Sunday 23 February 2014

காயத்ரி உபாஸனையே சிறந்தது

நான் சில பையன்களுக்கு வேதத்தைச் சொல்லித் தர ஏற்பாடு பண்ணினேன். பையன்கள் எல்லோரும் ரொம்ப லக்ஷணமாகச் சொல்கிறார்கள். அவர்களுக்கு ஒரு பரீக்ஷையும் பண்ண வைத்தோம். அந்தப் பரீக்ஷையில் பையன்கள் நன்றாக பாஸ் ஆகிவிட்டார்கள். அவர்களுக்கு சந்நிதானம் கையால் சர்டிபிகேட் கொடுக்கவேண்டும் என்று சொன்னார். அப்பொழுது நான் சொன்னேன், “அதெல்லாம் எனக்கு ரொம்ப சந்தோஷம் தான்; அந்தப் பையன்கள் ஒழுங்காக சந்தியாவந்தனம் செய்கிறார்களா? ஒழுங்கா பரிசேஷண மந்திரம் தெரியுமா? அவர்களுக்கு ஒழுங்கா அபிவாதயே தெரியுமா?” அப்படின்னு கேட்டேன். “சந்நிதானம் இப்படி கேட்டால் நாங்களே பெயிலாகி விடுவோம்” என்றார் அவர். “இந்த விஷயத்திலேயே நீங்கள் கவனம் செலுத்தாமல், அவர்களுக்கு வேதம் சொல்லித் தருகிறோம் என்றால் அதில் அர்த்தமில்லை. இது வந்து, அடிப்படையான விஷயம். அடிப்படையான விஷயத்திலேயே கவனம் செலுத்தாவிட்டால், மேற்படி விஷயத்திற்குப் போய் கவனம் செலுத்துவதில் அர்த்தமில்லை. அதனால், பையன்கள் முதலில் ஒழுங்காக சந்தியாவந்தனம் பண்ணும்படி செய்யுங்கோ. அது அத்யாவசியமானது” என்று சொன்னேன். அதே போல், ‘இந்தப் பையன்களுக்கு எல்லாம் பூணூல் போட்டாகிவிட்டது ; அதனால் எல்லாம் சரியாப் போச்சு’ என்று யாரும் நினைத்துக் கொள்ளக் கூடாது.
இன்றிலிருந்து, இந்தப் பையன்களுக்கு முதலில் சாப்பிடும்பொழுது எந்த மாதிரி சாப்பிட வேண்டும்? அதாவது பரிசேஷணம் பண்ணி சாப்பிடுவதென்றால் எப்படி? என்பதைச் சொல்லித் தரவேண்டும். அதேபோல் தினமும் ஒவ்வொரு வேளையும் தவறாமல் சந்தியாவந்தனம் பண்ண வைக்க வேண்டும். அனேகம் பேருக்கு பூணூல் போட்ட அன்று கூட சந்தியாவந்தனம் சொல்லித் தருவது கிடையாது. மீதி விஷயத்தைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். அந்த மாதிரி இருந்தால் அந்தப் பூணூலைப் போட்டு என்ன பிரயோஜனம்? ‘காயத்ரி உபாஸனை’ பிராம்மணனுக்கு ஒரு பெரும் சொத்து. நான் அனேகம் பேருக்கு சொன்னேன், ‘நமக்கு இருக்கிற சொத்து என்பது காயத்ரி உபாஸனைதான்’. எங்கப்பா ரூபாய் வைத்துவிட்டுப் போயிருக்கிறார், நிலம் வைத்துவிட்டுப் போயிருக்கார் என்றால், அந்த ரூபாயும் நிலமும் ரொம்ப நாள் நிற்காது. ஆனால் உங்கப்பா உனக்கு உபதேசம் பண்ணின காயத்ரி மந்திரத்தை நீ ஒழுங்காக ஜபம் பண்ணிக்கொண்டு வந்தால், அதுதான் உனக்குப் பெரும் சொத்து என்று நினைத்துக்கொள். அநேகம் பேர் என்னிடம் வந்து, ‘சந்நிதானம் எனக்கு மந்திர உபதேசம் கொடுக்கணும்’ என்று கேட்பார்கள். நீ முதலில் காயத்ரியை ஒழுங்கா பண்ணிக் கொண்டு இருக்கிறாயா’? அப்படி என்று கேட்டால், “ஆபீஸிற்கு சீக்கிரம் போக வேண்டியிருக்கிறது. அதற்கு ‘டைம்’ கிடைக்க மாட்டேன் என்கிறது. சந்நிதானம் ஓர் உபதேசம் கொடுத்தால்...” என்பார்கள். “என்ன ஓய்! காயத்ரிக்கே டைம் கிடைக்க மாட்டேன் என்கிறது, ‘சந்நிதானம் ஓர் உபதேசம் கொடுத்தால்... என்கிறீர்களே!” இது சரியில்லை. “நீங்கள் ‘காயத்ரியை சரியாக ஜபம் செய்கிறேன்’ என்று என்னிடம் வார்த்தை கொடுங்கோ. நான் உங்களுக்கு மந்திர உபதேசம் செய்கிறேன். உங்களுக்கு காயத்ரியிலே ச்ரத்தை இல்லை என்று சொன்னால், மீதி மந்திரத்தை வாங்கி என்ன பண்ணப் போறேள்?

ந காயத்ர்யா: பரோ மந்த்ரோ ந மாத்ரு தைவதம் பரம்

என்று சாஸ்திரம் காயத்ரியை மீறின இன்னொரு மந்திரம் இல்லை. அம்மாவுக்கு மீறி, இன்னொரு கடவுள் இல்லை என்பது சாஸ்திரம். இந்த இரண்டையும் நாம் ஏற்றுக் கொள்வதே இல்லை. காயத்ரி உபாசனை விஷயத்திலே ரொம்ப உபேக்ஷை. அம்மாவைப் பற்றியும் ரொம்ப உபேக்ஷை. இது சரியில்லை. அதனால், இன்றைக்கு உபநயனம் ஆன இந்தப் பையன்கள் எல்லோருக்கும், கால காலத்துக்கு சந்தியாவந்தனத்தை செய்ய வைக்க வேண்டிய பொறுப்பு, அந்தப் பெற்றோர்களுடையது என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும். ஆனால் அநேகம் அப்பாக்கள் சொல்வார்கள், “எனக்கே சந்தியாவந்தனம் செய்ய வராது, நான் எப்படி பையனுக்குச் சொல்லித் தரட்டும்?” அப்படி என்று. அப்பொழுது, வாத்யாரை வைத்துக்கொண்டு, நீங்களும் உங்க பையனும் இரண்டு பேரும் சொல்லிக் கொள்ளுங்கள். ஆமாம். சிலபேருக்கு ரொம்ப சங்கோஜம். “எனக்கு இவ்வளவு வயது வந்ததற்கப்புறம் நான் சொல்லிக் கொள்வது என்றால், என்ன அர்த்தம்?” அப்படி என்று. ஆனால் இந்த ஒரு விஷயத்தில் மட்டும் இந்த வயது என்பது ஒன்றும் குறுக்கே வரக்கூடாது. இது வரை நான் ஒழுங்காக நடந்து கொள்ளவில்லை என்று சொன்னால், இனிமேலாவது ஒழுங்காக நடக்க வேண்டும் என்கிற நினைவு வரவேண்டும் என்பது ஒரு தப்பா? வயதானவன், ஒழுங்காக நடந்து கொள்ளக்கூடாது என்பது, எங்கேயாவது உண்டா? அதனால், உங்களுக்கு சந்தியாவந்தனம் தெரியாது என்றால், உங்கள் மகனுடைய நன்மைக்காவது நீங்கள் சந்தியாவந்தனம் செய்தால், பிறகு அவர் சந்தியாவந்தனம் செய்வான். நீங்கள் சந்தியாவந்தனத்தை விட்டுவிட்டால், உங்கள் பையனும் முதலிலேயே விட்டு விடுவான். அவனைக் கேட்டால் என்ன சொல்லுவான்? “எங்கப்பா ஒன்றும் செய்வதில்லை ; நான் எதற்கு செய்ய வேண்டும்? “அப்படி என்றுதான் அவன் கேட்பான்.

