் உண்டு. நாம் யாரும் அப்படி செய்வதில்லை. செய்யாமல் நாம் என்ன செய்கிறோம் நிறைய ஜபம் செயதாயிற்று. பாராயணம் செய்தாயிற்று. யாகம் செய்தாயிற்று. ஆனால் ஒரு பலனும் கிடைக்கவில்லை. ஒரேயடியாகச் சொல்லிவிடுகிறோம் ஒரு பலனும் கிடைக்கவில்லை என்று. சொல்லுகிற நம்முடைய மனதில் என்ன இருக்கிறது என்று கேட்டால் இதெல்லாம் உண்மையா சரிதானா? என்று ஒரு சந்தேக பாவம். ஏனென்றால் யாகம் செய்யச் சொல்கிறார்கள், ஹோமம் செய்யச் சொல்கிறார்கள் இதெல்லாம் செய்தால் கார்யம் கைகூடுமா? ஏதோ ஜோஸ்யர் சொல்கிறார் இல்லை வாத்யார் சொல்கிறார் அவ்வளவுதான் என்று நமக்கு தோன்றுகிறது. வாஸ்தவமாக அந்த சந்தேகம் கூடாது. சாஸ்த்ரம் என்றைக்கும் பொய் ஆகாகது என்ற நம்பிக்கை நமக்கு வேண்டும். சாஸ்த்ரம் என்றைக்கும் பொய் இல்லை. நம்முடைய மனதில் ஸ்ரத்தை இல்லாததினால் கார்யம் நடக்கவில்லை.
பகவான் கீதையிலே சொல்லியிருக்கிறான்.

அஸ்ரத்யா ஹுதம்தத்தம்
தபஸ்தப்தம் க்ருதம் ச யத் |
அஸதித்யுச்யதே பார்த்த
நசதத்ப்ரேத்ய நோஇஹ ||

நீ ஸ்ரத்தை இல்லாமல் எந்த கார்யம் செய்தாலும் உனக்கு பலன் கிடைக்காது. நீ நிறைய தவம் செய்தேன். ஹோமம் செய்தேன். தானம் செய்தேன் என்று என்ன சொன்னாலும் ஸ்ரத்தை இல்லாமல் செய்துவிட்டு பலன் கிடைக்கவில்லை என்று சாஸ்த்ரத்தை ஆட்சேபிக்கிறாய். தவறு உன்னிடம் இருக்கிறது. தவறு சாஸ்த்ரத்தில் இல்லை. உன்னிடம் இருக்கும் தவறை திருத்திக் கொள்ளாமல் சாஸ்த்ரத்தின் மேல்பழி போட்டால் என்ன ப்ரயோஜனம்? அதனால் பகவான் நமக்கு தர்மானுஷ்டானத்திற்கு வேண்டிய சௌகர்யம் கொடுத்துவிட்டு இடைஞ்சல்களையும் நீக்கி நமக்கு பெரிய உபகாரம் செய்தாலும் கூட அதை நாம் சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் அதாவது சரியாக தர்மாசரணம் செய்யாமல் இருந்தால் அது நம்முடைய தவறே ஒழிய யாரையும் ஆட்சேபிக்க முடியாது.
பகவான் தன்னுடைய அவதார கார்யத்தை சரியாக நடத்தினான். பகவத்பாதாள் அவதாரம் எடுத்துவிட்டு தர்மத்துக்கு விரோதமாக வேதத்திற்கு விரோதமாக ப்ரசாரங்கள் செய்து கொண்டு இருந்தார்களோ அவை எல்லாவற்றையும் தடுத்து விட்டார். அப்பேர்ப்பட்டவருக்கு துளி கூட அவகாசம் இல்லாமல் செய்துவிட்டார். இனி நீ தாராளமாக ஸ்ரத்தையான தர்மத்தை செய்யலாம் என்கிற ஒரு பரிஸ்திதியை உண்டாக்கினார். ஆனால் நாம் அப்படி இருந்தாலும் கூட சரியாக தர்மானுஷ்டானம் செய்யவில்லை யென்றால் அது ரொம்பப் பெரிய அபராதமாகும்.