பகவான் பகவத் கீதையில் சொல்வார், ‘நான் செய்ய வேண்டியது ஒன்றும் இல்லை; ஆனால் நான் பேசாமல் இருந்தேன் என்றால், எல்லாரும் கெட்டுப் போய் விடுவார்கள். அதனால் நான் சரியாய் இருக்கிறேன்’ என்றார் பகவான். அப்படி பகவானே சொல்லியிருக்கும் பொழுது, நாம், நம் பையன்களை ஒழுங்கான ரீதியில் வைக்கவேண்டும் என்பதற்காகவாவது நாம் சரியான ரீதியில் இருக்கவேண்டும் என்ற நினைவு நமக்கு வரவேண்டாமா? அதனால், இந்த விஷயத்திலே, யாரும் எந்த விதமான ஒரு சோம்பலுக்கும் அவகாசம் கொடுக்காதீர்கள். நாம் இப்படி பச்சையாகச் சொல்வதற்காக யாரும் தப்பாக் நினைத்துக் கொள்ளக் கூடாது. ஏன் என்றால் இந்த விஷயத்தை வேறு யாரும் சொல்வதற்கு இல்லை. வேறு எந்த உபன்யாசங்களை நான் கேட்கப் போனாலும் எனக்கு இந்த மாதிரி விஷயங்கள் கிடைப்பதில்லை; அதனால் இந்த விஷயத்தில் எல்லோரும் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

இது நம்முடைய பரம்பரையாக வந்திருக்கக்கூடிய நம் தர்மம். நமக்கு பரம்பரையாக வந்திருக்கக்கூடிய தர்மத்தை எந்த பரிஸ்திதி (சூழ்நிலை)யிலும் நாம் விட்டு விடக் கூடாது. நாம் எல்லோரும் நம்முடைய முன்னோர்களைப் பற்றி ரொம்பவும் பெருமையாகச் சொல்லிக் கொள்ளுவோம். அவர் சோமயாஜீ; அவர் மகாபண்டிதர்; அவர் ஆஹிதாக்னி என்று சொல்லுவோம். அப்பேர்ப்பட்ட சோமயாஜிக்கும், மகாபண்டிதருக்கும், ஆஹிதாக்னிக்கும் பேரன்களாகவோ, கொள்ளுப் பேரன்களாகவோ பிறந்துவிட்டு, இந்த ஒரு சந்தியாவந்தனம் கூட பண்ணுவதில்லை என்று சொன்னால், பாவம் அவர்கள். சொர்க்கத்தில் இருப்பவர்கள், மிகவும் பரிதாபத்தோடு இருப்பார்கள். நம்முடைய வம்சத்திலே பிறந்து, இப்படி ஒரு வ்ராத்யனாக இருக்கிறானே, நம்முடைய பேரன், நம்முடைய கொள்ளுப்பேரன் என்று சொல்லி, அவர்கள் அப்படி பரிதாபம் படக்கூடாது என்பதற்காகவாவது நாம் நம்முடைய தர்மத்தைச் செய்ய வேண்டும். நம்முடைய கடமையை நாம் அனுஷ்டிக்க வேண்டும். சிருங்கேரி மடத்தில் இந்த தர்மோபநயனங்களை நடத்துவது என்பது வெகு காலமாக வந்திருக்கிற சம்பிரதாயம். இந்த சம்பிரதாயத்தை இங்கே அனுஷ்டிக்க வேண்டும் என்பதற்காக இந்த தர்மோபநயனங்களை ஏற்பாடு செய்தோம்.

இன்னொரு விஷயம், பையன்களுக்கு சாதாரணமாக சிறிய வயதிலேயே எச்சில் என்பது தெரியவேண்டும். விரல் கடித்துக்கொண்டே இருப்பார்கள். நகங்களை பல்லினால் எடுத்துக் கொண்டே இருப்பார்கள். ஆனால் உபநயனத்திற்குப் பிறகு இது ‘உச்சிஷ்டம்’; உச்சிஷ்டம் என்றால் எச்சில் என்பது தெரிந்திருக்க வேண்டும். கைவிரல் தப்பித் தவறியாவது வாயில் போய்விட்டது என்றால், அதை அலம்பிக்கொண்டால் தான் அது சுத்தியாய் இருக்கும். ஆனால் இந்த விஷயத்தை அப்பாக்களே அப்படி செய்து கொண்டிருந்தால் இந்தப் பையன்கள் என்ன செய்வார்கள்? அநேகம் பேர் பல்லில் ஏதோ அழுக்கு இருக்கிறது என்பதற்காக ‘டக்கென்று’ அதை எடுத்துவிடுவார்கள், வாயில் விரல் போட்டு. ஆனால் அதை அலம்பிக் கொள்ள வேண்டும் என்ற நினைவு ஒருத்தருக்கும் இருக்காது. ஆனால் அது உச்சிஷ்டம், எச்சில் என்கிற அசூயை இருக்க வேண்டும்.

நான் பையன்கள் எல்லோருக்கும் ஒன்று சொல்வது, உங்களுக்கெல்லாம் உபநயனம் ஆகிவிட்டது என்று சொன்னால், இது ஒரு புது ஜன்மம். பிராம்மணனுக்கு இரண்டு ஜன்மங்களாம். முதலில் அம்மா வயிற்றிலிருந்து வருவது ஒரு ஜன்மம். உபநயனம் என்பது இரண்டாவது ஜன்மம். அந்த ஜன்மத்திலே அம்மா, அப்பா, யார் என்பது எல்லோருக்கும் தெரியும். இந்த ஜன்மத்திலே அம்மா, அப்பா யார்? என்று கேட்டால், காயத்ரி தான் அம்மா. காயத்ரி மந்திரத்தை உபதேசம் செய்பவர்தான் அப்பா. அப்படி ஒரு இரண்டாவது ஜன்மம் நமக்குக் கிடைத்திருக்கிறது. இதிலே நாம் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். அதிக ச்ரத்தையோடு இருக்க வேண்டும். மிகுதியான விச்வாஸத்தோடு இருக்க வேண்டும். எல்லோரும் இதை நன்றாகப் புரிந்துகொண்டு, யாரும், தவறாமல் சந்தியாவந்தனத்தை, காயத்ரி ஜபத்தைச் செய்துகொண்டு வந்து ச்ரேயஸை அடைய வேண்டியது; சிருங்கேரி ஜகத்குரு மஹா சமஸ்தானத்திலே, உங்களுக்கு இந்த சங்கர ஜெயந்தி மஹோத்ஸவம் சந்தர்ப்பத்திலே பூணுலானது உங்களுடைய மஹா பாக்யம். சங்கரர் என்றால் நம் எல்லோருக்கும் பரம ஆராத்யமான லோககுரு. அவர் அவதாரம் செய்த இந்த நாள் பரம பவித்ரமான நாள். நான் சொன்ன விஷயங்கள் எல்லாவற்றையும் எப்பொழுதும் ஞாபகப்படுத்திக் கொண்டிருந்து, அதன்படியே நடந்து ச்ரேயஸை அடையவேண்டியது என்று சொல்லி, திரும்பவும் இந்தக் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு இருக்கவேண்டிய பொறுப்பை எப்பொழுதும் ஞாபகத்தில் வைத்துக்கொண்டு, அதன்படி அந்தப் பொறுப்பை நிர்வகிக்க வேண்டும் என்று சொல்லி, இந்த வார்த்தையை இங்கே முடிக்கிறேன்.

ஆக்கம்: சாரதா ரமணன்

நன்றி: அம்மன் தரிசனம் மாத இதழ்

Saturday 22 February 2014

மனிதன் தார்மீகனாக இருக்கவேண்டும் - ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகள்


பொதுவாக சாஸ்த்ரத்தில் கேட்டுக் கொண்டிருப்போம். என்ன இதற்கு அர்த்தம் என்று கேட்டால் எதைச் செய்தால் நமக்கு நல்லதாகும் என்று சாஸ்த்ரம் சொல்கிறதோ அது தர்மம். எதைச் செய்தால் நமக்குக் கெடுதலாகும் என்று சாஸ்திரம் சொல்கிறதோ அது அதர்மம். தர்மம், அதர்மம் என்கிற இரண்டு சப்தங்களுக்கு இது மிக சுருக்கமாகச் சொல்லக் கூடிய அர்த்தம். இந்த தர்மத்தினாலேயும் அதர்மத்தினாலேயும் நமக்கு நல்லது உண்டாகும், கெடுதல் உண்டாகும் என்று சொல்லுகிறோமே அது இந்த ஜென்மத்திலேயே என்று இல்லை அடுத்த ஜென்மத்திலே என்கிறதும் உண்டு.


நாம் இந்த ஜென்மத்தில் நல்ல கார்யத்தைச் செய்தால் ஜென்மாந்திரத்தில் அதனுடைய பலனான சுகத்தை அவசியம் அனுபவிப்போம். அதேபோல் இந்த ஜென்மத்தில் நாம் அதர்மத்தை ஆசரித்தால் அதனுடைய பலனாக துக்கத்தை அடுத்த ஜென்மாவில் அவசியம் நாம் அனுபவிக்க வேண்டி வரும். அதனால் இந்த தர்மாதர்மங்களின் பலத்தை இந்த ஜென்மத்திலேதான் நாம் அனுபவிக்க வேண்டும் என்ற நியமம் இல்லை. எதற்காகச் சொல்லுகிறேன் என்று கேட்டால் அதர்மத்தைச் செய்தால் கெடுதல் உண்டாகும் என்று சொன்னோம். அநேகம் பேர் “அது எப்படி நாங்கள் எங்கள் இஷ்டப்படி செய்கிறோம். எங்களுக்கு ஒன்றும் ஆகவில்லை. சரியாகத்தான் இருக்கிறோம்.” என்று சொல்லுவார்கள். நீங்கள் இப்போதைக்கு சரியாக இருக்கலாம். ஆனால் அதனுடைய பலன் ஜென்மாந்தரத்தில் நிச்சயமாக உங்களுக்கு அந்த துக்கம் அவசியம் வரும். இந்த விஷயத்தில் ஐயமே வேண்டாம்.