தர்மத்தை நாம் அனுஷ்டித்தாலும், அனுஷ்டிக்காவிட்டாலும் தர்மத்திற்கு ஒன்றும் ஆகப்போவதில்லை. ஈஸ்வரனுக்கும் ஒன்றும் ஆகப்போவதில்லை. ஆகப்போவது நமக்குத்தான். நாம் தர்மத்தை அனுஷ்டித்தால் நமக்கு நலம். நாம் தர்மானுஷ்டானம் செய்யவில்லை என்றால் நமக்குத்தான் கெடுதல். நமக்கு எல்லாருக்கும் கெடுதல் ஆகக்கூடாது நல்லது ஆகவேண்டும் என்று எண்ணுகிறோம். ஆனால் ஸத்கர்ம அனுஷ்டானம் செய் என்கிறபோது மட்டும் நாம் என்னவெலாம் காரணங்கள் சொல்லிக் கொண்டு இருக்கிறோம்.

சிலபேர் எனக்கு செய்யவேண்டும் என்று இருக்கிறது. ஆனால் நேரம் கிடைக்கவில்லை. சீக்கிரம் ஆபீஸ் போக வேண்டும் என்று சொல்வார்கள் ஆனால் டி.வி பார்க்கிறதை நிறுத்துகிறீர்களா? நிறுத்துவதில்லையே இல்லை இரண்டுபேர் வேண்டாத விஷயங்களைப் பேசுவதை நிறுத்துகிறீர்களா? நிறுத்துவது இல்லையே ஆனால் ஸந்த்யாவந்தனம் விஷயம் வரும்போது சொல்கிறீர்கள் சீக்கரம் ஆபீஸ் போக வேண்டியிருக்கிறது அப்போது அவன் சொல்வதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். வாஸ்தவமாக தர்மானுஷ்டானத்திற்குத்தான் ப்ராதான்யம். அதற்கு பின்புதான் மீதி விஷயங்கள் எல்லாம். தனக்கு நித்யகர்மானுஷ்டானத்திற்கு இடைஞ்சல் வருவதாக இருந்தால் அந்தக் காரியமே தனக்கு வேண்டாம் என்கிற அளவிலே நம் முன்னோர் இருந்தார்கள்.

முன்பு பெரிய பெரிய இராஜா சபைகளில் பெரிய வித்வான்கள் இருந்தார்கள். அந்த வித்வான்கள் அந்த இராஜாவுடைய ஆஸ்ரயத்திலே இருந்ததனால் அந்த இராஜாவின் கட்டளைப்படி அவர்கள் நடக்க வேண்டும் வேறு வழியில்லை. ஆனால் அவர்கள் தங்களுடைய அனுஷ்டான சமத்தில் இராஜாவிடமிருந்து யாரேனும் வந்து “மகாராஜா உங்களை வரச் சொல்கிறார்” என்றால் “அனுஷ்டானத்தை முடித்து விட்டு வருகிறோம்” என்று சொல்லு என்று சொல்லிக் கொண்டிருந்தார்களாம் “இல்லை உடனே வரச் சொல்லு” என்று சொன்னால் “இல்லை அனுஷ்டானம் முடிந்த பிற்பாடு வருகிறேன்” என்று சொல்வார்கள்.

அவர்களுக்கு இராஜா என்ன செய்வானோ என்கிற பயம் இல்லை. என்ன செய்யப்போகிறான் என்னுடைய அனுஷ்டானத்தைவிட இராஜா எனக்கு ஒன்றும் பெரியது அல்ல. அவனுடைய கடமை முடிந்தபிறகு இராஜாவிடம் போனால் இராஜா “நான் உங்களுக்கு சொல்லி அனுப்பி ஒரு மணி நேரம் ஆகிவிட்டது. இப்போது வருகிறீர்களே” என்று கேட்பாராம். அப்போது அந்தப் பண்டிதர்கள் “அனுஷ்டானம் முடியவில்லை, அனுஷ்டானத்தை முடித்து விட்டு நேராக வந்து விட்டோம்.” என்பார்களாம். ஆனால் “என்னை காக்க வைத்து விட்டீர்களே” என்று இராஜா கேட்டால் அதற்கு “உங்கள் நன்மைக்காகத்தான் அனுஷ்டானம் செய்து கொண்டிருந்தோம். அனுஷ்டானம் ஒழுங்காக செய்வதால்தானே உங்ககது இராஜ்யத்துக்கும் உங்களுக்கும் க்ஷேமம் உண்டாகும். நடுவில் அனுஷ்டானத்தை விட்டுவிட்டு வந்தால் உங்களுக்கும் நல்லது ஆகாது. உங்கள் இராஜ்யத்திற்கும் நல்லது ஆகாது.” என்று சொல்வார்கள்.

எப்பேர்ப்பட்ட ஸ்ரத்தை இருந்தது அந்தப் பண்டிதர்களுக்கு. அந்த மகான்கள் எல்லோரும் நம் முன்னோர் என்று சொல்லிக் கொள்வதிலேயே திருப்திப்படுகிறோமே ஒழிய நாமும் அதுமாதிரி இருக்கவேண்டும் என்று நமக்கு யாருக்கும் வருவதில்லை. நம் முன்னோர் அந்த மாதிரி இருந்தார்கள். அவர்கள் யாருக்கும் பயப்பட்டுக் கொண்டிருக்கவில்லை.

தர்மத்திற்கு மேலே எதுவும் இல்லை. ஈஸ்வரனுக்கு மேலே எதுவும் இல்லை. என் தர்மானுஷ்டானத்திற்கு இடைஞ்சலாக இருந்தால் அந்தக் காரியம் எனக்குத்தேவையில்லை. அந்த மாதிரி ஒரு வைராக்யத்தோடு இருந்ததினால் அவர்கள் மகான்கள் ஆனார்கள். இன்றைக்கு அதற்கு மதிப்பு கொடுக்காமல் கேவலம் லௌகீகமான போகம் முக்யம். பணம்தான் முக்யம் பெயர்தான் முக்யம். லௌகீகமான உத்யோகம்தான் முக்யம். வேறு எதுவும் முக்யம் இல்லை என்கிற பாவத்தில் நாம் இருக்கிறோம். அப்போது பகவான் அவ்வளவு கஷ்டப்பட்டு அவதாரம் செய்து இந்த ராக்ஷஸ ஸம்ஹாரம் எல்லாம் செய்ததற்கு ப்ரயோஜனம் என்ன? அதனால் நாம் அது எல்லாவற்றையும் சரியாக கவனித்து நம்முடைய ஜீவனத்தில் தர்மானுஷ்டானத்திற்குத்தான் ப்ராதான்யம் கொடுக்கவேண்டும். அதற்குத்தான் இந்த மனுஷ்யஜன்மா வந்து இருக்கிறது. இந்த மனுஷ்ய ஜன்மா ரொம்ப துர்லபமானது. இந்த ஜன்மா போய் விட்டது என்றால் திரும்ப மனுஷ்யாளாகவே பிறப்போம் என்று யாருக்காவது உத்தரவாதம் உண்டா? கிடையாது. திரும்ப எந்த ஜன்மா வரப்போகிறதோ யாருக்குத் தெரியும். வேறு ஏதாவது ஜன்மா வந்தால் ஒன்றும் செய்ய முடியாதே. அதை நினைத்துக்கொண்டு இந்த ஜன்மாவிலேயே நாம் தர்மானுஷ்டானத்தை கூடுமான வரையிலும் அதிகமாக செய்து இன்னும் உத்தம ஜன்மா வருவதற்கு முயற்சி செய்யவேண்டுமே தவிர இந்த ஜன்மாவை கேவலம் கௌகீகமான விஷயத்திலேயே கழிப்பது கொஞ்சமும் ந்யாயமில்லை.