பகவான் நமக்கு பகவத் கீதையை உபதேசம் செய்தார். பகவத் கீதையிலே அநேக தத்வங்களை பகவான் நமக்கு உபதேசம் செய்தார். அந்த தத்வங்களை பகவான் உபதேசம் செய்யும் போது மனிதர்களை இரண்டு விதமாகப் பிரித்துச் சொன்னார். சில மனிதர்கள் தைவீ சம்பத்தோடு இருப்பார்கள். சிலர் ஆஸுர்ய சம்பத்தோடு இருப்பார்கள் என்று சொன்னார். தைவீசம்பத்து இருப்பவர்களுக்கும் அஸுர்ய சம்பத்து இருப்பவர்களுக்கும் வித்யாசம் என்று கேட்டால் “தைவீசம்பத்து மோஷாயா நிபந்தி அஸுரிமதா” என்று சொன்னார். தைவீசம்பத்து இருப்பவனுக்கு முக்தி. அஸுர்ய ஸம்பத்து இருக்கிறவனுக்கு பந்தம். பந்தம் என்று சொன்னால் இந்த ஸம்சார சக்ரத்திலே திரும்ப, திரும்ப சுற்றிக் கொண்டே இருப்பது. அதற்கு இன்னொரு விளக்கம் சொல்லப்போனால் இந்தப் பிறவி, மரணம் இரண்டும் மாறி, மாறி வந்துகொண்டே இருக்கிறது. இந்த பந்தம் என்பது நமக்கு இருக்கும் சமயத்தில் ஓர் இடத்தில் துர்வாஸர் சொன்னார் “நானாயோனி ஸஹஸ்ர ஸம்பவ விஸாக்யாதா ஜனன்ய கஸ.” ஐயோ! எத்தனை தாயார்கள் வயிற்றில் நான் பிறந்தேனா, எத்தனை தந்தைகள் எனக்கு ஆகிவிட்டார்களோ அதற்கு கணக்கே கிடையாது. எத்தனையோ ஜென்மங்கள் ஆகிவிட்டது. ஒவ்வொரு ஜென்மத்திலேயும் நல்லதோ கெட்டதோ என்னமோ பண்ணினேன். அந்த ஜென்மாவை முடித்தேன். திரும்ப இன்னொரு ஜென்மா வந்தது. அதிலேயும் என்னவெல்லாமோ பண்ணினேன். இப்படி அநாதியாக வந்து கொண்டே இருக்கிறது. இப்படியே இருக்கட்டும் என்று சொன்னால் அதற்கு யாரும் விவேகிகள் சம்மதிக்க மாட்டார்கள். எங்களுக்கு இந்த துக்கம் போதும், இனி இந்த துக்கம் வேண்டாம் என்றுதான் விவேகிகள் சொல்லுவார்கள். பிறவி என்பது வந்துவிட்டது என்று சொன்னால் பின்பு நாம் எவ்வளவு துக்கத்தை அனுபவிக்க வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் தன்னுடைய மனசாக்ஷியைக் கேட்டால் தெரியும். இன்னொருத்தனுக்கு சொல்லவே வேண்டாம். பிறவி என்பதே ஒரு பெரிய துக்கம்.

பகவத்பாத சங்கரர் “சிவாபராத ஸமர்பண ஸ்தோத்ரம்” சொல்லும் சமயத்துலே சொன்னார்

“ஆதௌ கர்ம ப்ரசங்காத் கலஹதி கலுஷம்
மாத்ரு குக்ஷோஸ்திதம்மாம்
ஷண்மூத்ரான் அமேத்ய மத்யே க்வதயதி நிதாரம்
ஜாடரோ ஜாதவேதா.”

தாயார் வயிற்றில் இருக்கும் சமயத்துலே எவ்வளவு கஷ்டத்தை அனுபவிக்க வேண்டி வருகிறது என்பது யாருக்கும் சொல்லவே முடியாது. பகவான் ஒரு விசித்ரம் நமக்குப் பண்ணி இருக்கிறான். தாயார் வயிற்றில் இருந்த சமயத்துலே எப்படி எல்லாம் இருந்தோம் என்பதை நமக்கு ஞாபகம் இல்லாமல் பண்ணிவிட்டான். அது நமக்கு ஒரு பெரிய உபகாரம் அவன் பண்ணினது. அதெல்லாம் ஞாபகப் படுத்திக் கொண்டால் ரொம்ப கஷ்டம் ஆகிவிடும். ஆனால் யாரைக் கேட்டாலும் “மாத்ரு கர்ப்பத்திலே எப்படி இருந்தாய்?” என்று கேட்டால் “எனக்குத் தெரியாது. ஆனால் அதை அனுபவிக்கும்போது மட்டும் எனக்கு இனிமேல் இது வேண்டாம். இனிமேல் மாத்ரு கர்பத்துக்கு வர வேண்டாம் என்று” அந்த சமயத்தில் “ஒவ்வொரு ஜீவனும் சொல்லிக் கொண்டு இருக்குமாம். சாதாரணமாகவே ஒருவரை ஒரு தப்பு பண்ணி இருந்தால் அவனுக்கு ஒரு பெரிய தண்டனையை நீதிபதி கொடுத்து விட்டால் அந்த சிக்க்ஷை அனுபவிக்கும்போது இனி எப்போதுமே இந்தத் தவற்றை நான் பண்ணக்கூடாதப்பா! இனி எனக்கு என்றைக்குமே இந்த சிக்க்ஷை வரக்கூடாது என்று சொல்லுவார்கள். ஆனால் ஜெயிலிலிருந்து வந்த பின்பு திரும்ப அவன் அந்தக் கார்யத்துக்குத்தான் போகிறான். அதேபோல் அந்த மாத்ரு கர்ப்பத்தில் இருப்பது, அந்த ஒன்பது மாசம் அதுவே ஒரு பெரிய சாதனை. வந்தாச்சு உலகத்துக்கு, இனி ஒன்றும் கவலையில்லை, என்று சொல்ல முடியுமா? பால்யம் அது ஒரு தீராத துக்கக்கதை ஏனென்று கேட்டால், பசிக்கும் ஆனால் பசிக்கிறது என்று சொல்லத் தெரியாது. ஏதாவது ஓர் எறும்போ ஏதாவது கடிக்கும். கடிக்கிறது என்று சொல்லத் தெரியாது. எல்லாத்துக்கும் அழுவது ஒன்றுதான் தெரியும் குழந்தைக்கு. அது அழுவதைப் பார்த்துவிட்டு நாம்தான் அதற்கு வேண்டியதைச் செய்ய வேண்டும்.


அப்போது அது என்ன சௌக்யமா? கிடையாது. இல்லை ஒரு 5, 6, வயது வந்ததுக்குப் பிற்பாடு அப்போது எல்லாம் பேசத் தெரிகிறது. ஒன்றும் கஷ்டம் இல்லையே என்று சொன்னால் ஸ்கூலுக்குப் போகச் சொல்கிறார்கள். வீட்டிலே இருக்க விடமாட்டேன் என்கிறார்கள். அப்போது என்ன செய்வது? சரி வீட்டில் பிடுங்கல் தாங்க முடியாமல் ஸ்கூலுக்குப் போனால் அங்க வாத்யார் சும்மா இருக்க மாட்டேங்கறார். இந்த ஹோம் ஒர்க் பண்ணு, அதைப்பண்ணு, இதைப்பண்ணு என்று சொல்லி விடுகிறார். இனி அவருடைய பிடுங்கலும் தாங்க முடியவில்லை. வீட்டினுடைய பிடுங்கலும் தாங்க முடியவில்லை. என்ன பண்ணுவதென்று தெரியவில்லை. இப்படி கொஞ்ச நாள் ஓடுகிறது. பின்பு சரி ஓரளவுக்கு படித்தாகி விட்டது என்று சொன்னால் இது முடிய என்னவோ சுதந்திரமாக இருந்தோம். பின்பு கல்யாணம் என்று ஒரு சாஸ்த்ரம் பண்ணி விடுகிறார்கள். அதன்பின்பு அது இன்னும் பெரிய நரகமாக இருக்கிறது. இதெல்லாம் பார்க்கும்போது ஜீவனத்துலே சுகம் என்பது எவ்வளவு இருக்கிறது? மொத்தமாக பார்க்கும்போது துக்கம்தான் அதிகமாக இருக்கிறதே தவிர சுகம் என்பது கிடையாது. அது ரொம்ப அத்யல்பமாக இருக்கிறது. இப்படி இருக்கும்போது திரும்ப ஜென்மம் வேண்டும் என்று யார் கேட்பார்கள்? விவேகியானவன். “எனக்கு வேண்டாமப்பா ஜென்மம். அது வந்தால்தான் இவ்வளவு கஷ்டம்.” என்பான்.