அதற்குத்தான் பகவத்பாதாள் இந்தச் சதுராம்னாய பீடாஸ்தாபனம் செய்தது. ஜனங்களுக்கு அடிக்கடி இந்த தர்ம விஷயத்திலே ப்ரபோதம் செய்யவேண்டும் என்று எண்ணினார். ஏனெனில் நமக்கு யாராவது சொல்கிறவர் ஒருவர் இருந்தால் ஒரு நாள் இல்லை ஒரு நாளைக்காவது நமக்கு நல்ல கார்யம் செய்ய வேண்டும் என்று தோன்றும். யாராவது சொல்கிறவர் ஒருவர் வேண்டும். நாம் வழி தவறினால் நீ வழி தவறுகிறாய் என்று சொல்கிறவர் வேண்டும். அதற்குத்தான் அந்தப் பரம்பரையை பகவத்பாதாள் ஏற்படுத்தினது. இந்தப் பரம்பரையிலே வரக்கூடிய ஆசார்ய புருஷர்கள் அந்தந்த காலத்தில் ஜனங்களுக்கு தர்ம மார்க்கத்தை காட்டவேண்டும். தொடர்ந்து செய்து வருகிறார்கள். யார் தர்ம மார்க்கத்தை மீறிப் போகிறார்களோ அவர்களுக்குச் சரியான மார்க தர்சனம் செய்வதையும் சரியான வழியில் கொண்டுவரவும் வற்புறுத்துகிறார்கள். அப்படி சொல்லியும் யார் செய்ய மாட்டார்களோ அது அவர்கள் பாபம், யாரும் ஒன்றும் செய்ய முடியாது.

மேலும் எந்த அளவுக்கு செய்ய முடியும். ஜனங்களுக்கு நல்லவழி சொல்லலாம். எப்படி இருப்பது உசிதம், எப்படி இருப்பது உசிதம் இல்லையென்று. ஒருவன் ஒரு வழியில் போய்க்கொண்டிருக்கிறான் அங்கே முன்னால் போனால் ஒரு குழி இருக்கிறது; அவனுக்குத் தெரியாது; நீங்கள் அங்கே அப்படியே போகாதீர்கள் அங்கே ஒரு குழி இருக்கிறது வேறு வழியில் போகலாம் என்று சொல்லலாம். தெரியும்! குழியில் விழவேண்டும் என்றுதான் போகிறேன் என்று சொன்னால் நாம் என்ன செய்வது? அவனுக்கு நாம் ஒன்றும் சொல்ல முடியாது. அதே மாதிரி நீ தர்ம மார்க்கத்தை விட்டுவிட்டால் ரொம்ப அனர்த்தமாகும். அதனால் தர்ம மார்க்கத்தை விடாதே என்று நாம் சொல்லலாம். அனர்த்தத்துக்குத்தான் நான் போவேன் என்று சொல்பவனை நாம் ஒன்றும் செய்ய முடியாது. அதனால் பகவத்பாதாள் அந்தந்த காலத்திலே ஜனங்களுக்கு தர்ம மார்க்கத்தை காண்பிக்கவேண்டும் என்பதற்காகத்தான் இந்தப் பீட ஸ்தாபனம் செய்தார். அதிலேயும் தக்ஷிணாம்னாய பீடாஸ்தாபனம் ச்ருங்கேரி க்ஷேத்ரத்திலே செய்து பகவத்பாதாள் மஹோபகாரம் செய்தார். அந்த ஸ்தானத்தினுடைய மகிமை என்ன? ச்ருங்கேரி என்கிற ஸ்தானத்தினுடைய மகிமை சகஜமான வைரம் இருக்கக்கூடிய த்வேஷம் இருக்கக்கூடிய சத்ருத்வம் இருக்கக்கூடிய இரண்டு ப்ராணிகள் ஸ்நேகத்தோடு மித்ரத்தை தேடிவாழ்ந்த இடம் ச்ருங்கேரி.