நம்முன்னோர் ஒரு ஸ்லோகம் சொல்லிக்கொண்டு இருந்தார்கள். சுருக்கமாக, “ஜென்ம துக்கஞ்ஜரா துக்கம் ஜாயா துக்கம் புனபுன ஸம்ஸார ஸாகரம் துக்கம் தஸ்மாத் ஜாக்ர ஜாக்ரத” இதெல்லாம் ஜென்ம துக்கம். பிறவி என்பது துக்கம். முதலில் சொல்லி ஆகிவிட்டது ஜரா துக்கம் = இந்த வயசான காலத்துலே இருக்கக்கூடாது என்று நிறையப் பேர் என்னிடம் சொன்னார்கள். “ஸ்வாமிகளே! வயசாகி விட்டது என்றால் இனி இந்த உலகத்துலே இருக்கக் கூடாது. வேகம் போய் விடவேண்டும்.” “எதுக்கு அப்படி சொல்றீர்!” “இல்லை அது அனுபவத்துக்கு வந்தால்தான் தெரியும். நாங்கள் ஒன்றும் சொல்ல முடியாது. ஆனால் இந்த ஸ்திதி வேண்டாம். காரணத்தை என்னடாவென்று கேட்டுப் பார்த்தால் தான் நல்ல பூர்வ வயசுலே இருந்த சமயத்துலே யார் மேலெல்லாம் ப்ரீதியை வைத்து அவர்களுக்காக தான் எவ்வளவோ உழைத்து அவர்களை வளர்த்தேனோ அந்தப் பசங்கள் இந்த வயசான காலத்துலே இந்த பெரியவரை திரும்பி பார்க்கவும் மாட்டான். ஐயா! எப்படி இருக்கேள் என்பதைக் கேட்கவும் மாட்டேன் என்கிறான். அப்படி இருக்கும் போது இருக்கணுமா? இங்கு நாம் இந்த ஸ்திதியிலே இருக்கணுமா? எந்தக் கார்யத்தையும் தானாக பண்ணிக்கொள்ள முடியாது. இன்னொருத்தனுடைய தயவு தேவை இருக்கிறது. யாரும் வரமாட்டேன் என்கிறார்கள். அதனால்தான் “ஜராதுக்கம்” “ஜாயாதுக்கம்” என்னமோ ஆரம்பத்திலே கல்யாணம் பண்ணிக்கொள்ள வேண்டும் என்று நிறையப் பேருக்கு என்ன நூற்றுக்குத் தொண்ணூற்று ஒன்பது பேருக்கு கல்யாணம் பண்ணிக் கொண்டால் அந்த சௌக்யத்தை அனுபவித்தால்தான் தெரியும் என்று கல்யாணம் பண்ணிக்கொண்டு விடுகிறார்கள். பின்பு ஏனப்பா இதிலே இறங்கினோம். சௌக்யமாக இருந்திருக்கலாமே? இப்போது பெரிய கிணற்றுக்குள்ளே இறங்கின மாதிரி ஆகிவிட்டது. மேலுக்கு வரவே முடிவதில்லை” என்று சொல்லி விடுகிறார்கள்.
ஒருவர் என்னிடம் ப்ரத்யக்ஷமாகச் சொல்லி விட்டார். ரொம்பப் பெரிய மனிதர்தான். பெரிய ஸ்திதியிலே இருக்கிறவர். எனக்கு ஸந்நிதானத்தின் சகவாசம் சிறு வயதிலேயே ஆகி இருந்தால் கல்யாணமே பண்ணிக் கொண்டு இருக்க மாட்டேன்” என்றார். அந்தக் கஷ்டம் வந்து இப்போது ஆசார்யார் உபன்யாசத்தினாலேயும் என்னுடைய அனுபவத்தினாலேயும் எனக்கு இப்போது தெரிகிறது என்றார். அதனால் இந்த உலகத்திலே சுகம் என்பது அத்யல்பமாக இருக்கிறது. துக்கம்தான் நிறைய இருக்கிறது. அதனால் எவனும் இந்த ஜென்ம ஜராபரண சக்ரத்துலே சுற்றணும் என்பதை விரும்பவே மாட்டான். ஆனால் எவனுக்கு தைவீசம்பத்து இல்லையோ அசூர்யஸம்பத்து இருக்கிறதோ அவனுக்கு இந்த சக்ரத்திலிருந்து விடுதலை என்பது இல்லவே இல்லை. சுற்றிக்கொண்டே இருக்கவேண்டும். தைவீ ஸம்பத்து இருக்கிறவனுக்கும் ஆஸுர்ய ஸம்பத்து இருக்கிறவனுக்கும் வித்யாசம் இவன் தார்மீகனாக இருப்பான். அவன் அதார்மீகனாக இருப்பான். மொத்தத்திலே சொல்லப்போனால் இவனுக்கு எப்போதும் தர்மத்திலேயே மனசு போய்க் கொண்டிருக்கும், அவனுக்கு எப்போதும் அதர்மத்திலேயே மனசு போய்க்கொண்டிருக்கும்.


அது எப்படி? என்று சொன்னால் ராமாயணத்திலிருந்து உதாரணம் காட்ட வேண்டி இருந்தால் ராவணன், விபீஷணன். ராவணனுக்கு எப்போதும் அதர்மத்திலேயே மனசு. விபீஷணனுக்கு எப்போதும் தர்மத்துலேயே மனசு. அவன் சொல்லிக் கொண்டே இருந்தான். விபீஷணன், ராவணனிடம் “அண்ணா! நீ பண்ணியது பெரிய தப்பிதம். இந்தத் தப்பிதத்தைச் செய்யக்கூடாது. நீ மரியாதையாக அந்த சீதாமஹாதேவியை ராமர் ஸந்நிதியில் ஒப்பித்துவிட்டு நமஸ்காரம் பண்ணிவிட்டு வா.” அது ராவணனுக்குப் பிடிக்கவில்லை. எப்படி பிடிக்கும்? ஸம்ஸ்க்ருதத்திலேயே ஒரு வசனம் உண்டு. “வினாச காலே விபரீத புத்தி” என்று அவனுக்கு ராவணனுக்கு, வினாச காலம். அதனால் விபீஷணன் என்று இல்லை யார் நல்லது சொன்னாலும் அவனுக்கு ஏறவே இல்லை.
உலகத்துலேயும் அநேகம் பேருக்கு நாம் ஒரு நல்லது சொல்லப்போனால் அந்த சமயத்துலே அவர்களுக்கு அது மண்டையில் ஏறாது. ஏனெனில் அவர்களுக்கு ஓர் அனர்த்தத்தை அனுபவிக்க வேண்டிய சமயம் வந்திருக்கும்போது யார் நல்லது சொன்னாலும் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். அதே ஸ்திதி ராவணனுக்கு ஆகிவிட்டது. அவன் கேவலம் அஸுர்ய ஸம்பத்துடன் இருந்ததனால் அவனுக்கு வினாசம் ஸம்பவித்தது.
அதுவே விபீஷணன் தைவீ ஸம்பத்தோடு இருந்ததனால் அவனுக்கு பகவான் ஸ்ரீராமசந்த்ரனுடைய பரிபூர்ணமான அனுக்ரஹம் கிடைத்தது. பரம பாகவதோத்தமன் என்று நாம் எல்லோரும் கௌரவிக்கிறோம். அதனால் முக்யமாக மனிதன் தார்மீகனாக இருக்கவேண்டும். அதார்மீகனாக இருக்கக் கூடாது. மனசு எப்போதும் தர்மத்தைச் செய்யவேண்டும் என்பதில்தான் போகவேண்டுமே தவிர அதர்மத்தைச் செய்யணும் என்பதில் போகக்கூடாது. சாராம்சம். “அப்போது எல்லோருக்கும் என்ன தர்மம் தர்மம் என்கிறீர்கள்? நான் என்ன பண்ணனும்?” என்று சொல்கிறீர்கள் நீங்கள். அநேகம் பேர் கேட்டார்கள். “ஸ்வாமிகளே! சும்மா தர்மம், அதர்மம் என்று இரண்டு ஸப்தங்களில் உபன்யாஸத்தை முடித்து விடுகிறீர்கள். நாங்கள் என்ன செய்யணும் என்பதைச் சொல்ல மாட்டேன் என்கிறீர்கள்.” என்று கேட்டார்கள். சாஸ்த்ரமே சொல்லி இருக்கிறது, நம்முடைய முன்னோர்கள் எதையும் விடவில்லை. எல்லாமே சொல்லியிருக்கிறார்கள். நாம் அதைப் பார்க்கவில்லை. பார்க்காதது நம்முடைய தவறு. அவர்களுடைய தவறு ஒன்றுமில்லை. எல்லாம் சொல்லி இருக்கிறார்கள். அவர்கள் தர்மம், தர்மம் என்று சொன்னால் என் ஜீவிதத்துலே நான் தார்மீகனாக இருக்கணும் என்று சொன்னால் எப்படி இருக்கணும் என்றல்லவா நீ கேட்கிறாய், உனக்கு ஜவாப் சொல்கிறோம். ஓர் ஐந்து விஷயங்களை நீ ஞாபகம் வைத்துக்கொள். நீ தார்மீகன் என்று அர்த்தம். என்ன ஐந்து விஷயங்கள் என்று சொன்னால் அவர்கள் சொன்னார்கள் :

“அஹிம்ஸா, ஸத்யம் அஸ்தேயம் சௌசம் இந்த்ரிய நிக்ரஹா:
ஏதம் ஸாமாதிகம் தர்மம் சாதுர் வர்ணே ப்ரவீன்மனு”

ஐந்து விஷயங்கள் ஞாபகம் வைத்துக்கொள்ளப்பா போதும். அந்த ஐந்து விஷயங்களையும் என்னுடைய வாழ்க்கையில் நான் அனுஷ்டானத்துக்குக் கொண்டு வருவேன் என்கிற தீர்மானத்துடன் இரு. கொண்டு வா. நீ தார்மீகன் என்று அர்த்தம். இதுக்கு விருத்தமாக இருந்தால் நீ அதார்மீகன் என்று தானாகவே தெரியும். அந்த ஐந்திலே முதலில் அவர்கள் சொல்வது அஹிம்ஸா. அஹிம்ஸா என்பதற்கு சாதாரணமாக நாம் என்ன நினைத்துக் கொள்கிறோம் என்றால் இன்னொருத்தனை இம்ஸிக்கக்கூடாது, கொல்லக் கூடாது என்று நினைத்துக் கொள்கிறோம். அதுமட்டும் அல்ல. இன்னொருத்தனுடைய மனசுக்குக் கூட நோவு உண்டாகும். எப்படி? நாம் வ்யவகரிக்கக்கூடாது. அநேகம் பேருக்கு இன்னொருத்தனுடைய மனசுக்கு நோவு உண்டாகும்படி பேச்சுகளைப் பேசுவது ஓர் அப்யாஸம்.