பாரதத்திலேயே எந்த ஒரு இடத்திலேயும் இந்த மாதிரி ஒரு சந்நிவேசத்தை யாரும் பார்க்கவில்லை. சங்கரருக்கு அப்படி ஒரு சந்நிவேசம் கண்ணிலே பட்டது. பாம்பும், தவளையும் ஸ்நேகத்தோடு வாழ்ந்த இடம் ச்ருங்கேரி. அதனால் இந்த இடத்திலே பீட ஸ்தாபனம் செய்வதுதான் ரொம்ப உசிதம் என்று தீர்மானம் செய்து சங்கரர் அங்கு பீட ஸ்தாபனம் செய்தார். சங்கரருடைய சிஷ்யர்களிலே வயதிலேயும், வித்யையிலேயும் பெரியவர் சுரேஸ்வரர். சங்கரருடன் நேராகவே சர்ச்சை, வாதம் செய்து கடைசியிலே சங்கரர் சொல்வதுதான் ஸர்வார்த்தமாக சரி என்று ஒப்புக்கொண்டு சங்கரருக்கு சிஷ்யரானவர். அப்பேர்ப்பட்ட சுரேஸ்வரரை ச்ருங்கேரியிலே முதல் ஆசார்யாளாக நியமித்தார். தொடர்ந்து சங்கிலியாக ஒரு பரம்பரையை ஏற்படுத்தினார் சங்கரர். எல்லாக் காலங்களிலேயும் இந்த தர்மப்ரசாரத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக இப்படி ஓர் அமைப்பை தோற்றுவித்தார்.

தர்மம் நடந்து கொண்டு இருந்தால்தான் தேசம் சுபிக்ஷமாக இருக்கும். எங்கே தர்மம் நடக்கவில்லையோ அங்கே சுபிக்ஷம் இருக்காது. எங்கே தர்மத்தின் விஷயத்தில் ஜனங்களுக்கு ஒரு ஸ்ரத்தை இல்லையோ அந்த இடத்திலே ஜனங்கள் சுகமாக வாழமுடியாது. எங்கே தர்மத்தின் விஷயத்தில் எல்லோரும் ரொம்பவும் ஸ்ரத்தையோடு இருந்து தங்களுக்கு கூடுமானவரை அனுஷ்டானம் செய்துகொண்டு இருக்கிறார்களோ அந்த இடத்தில்தான் சுபிக்ஷம் இருக்கும். அங்குதான் ஜனங்கள் சௌகர்யமாக வாழமுடியும். இந்த த்ருஷ்டியினால் சங்கரர் இந்தப் பீட ஸ்தாபனம் என்ற உத்தமமான கார்யம் செய்தார். இந்தப் பீடத்தை ச்ருங்கேரியில் ஸ்தாபனம் செய்தார்.
ஆனால் காலக்ரமத்திலே ஜனங்களுக்கு அவர்கள் இருக்கும் இடத்திலேயே பகவத்பாதாளுடைய ஸாந்நித்யம் சாரதாம்பாளுடைய ஸாந்நித்யம் வேண்டும் என்பதற்காக இந்தப் பீடத்தில் வந்த ஆசார்யார்கள் அங்கங்கே சங்கர மடங்களை நிர்மாணம் செய்து அங்கே பகவத்பாதாளையும், சாரதாம்பாளையும் ஸ்தாபனம் செய்தார்கள், செய்து வருகிறார்கள்.