ரொம்பச் சின்ன விஷயத்துக்கு பெரிய வார்த்தைகளைச் சொல்லிவிடுவது. ஓர் அப்யாஸமாக இருக்கும். ஆனால் நாம் வந்து அவனை அடிக்காவிட்டாலும் அந்த கடினமான வார்த்தைகளைச் சொல்லி அவனுடைய மனசைப் புண்படுத்தினோமே அது ஒரு பெரிய பாபம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நான் அவனுக்கு ஒண்ணும் பண்ணலையே ஏதோ இரண்டொரு வார்த்தை சொன்னேன் என்று சொல்லுவான். பின்பு கேட்டால் நீ சொன்ன அந்த இரண்டு வார்த்தைதான் நீ அடித்ததைவிட அவனுக்கு பெரிய உபத்ரவத்தைப் பண்ணியிருக்கிறது. ஒருத்தன் நமக்கு ஓர் அடி கொடுத்தான் என்றால் கொஞ்ச நேரம்தான் அந்த வலி இருக்கும். பின்பு போய்விடும். ஆனால் ஒரு கடினமான வார்த்தை சொன்னோமானால் எப்போதும் அவனுக்கு அது ஞாபகத்தில் இருக்கும். அடடா! இவர் என்னை இப்படி சொன்னாரே என்று இருக்கும். அதனால் அஹிம்ஸா என்பது எந்தவிதத்திலேயும் மற்றவர்களுக்கு நாம் உபத்ரவம் செய்யக் கூடாது என்பது.

உபத்ரவம் செய்யக்கூடாது காரணம் இல்லாமல். ஏனெனில் யுத்த களத்துக்குப் போய் யுத்தம் பண்ணவேண்டும் என்கிற சமயத்தில் அஹிம்ஸா என்று சொல்லி இருக்கிறார்கள். நாம் பேசாமல் இருக்கணும் என்றால் அது பெரிய தப்பிதம் ஆகிவிடும். அவனுக்கு அது ஒரு கர்தவ்யம். பகவான் அர்ஜுனனுக்குச் சொன்னார், “நீ யுத்தம் செய்யவேண்டியது உன்னுடைய கடமை. நீ இதைச் செய்யலை என்று சொன்னால் தப்பிதம் ஆகிவிடும்.” என்றார். யுத்த களத்தில் இருப்பவனுக்கு மட்டும்தான் அது தர்மம். பகவான் அர்ஜுனனுக்கு யுத்தம் செய்யச் சொன்னார் என்று சொல்லி நாமும் வீட்டில் இருப்பவர்கள் எல்லோரிடமும் யுத்தத்துக்குப் புறப்பட்டோமானால் அது ரொம்ப விபரீதமாகிவிடும். “தஸ்மாத் யுத்தாய யுத்தாய்ஸ்ய” என்றார். அதனால்தான் நான் யுத்தத்துக்குப் புறப்பட்டேன் என்றால் அது சரிப்பட்டு வராது. யுத்தத்துக்கு வந்தவன் அந்த யுத்த களத்துக்குப் போன வீரனுக்கு மட்டும் அது தர்மமே தவிர வேறு யாருக்கும் அது தர்மம் ஆகாது. அதனால் நாம் யாருக்கும் உபத்ரவம் செய்யக்கூடாது என்பதை முதலில் கற்றுக் கொள்ள வேண்டும். அது செய்வதற்கு அநேகம் பேருக்கு அநேக அவகாசங்கள் இருக்கும். அதிகாரமாகவோ, இன்னும் வேறு விதமாகவோ எனக்கு அதிகாரம் இருக்கு. அதனால் நான் அவனை இப்படி பண்ணிவிட்டேன், அப்படி பண்ணி விட்டேன் என்று சொல்வது பெரிசில்லை. ஆனால் அந்த அதிகாரத்தை உபயோகித்துக் கொண்டு அவனுக்கு ஓர் உபகாரம் செய்தேன், இவனுக்கு ஓர் உபகாரம் செய்றேன் என்று சொல்வது ரொம்பப் பெருமை. அதை விட்டுவிட்டு எனக்கு அதிகாரம் இருப்பதனால் அவனுக்கு ஓர் உபத்திரவம் பண்ணினேன் என்று சொல்வது பெரிசில்லை. அதனால் அஹிம்ஸா என்பதை முதல் தர்மத்தை மனசுலே வைத்துக்கொள் என்றார்கள்.

அடுத்ததாக சொன்னார்கள் ஸத்யம். ஸத்யம் சொல்வது என்பது எல்லோருக்கும் தெரியும். உண்மை சொல்ல வேண்டும். நமக்கு என்ன தெரியுமோ எப்படி தெரியுமோ அப்படி சொல்ல வேண்டும். நாம் தெரிந்து கொண்டது ஒன்று, ஆனால் அவனுக்கு சொல்வது இன்னொன்று. அதுதான் அசத்யம் என்பது. நாம் என்ன பண்றோம்? அவனைத் தப்பான வழியிலே கொண்டு போகிறோம். அவன் இது மாதிரி நினைத்துக் கொள்ளட்டும், இப்படி அவன் தப்பு செய்யட்டும். அதனால் இப்படி அவன் துக்கம் அனுபவிக்கட்டும். அதைப் பார்த்து நாம் சிரிப்போம். ஸந்தோஷப்படுவோம். இதுவா எண்ணம்? அதுவே ஸத்யத்தைச் சொல்லி அவனை சரியான மார்க்கத்தில் கொண்டு போனோமானால் அதைவிட உத்தமமானது வேறு என்ன இருக்கிறது? ஒரு வார்த்தை நாம் சொன்னோமானால் என்றைக்குமே அதைக் காப்பாற்ற வேண்டும். ஜனங்களுக்கு ஒரு பெரிய ஸ்வபாவம். இன்று ஒரு வார்த்தை பேசுவது, நாளைக்கு இன்னொரு வார்த்தை பேசுவது. ஓய்! நேற்று இப்படி சொன்னீரே! என்றால் யார் அப்படி சொன்னது? நான் இல்லை. நீங்கள் வேறு யாரையோ நினைத்துக் கொண்டுவிட்டீர்கள். அப்போது ஒவ்வொன்றுக்கும் சாக்ஷி ஆதாரங்களை எப்படி கொண்டு வருவது? அது இன்னொருத்தன் அந்த மாதிரி நம்மைக் கேட்கும்படி நாம் பண்ணிக்கொள்ளக்கூடாது. நாம் என்றைக்குமே ஸத்யத்துக்குக் கட்டுப்பட்டு இருக்க வேண்டும். இது எப்போதும் ப்ரதி ஒருவனும் தெரிந்து கொள்ள வேண்டும்.
மூன்றாவது அஸ்தேயம். அதாவது இன்னொருவனுடைய சொத்துக்கு ஆசைப்படக்கூடாது. நீ உழைக்க வேண்டும். சம்பாதிக்க வேண்டும். சாப்பிடவேண்டும். இன்னொருவனுக்கு நீ தர்மம் பண்ணலாம். நீ ஒன்றும் உழைக்காமல் எனக்கு அனாயசமாக அவனுடைய சொத்து எப்படி கிடைக்கும்? என்பதையே நீ யோசனை பண்ணிக்கொண்டு இருக்கிறாயே. இது ஒரு பெரிய தப்பிதம். சாஸ்திரத்திலே உனக்கு என்ன நியமம் சொல்லி இருக்கிறது என்று கேட்டால் “நியாயோ பார்த்தித வித்தேன கர்தவ்யம் த்யாத்ம ரக்ஷணம்” என்று சொல்லி இருக்கிறது. நியாயமான வழியிலே சம்பாத்யம் செய். உன்னைக் காப்பாற்றிக் கொள். மீதி பேருக்கு தர்மமும் செய். வேண்டாமென்று சொல்லவில்லை. நாம் என்ன செய்கிறோம், அநியாயம் பண்ணி நிறைய சம்பாதிப்பது அதை வைத்து தர்மம் செய்வது. திருப்பதியிலே வெங்கடாசலபதி ஸ்வாமி உண்டியலில் கொண்டு போட்டு விட்டு வந்து விடுவது.
ஒருவர் என்னிடம் சொன்னார், “நான் ஸ்வாமியிடம் வேண்டிக் கொண்டேன், நான் ஒரு மார்க்கத்திலே சம்பாத்யத்துக்குப் போகிறேன். ஒரு மார்க்கம் என்றதும் அது என்ன மார்க்கம் என்று எல்லோருக்கும் புரியலாம். இந்த மார்க்கத்திலே எனக்கு எவ்வளவு வருகிறதோ அதிலே நான்காவது பாகம் உனக்கு என்று நான் ஸ்வாமியிடம் வேண்டிக் கொண்டேன். எனக்கு நான்கு லக்ஷம் கிடைத்தது. ஒரு லக்ஷம் ஸ்வாமிக்குப் போட்டுவிட்டு வந்துவிட்டேன்”. என்றார். நான் உடனே “நீங்கள் நியாயமான மார்க்கத்தில் சம்பாதித்திருந்தால் அதிலே நீங்கள் ஒரு ரூபாய் ஸ்வாமிக்கு சமர்ப்பித்திருந்தாலும் ஸ்வாமிக்கு ஸந்தோஷம் ஆகியிருக்கும். நீங்கள் லக்ஷம் சம்பாதித்துவிட்டு வந்து விட்டேன் என்ற திருப்தி உங்களுக்கு இருந்தாலும் ஸ்வாமிக்கு மட்டும் இவன் தவறான வழியிலே போய்க் கொண்டு இருக்கிறானே என்கிற வருத்தம் இருக்கத்தான் செய்யும்.” என்று நான் சொன்னேன். அதனால் நாம் அந்யாய மார்க்கத்திலே ரொம்பவும் சந்தோஷத்துக்கு பதிலாக நியாயமான மார்க்கத்தில் கொஞ்சமாக சம்பாதித்தாலும் அதுவே மனசுக்கு திருப்தி. நமக்கு இகத்துக்கும், பரத்துக்கும் சௌக்யத்தைக் கொடுக்கக்கூடிய மார்க்கம். அதுக்குத்தான் “அஸ்தேயம்”. இன்னொருவனுடைய சொத்தை அந்யாயமாக நீ அபேக்ஷிக்காதே. அந்யாயமின்றி நியாயமாக உனக்கு வரவேண்டி இருந்தால் நாம் ஒன்றும் அதில் ஆக்ஷேபிக்கவில்லை. ஒருவன் மற்றவனிடம் வேலை செய்தான். அவன் சரியாக மாதாமாதம் சம்பளம் கொடுக்கவில்லை என்று சொன்னால் அவரிடம் நீ தாராளமாக கேட்கலாம். அதில் யாரும் உன்னை ஆக்ஷேபிக்க மாட்டார்கள். என்னிடம் வேலை வாங்கினீர். எனக்கு ஒன்றும் கொடுக்கவில்லையே என்று கேட்கலாம். ஒரு சம்பந்தமும் இல்லாமல் எப்படி அவனுடைய சொத்தை நாம் அபகரிப்பது என்று மட்டும் யோஜனை செய்யாதீர்கள். அதுதான் சாஸ்த்ரம் சொல்கிறது. 


அதனால் “அஸ்தேயம்.”
“சௌசம்” “சௌசம்” என்றால் பரிசுத்தமாக இருக்க வேண்டும். பரிசுத்தமாக இருக்கணும் என்று சொன்னால் நன்றாக உடலெல்லாம் நன்கு ஸ்நானம் பண்ணி நல்ல வேஷ்டி உடுத்திக் கொண்டு வந்து விட்டால் அதுதான் பரிசுத்தம் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். இந்த பரிசுத்தி என்பது இரண்டு விதம். உடம்பை சுத்தமாக வைத்துக் கொள்வது ஒன்று. அதைவிட ரொம்ப முக்யம் மனதைச் சுத்தமாக வைத்துக் கொள்வது என்பது. மனசுலே ரொம்பவும் கல்மஷங்கள் இருந்து வெளியிலே பார்ப்பதற்கு மட்டும் ரொம்ப சுத்தமாக இருக்கிறேன் என்று சொன்னால் அது போதாதப்பா. “சௌசம் த்விவிதம் ப்ரோக்தம் பாஷ்யம் ஆத்யந்த்ரம் க்ருதா” ம்ருத்யனாம் யம்க்ருதம் பாஷ்யம் பாவ அந்திஸ்த காம்பாம்” என்று சொன்னார். வெளியிலே இந்த சரீரத்தை சுத்தப்படுத்திக் கொள்வது என்பது நல்ல ஸ்நானம் செய்து சுத்தமாக இருப்பது என்பது. மனசை சுத்திபடுத்திக் கொள்வது என்பது ஒன்று இருக்கிறது. அதற்கு இந்த ஸ்னானமெல்லாம் போறாது. மனசுலே இருக்கிற கல்மிஷங்களைப் போக்க வேண்டும். என்ன மனசுலே இருக்கிற கல்மிஷங்கள்? முக்யமாக இருப்பது காம, க்ரோதங்கள்தான்.
இன்னொன்று வேண்டும் என்பது காமம். இன்னொருவன் மேலே கோபித்துக்கொள்வது என்பது கோபம். இந்த இரண்டும் இருந்தால்தான் அவனுடைய மனசு அசுத்தமாக இருக்கிறது என்று நாம் சொல்லுவோம். அநேகம் பேருக்கு ரொம்ப சின்ன விஷயத்துக்கு ஒரு கோபத்தை உண்டாக்கிக் கொள்வது ஒரு சுகமான உணர்வு. ஆனால் கோபத்தினால் உண்டாகக் கூடிய அனர்த்தங்கள் எப்படி இருக்கும் என்று நான் ஓர் இடத்தில் சொன்னேன். இங்கே சொல்வது ரொம்பப் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகிறது. பெரிய அதிகாரிக்கு கோபம் வந்தால் அவர் தன் அடுத்த அதிகாரி மேல் கோபத்தைக் காட்டலாம். அவர் வந்து தனக்கு அடுத்த அதிகாரியிடம் கோபம் காட்டிக் கொண்டே போனால் பெரிய அதிகாரிக்கு ஒரு கோபத்தினால் எத்தனையோ பேருக்கு ஆபத்துண்டாகிக் கொண்டு இருக்கிறது. ஆனால் பெரிய அதிகாரி வந்து “நான் எதற்காகக் கோபித்துக் கொள்ள வேண்டும்? இந்த விஷயம் ரொம்பச் சின்ன விஷயம். இதை ரொம்ப சுலபமாகவே சரி பண்ணலாமே” என்கிற ஒரு தீர்மானத்துக்கு வந்து விட்டாரானால் யாருக்கும் அதனால் அனர்த்தம் உண்டாகாது. ஆனால் கோபம் வந்த சமயத்தில் நமக்கு அது ஒன்றும் தெரிய மாட்டேன் என்கிறது. எல்லாம் அனர்த்தங்கள் உண்டான பிற்பாடு அடடா நான் கோபித்துக்கொண்டதனால் இதுமாதிரி ஆகி விட்டதே என்று பின்பு பச்சாதாபம். பச்சாதாபத்தினாலே என்ன ப்ரயோஜனம்? ஆரம்பத்திலேயே விவேகம் இருக்க வேண்டும். அதனால் மனசிலே காம, க்ரோதங்கள் என்பதுதான் மனசுடைய கல்மிஷங்கள். இந்த கல்மிஷங்களை நீக்கினோமானால் மனசும் பரிசுத்தம் ஆச்சு என்று அர்த்தம். அதனால் சௌசம் என்று சொன்னால் சரீரமும், மனசும் பரிசுத்தமாய் இருக்கிறது. பரிசுத்தமாக சரீரத்தையும், மனத்தையும் வைத்துக்கொள்ள வேண்டும்.


பின்பு “இந்த்ரிய நிக்ரஹ”. நம்முடைய இந்த்ரியங்களை, இந்திரியங்கள் என்று சொன்னால் இந்த கண், காது, மூக்கு, நாக்கு இந்த சரீர அவயவங்கள். இதை நம்முடைய ஆதீனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். என்ன ஆதீனத்திலே வைத்துக்கொள்வது? அதாவது எங்கே ஒரு த்ரிசம் அல்லது சினிமா என்பது வருகிறது என்று கேட்டால் உடனே அங்கு போய் பார்க்கணும் என்ற எண்ணம் வருகிறது. எங்கேயாவது ஒரு பக்ஷணம் இருக்கிறது என்று சொன்னால் உடனே அதைச் சாப்பிடணும் என்ற எண்ணம் வருகிறது. இந்த மாதிரி நம்முடைய இந்த்ரியங்கள் கொஞ்சமும் நம் வசத்தில் இல்லாமல் அதுக்கு நாம் வசமாகி விட்டோம். அதனால்தான் திண்டாடிக் கொண்டு இருக்கிறோம். ஆனால் இந்திரியங்களுக்கு நாம் வசம் ஆகாமல் இந்த்ரியங்கள் வசத்திலேயே நாம் இருந்தால் ஒரு முறை சொன்னேன் பெரிய தார்மீகப் ப்ரவசனத்தைப் பண்ணிக்கொண்டே இருப்போம். எல்லோரும் கேட்டுக்கொண்டே இருப்பார்கள். பக்கத்திலேயே எவனாவது ஒரு ஜிலேபி கொண்டு வந்து விட்டால் ‘டக்கென்று’ வாயில் போட்டுக்கொண்டு விடுகிறான். இங்கே தர்ம ப்ரவசனம் நடக்கிறது அதைக் கேட்டுக்கொண்டு இருக்கிறோமே என்கிற நினைவு போய் விடுகிறது. ஏனென்றால் இந்த்ரியத்துக்கு அவன் வசமாகி விடுகிறான். ஆனால் “அந்தப் பக்கம் கொண்டு போடா இங்கு கொண்டு வராதே” என்று சொன்னால் அதுதான் ரொம்ப விரோதி. இந்த ஐந்தும் அஹிம்ஸா, ஸத்யம், அஸ்தேயம் இன்னொருவனுடைய சொத்துக்கு ஆசைப்படாமல் இருப்பது சௌசம் = மனதையும் சரீரத்தையும் சுத்தமாக வைத்துக்கொள்வது இந்த ஐந்தும் எவனுக்கு இருக்கிறதோ அவன் தார்மீகன். இந்த ஐந்தும் எங்கு இல்லையோ அவனுக்கு தர்மத்தில் ப்ரவிருத்தியே இல்லை என்று அர்த்தம். நமக்கு முக்யமாக சாஸ்த்ரத்திலே சொன்ன வெவ்வேறு தர்மங்களை அனுஷ்டிப்பதற்கு சாமர்த்தியமும், அவகாசமும் இல்லாவிட்டாலும் இந்த ஐந்தையும் எப்போதும் ஞாபகத்தில் வைத்துக்கொண்டு அப்படியே நடப்பதற்கு, நமக்கு சாமர்த்தியம் இருக்கிறது. அந்த சாமர்த்தியத்தை நாம் உபயோகித்துக் கொள்ளவேண்டும்.
அதனால் எல்லோரும் இந்த ஐந்து தர்மங்களையும் அவசியம் அனுஷ்டிக்க வேண்டும். ஏதோவிருத்தமான தர்மங்கள் அஹிம்ஸைக்கு விருத்தமான ஹிம்ஸை என்பது அதர்மம். அஸத்யம் சொல்வது என்பது அதர்மம். இன்னொருவனுடைய சொத்தை அபகரிப்பது என்பது அதர்மம். மனசையும், சரீரத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ளாமல் இருப்பது அதர்மம். இந்த்ரியங்களை தன்னுடைய வசத்தில் வைத்துக் கொள்ளாமல் இருப்பது அதர்மம். அந்த அதர்மங்களை யாரும் செய்யாதீர்கள். இந்த தர்மங்களை எல்லோரும் அனுசரணம் செய்யுங்கள். இப்படி இருக்கிறவன் தார்மீகன் என்று சொல்லப்படுவான். அவனுடைய ஜீவனம் ரொம்ப உத்தமமான ஜீவனமாகும். அவன் இகத்திலேயும், பரத்திலேயும், இகம் என்று சொன்னால் இந்த ஜென்மம், பரம் என்று சொன்னால் ஜந்மாந்த்ரம். இந்த ஜென்மத்திலேயும், ஜென்மாந்த்ரம் என்று சொன்னால் அடுத்த ஜென்மம் அதிலேயும் சௌக்யத்தை அடையலாம் என்று நம்முடைய சாஸ்த்ரங்கள் நமக்கு உபதேசம் செய்திருக்கின்றன. இந்த உபதேசத்தை நாம் மிக ஸ்ரதையோடு அனுசரித்து நாம் என்றைக்கும் இந்த ஐந்து தர்மங்களை அனுசரிப்போம் என்ற த்ருடமான தீர்மானத்தோடு இருந்தால் நம்முடைய ஜீவனம் சார்த்தகமாகும். பகவான் எல்லோருக்கும் அந்த ஒரு சக்தியைத் தந்து இந்த தர்மங்களை அனுஷ்டிக்கக்கூடிய ப்ரேரணையைத் தரட்டும் என்று பகவானைப் ப்ரார்த்திக்கிறேன்.

பண்டிதர் ஒருவர் தாம் எழுதிய சம்ஸ்க்ருத கட்டுரை ஒன்றை ஆசார்யாளிடம் சமர்ப்பித்தார். அதை ஆசார்யாள் முழுவதுமாகப் படித்து முடித்தார். அதில் சில விஷயங்களை மாற்ற வேண்டிய தேவை இருந்த போதிலும் ஆசார்யாள் அதைச் செய்ய முனையவில்லை. ஒரு சில நாள்களில் அந்தப் பண்டிதர் ஆசார்யாளைத் தரிசிக்க மீண்டும் வந்திருந்தார்.


பண்டிதர்: என் கட்டுரையை ஆசார்யாள் வாசித்தார்களா?

ஆசார்யாள்: ஆமாம். முழுவதும் படித்துப் பார்த்தேன். அதில் சில விஷய மாற்றங்கள் செய்யப்படவேண்டியுள்ளது. நான் அதைச் செய்யலாமா?

பண்டிதர்: (பதறிப்போனவராக) இந்த விஷயங்களில் ஆசார்யாளுக்கு முழு அதிகாரமும் இருக்கிறதே. என் இசைவை எதற்காக ஆசார்யாள் கேட்க வேண்டும்?

ஆசார்யாள்: இது உங்களுடைய படைப்பு. ஆகவே இது உங்களுடைய உடைமை ஆகிவிடுகிறது. இதில் நானாக ஏதேனும் மாற்றங்களைச் செய்ய எத்தனித்தேனாயின் அது பிறருடைய சொத்தை அபகரிப்பதற்குச் சமமாகி விடும். அப்படி ஒரு தவற்றைச் செய்ய எனக்கு விருப்பமில்லை. அதனால்தான் உங்களிடம் கேட்டுவிட்டுப் பிறகு மாற்றங்களைச் செய்யலாம் என்றிருந்தேன்.


உலகத்தில் பலவிதமான மனிதர்கள் இருக்கிறார்கள். சிலர் பணக்காரர்கள். சிலர் நற்பண்புடையவர்கள். சிலர் துணிச்சலானவர்கள். ஒவ்வொரு மனிதனிலும் இவற்றில் ஏதாவது ஒரு பண்பு மேலோங்கி இருக்கும். அதை நன்கு பயன்படுத்தினால், அவர்கள் இந்த உலகத்திலும், அடுத்த உலகத்திலும் நலமாக இருப்பார்கள்.

உதாரணமாக, பணக்காரர்கள் தகுதியுடையவர்களுக்குத் தானம் செய்யும் மனப்பான்மையுடைய ஸாத்வீக குணமுடையவர்களாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் இருந்தால் எவ்வளவு பணம் ஸம்பாதித்தாலும் அதனால் பயனில்லை. அதே போல நற்பண்புகள் நிறைந்த ஒருவன் பணிவுடனும் இருக்க வேண்டும். இல்லையென்றால் அது அஹங்காரத்தை வளர்த்து தேவையில்லாத பல முடிவுகளுக்கு இழுத்துச் செல்லும்.

சிலருக்கு அதிகாரமும், வலிமையும் இருக்கும். அவர்கள் அவற்றைத் தவறுதலாக பயன்படுத்தாமல் தர்மத்தைக் காப்பாற்றுவதற்காக பயன்படுத்த வேண்டும்.

ப்ராஹ்மணர்களுக்கு பொறுமைதான் பெரிய செல்வம். அவர்கள் ஒருபொழுதும் இந்தக் குணநலனைக் கைவிடக்கூடாது. எந்தச் சூழ்நிலையிலும் அவர்கள் பொறுமையுடனும், பகுத்தறியும் திறத்துடனும் நடந்துகொள்ள வேண்டும்.

இவ்வாறு, மக்கள் தங்களிடம் இருக்கும் சிறந்த குணநலன்களை நல்ல கார்யங்கள் செய்வதற்கு உபயோகப்படுத்தினால், இந்த யுகம் க்ருதயுகம்போலாகும்.

அனைவரும் இதை நன்கு கருத்தில் கொண்டு, அவரவர் வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.

- தட்சிணாம்னாய சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடாதிபதி ஜகத்குரு
ஸ்ரீஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகள்

Friday 21 February 2014

பகவானை ஸந்தோஷப்படுத்துவது எப்படி?

பகவானை ஸந்தோஷப்படுத்துவது எப்படி?

எதை எடுத்தாலும் ‘என்னுடைய, என்னுடைய’ என்று சொல்லிக் கொண்டு மனுஷ்யன் தன்னை பந்தப் படுத்திக் கொள்கிறான். என்னுடைய வீடு, என்னுடைய சொத்து, என்னுடைய கார் என்று இப்படிச் சொல்லிச் சொல்லிக் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறான். இதற்குப் பதிலாக ‘உன்னுடையது’ உன்னுடையது’ என்று தேவதாராதனம் செய்து வந்தால் சுகத்தை சாசுவதமாய் அடைகிறான். ‘எனது’ என்ற அஞ்ஞானம் நீங்க வேண்டும். அது நீங்குவதற்கு வேண்டிய ஸாதனங்களை அனுஷ்டானம் செய்ய தேஹம் வேண்டும். அந்தத் தேஹம் கிடைத்தவன் குரூபஸதனம் செய்து ஆத்மவிசாரம் செய்ய வேண்டும். ஸத்கர்மானுஷ்டானம் செய்யவேண்டும். அஞ்ஞானத்தை ஜயிக்க இந்த ஸத்கர்மானுஷ்டானம் நான் ஸைநிகர்கள். ஸத்கர்மானுஷ்டானத்தால் ஈசுவரன் ப்ரீதி அடைகிறான். அவன் ப்ரீதி அடைந்தால் அவனுடைய பிரதிபிம்பமாகிய ஜீவனும் சுகத்தை அடைகிறான். ஈசுவரனுக்கு ஸந்தோஷம் வந்தால் தானாகவே ஜீவனுக்கும் ஸந்தோஷம் வருகிறது. ஏன்? பிம்பத்தில் இருக்கிற அழகு பிரதிபிம்பத்தில் தெரியுமல்லவா? ஈசுவரனுடைய பிரதிபிம்பமே ஜீவன் அல்லவா?

த்வத்பிரபுஜீவ ப்ரியமிச்சஸி சேன்னரஹரிபூஜாம் குருசததம்
ப்ரதி பிம்பாலங் க்ருதி த்ருதிகுஷலோ பிம்பாலங்க்ருதிமாதனுதே

என்று ஆசார்யாள் சொல்லியிருக்கிறார்.
ஒரு சந்திரன் இருக்கிறான். பத்து பாத்திரங்களில் ஜலம் விட்டுப் பார்த்தால் பத்து சந்திரனாகத் தோன்றுகிறான். சந்திரப் பிரகாசம் அந்த ஒவ்வொன்றிலும் தோன்றுகிறது. அந்த ஒரு சந்திரன் மேகத்தில் மறைந்தால் பிரதிபிம்பங்களும் காணாமல் போகின்றன.
இதேமாதிரி ஒரு கண்ணாடியை வைத்துக் கொள்வோம். அதற்கு முன் நாம் நின்றுகொண்டால் நம் முகம் தெரிகிறது. அந்தக் கண்ணாடியில். நம் முகத்தில் அலங்காரம் செய்தால் பிரதிபிம்பத்திலும் அலங்காரம் ஏற்படுகிறது. பிரதிபிம்பத்தின் காதில் கடுக்கன் இருக்க வேண்டுமானால் கண்ணாடியை உடைத்து பின்னால் இருந்த பிரதிபிம்பத்தைக் கையால் பிடித்து கடுக்கன் போடமுடியுமோ? பிரதிபிம்பமே போய்விடுமல்லவா? இதைவிட்டு நம் காதில் கடுக்கன் போட்டால் பிரதிபிம்பத்திலும் உடனே தோன்றும். பிம்பத்திலிருக்கும் கடுக்கன் பிரதிபிம்பத்தில் வரக்கூடாதென்றால் வராமல் இருக்குமா?
ஈசுவரன் ஸந்தோஷப்பட்டால் ஜீவனும் ஸந்தோஷப்படுகிறான். ஈசுவரன் ஸந்தோஷப்பட்டால், வேண்டாமென்று சொன்னாலும் அந்த ஸந்தோஷம் ஜீவனை விட்டுப் போகாது. ஈசுவரனுக்கு ஸந்தோஷம் இல்லாதபோது வேண்டும் வேண்டுமென்று கத்தினாலும் கிடைக்காது. ஈசுவரனுக்கு ஸந்தோஷம் எப்படி உண்டாகுமென்றால், அவன் சொன்னபடி நடந்தால்தான்.
ஒரு தகப்பனுக்கு ஒரு பிள்ளை இருக்கிறானென்று வைத்துக் கொள்வோம். அவன் தகப்பன் சொன்னபடி கேட்கிறதேயில்லை. ஆனால் காலையிலெழுந்து பிதாவுக்கு பிரதக்ஷிண நமஸ்காராதிகள் மாத்திரம் செய்கிறான். தகப்பனுக்கு அவனிடத்தில் திருப்தி உண்டாகுமோ? அவன் சொன்னபடி கேட்டால்தான் ஸந்தோஷம் உண்டாகும். அதேமாதிரி பகவானுக்கு நம்மிடத்தில் திருப்தி வரவேண்டுமானால் அவன் சொன்னபடி நாம் நடக்க வேண்டும். அவனிச்சைப்படி நம் நடத்தை இருந்தால் அவனுடைய அனுக்ரஹத்திற்குப் பாத்திரமாவோமே தவிர மற்றபடி கிடைப்பதல்ல. அவனுடைய இச்சையை எப்படி அறிகிறது? அவன் சொன்ன வார்த்தையால். அது எது?

ஸ்ருதி ஸ்ம்ருதி மனம்வாக்யே

என்று அவன் சொன்னபடி வேதமும், ஸ்மிருதிகளும் அவனுடைய உத்தரவுகள். வேதத்தைச் சரியாக அறிந்துகொள்வது சிரம ஸாத்தியமானதால், வேதார்த்தங்கள் ஸ்மிருதிகளால் தெளிவாய்த் தெரிவிக்கப்படுகின்றன. வேதார்த்தங்களை நன்றாகத் தெரிந்து கொண்டு அதை நன்றாய் மற்றவர்களுக்கு ஸ்மிருதிகள் போதிக்கின்றன. அந்த ஆக்ஞைகள் தான் என்னவென்றால், பிரம்ஹ முகூர்த்தத்தில் எழுந்திருத்தல், சௌசம் தந்ததாவனாதிகளைச் செய்து ஸ்நானம் பண்ணி பஹிச்சுத்தியைச் செய்துகொண்டு அகமர்ஷணாதி ஸூக்தாதிகளை ஜபித்து அந்த சுத்தியையும் அடைந்து காலத்தில் அர்க்யப்பிரதானம் செய்து காயத்ரீ ஜபம் ஆயிரமோ, நூறோ, பத்தோ யதாவகாசம் செய்து பிறகு தேவதாராதனம் செய்வது இது முதலியன. இவ்விதம் தினமும் செய்துவந்தால் சித்த சுத்தி ஏற்படும். பிறகு ஞானோதயமுண்டாகும்.

வேதாத்யயனம் இனிமேல் செய்வது சிலருக்குக் கஷ்டமாய் இருக்கலாம். வேத ஸாரத்தை யாரும் தெரிந்து கொள்ளலாமல்லவா? வேதாத்யயனம் செய்து யதாவத்தாய் ஸகலத்தையும் செய்தால் மிகவும் சிரேயஸ்தான். அதிலும் அர்த்தம் தெரிந்து கொண்டு செய்தால் மிகவும் நல்லதுதான். அப்படியில்லாமல் போனாலும் ஸாமான்ய பலனாவது கிடைக்குமல்லவா? சிரேயோ விஷயத்தில் திருப்தி வரவே கூடாது. நமக்குப் பணத்தில் எத்தனை ஆசை இருக்கிறதோ, எப்படி ஆயிரம் வந்தால் பத்தாயிரம் வேண்டுமென்ற இச்சையிருக்கிறதோ அதேமாதிரி சிரேயஸ் எவ்வளவு வந்தாலும் மேலும் வேண்டுமென்ற புத்தியிருக்க வேண்டும். அதேமாதிரி இந்த சிரேயஸ்ஸை ஸம்பாதிக்க வேண்டும். காயத்ரீ மந்திரத்தைச் சரியாகத் தெரிந்து கொண்டு அதன் அர்த்தத்தை விசாரம் பண்ணித் தெரிந்து கொண்டு, பிரம்ஹயக்ஞம், தேவதாராதனம், அவகாசம் கிடைத்தால் ஹரிஹரநாமோச் சாரணம், கூடுமானவரை அதிதி பூஜை ஆகியவற்றைச் செய்து கொண்டு வந்தால் சிரேயோ விருத்தி அவசியமாய் உண்டாகும். பகவானை ஸ்தோதிரம் செய்வதனால், அதாவது பகவந் நாமோச்சாரணம் செய்து கொண்டே வருவதனால், வீணாக மௌட்யத்திலும் சோம்பேறித் தனத்திலும் விருதாவாய்க் கழிந்து கொண்டிருக்கும் காலமானது உபயோகப் படுத்தப்பட்டதாக ஆகும். இப்படி செய்தால் கெட்ட காரியம் செய்வது தானாகவே விலகிப்போகும். சுருதி, ஸ்மிருதிகளில் “இதைச் செய்” என்று சொன்னதைச் செய்யாமல் போனாலும் அவற்றில் ‘இதைச் செய்யாதே’ என்று இருப்பதை விட்டுவிட்டால் மட்டுமே க்ஷேமம் உண்டாகும்.

ஸூத ஸம்ஹிதையில் அவென்னபி வித்யுக்தம் என்று தொடங்கி இதே விஷயம் உபதேசிக்கப் படுகிறது.

மனுஷ்யனுடைய ஸ்வபாவம் எப்படியிருக்கிற தென்றால், அவன் நித்ரா ஸமயம் தவிர மற்ற எல்லாக் காலங்களிலும் ஏதாவதொன்றைச் செய்து கொண்டேயிருக்கிறான். அவன் அப்படிச் செய்யும் காரியங்களை, நிஷித்தம், விஹிதம், உதாஸீதனம் என்று மூன்று விதமாகப் பிரிக்கலாம். அந்ருத வசனம் (பொய் பேசுதல்) அபேயபானம் (குடிக்கத்தகாததை குடித்தல்) அபோஜ்ய போஜனம் (உண்ணத் தகாததை உண்ணுதல்) த்யூதம் (சூதாடுதல்) சீட்டு ஆடுதல் முதலியன நிஷித்தகர்மங்கள். ஸ்நானம், ஸந்தியா பூஜை முதலியன விஹித கர்மங்கள். நித்திரை முதலியன உதாஸீன கர்மங்கள். இப்படி மூன்றுவகைப்பட்ட காரியங்களில், நிஷித்த காரியங்கள் கூடாதென்று தள்ளிவிட்டால், அப்புறம் செய்யமுடிகிற விஹிதத்தையோ உதாஸீனத்தையோ செய்தோ அல்லது சும்மா இருப்பதோ இதைத்தானே செய்து தீரவேண்டும்? இதில் எதைச் செய்தாலும் தோஷமில்லை. உதாஸீனமான காரியத்தைச் செய்தால் சிரேயோஹானி இல்லை. விஹித காரியத்தைச் செய்தால் சிரேயோவிருத்தி உண்டாகிறது. அதனால்தான