அதனால் எல்லோருக்கும் சாரதாபரமேஸ்வரியையும் பகவத்பாதயும் சங்கரரை தர்சனம் செய்யக் கூடிய ஒரு பாக்யம் கிடைத்துள்ளது. அந்தஸந்நதியில் கொஞ்ச நேரம் உட்கார்ந்து த்யானம் செய்யக் கூடிய பாக்யம் நமக்குக் கிடைத்திருக்கிறது. சங்கரர் நமக்கு குரு. சாரதை சகல வித்யைகளுக்கும் அதிபதியானவள். நமக்கு வேண்டியது ஞானம். அந்த வித்யா தேவதையான சாரதையினாலேயும் குருவினாலேயும் கிடைத்துவிடும். ஏனெனில் ஞானத்துக்குச் சமானமான பவித்ரமான ப்ரும்மமான பொருள் இன்னொன்று இல்லை என்று பகவான் கீதையில் சொன்னார்

நஹிஞானேன ஸத்ருசம் பவித்ரமிஹ வித்யதே

அந்த ஞானம் யாரால் கிடைக்கும்? குருவினாலேயும் அந்த ஞானஸ்வரூபிணியான சாரதையினாலேயும்தான் நமக்கு ஞானப்ராப்தி ஆகும். அதற்காக தினந்தோறும் ஞான நாயகனான குருவையும் ஞானஸ்வரூபிணியான சாரதையையும் நாம் நமஸ்கரிக்க வேண்டும். ஸ்மரிக்கவேண்டும், ஆராதிக்கவேண்டும், தியானம் செய்யவேண்டும். அந்த த்ருஷ்டியிலே இந்த சங்கர மடங்கள் சங்கர பகவத்பாதாளையும் சாரதா பரமேஸ்வரியையும் ஸ்தாபனம் செய்வது என்பது அநேக ஆண்டுகளாக சம்ப்ரதாயத்தில் வந்த விஷயம்.

எங்கள் பரமேஷ்டி குருநாதர் ஜகத்குரு ஸ்ரீசச்சிதானந்த சிவாபிநவ நரஸிம்மபாரதீ ஸ்வாமிகள் எங்க பரமகுருநாதர் ஸ்ரீசந்த்ரசேகரபாரதீ மகாஸ்வாமிகள் எங்கள குருநாதர் ஸ்ரீ அபிநவ வித்யா தீர்த்த மகாஸ்வாமிகள் இந்த சங்கர மடங்களெல்லாம் ஆங்காங்கு நிர்மாணம் செய்து ஜனங்களுக்கு மஹோபகாரம் செய்தார்கள்.


உங்கள் எல்லோருக்கும் இருக்கிற ஒரேஒரு தீர்மானம் நமது குரு ச்ருங்கேரி ஜகத்குரு. அவர் என்ன சொன்னாலும் அதை நாம் செய்யவேண்டும் என்கிற ஒரே ஒரு தீர்மானம் உங்களுக்கு.

அந்தத் தீர்மானத்தில் இந்த சங்கரமட நிர்மாணத்திலேயும் நீங்கள் விசேஷமான ஓர் அபிமானத்தைக் காட்டினீர்கள். பகவத்பாதாள் சாரதா பரமேஸ்வரியுடைய ஸாந்நித்யம் இந்த இடத்தில் விசேஷமாக இருக்கிறது. அது உங்கள் எல்லோருக்கும் அத்யந்த பாக்யமான விஷயம். உங்கள் எல்லோருக்கும் பரிபூர்ணமான ஆசிர்வாதம் செய்து சாரதாசங்கரரின் அனுக்ரஹம் பூர்ணமாக இருக்கட்டும் என்று சொல்லி இந்த பாஷணத்தை இங்கு முடிக்கிறேன்.

ஹர நம: பார்வதி பதயே
ஹர ஹர மகாதேவா

- ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகள்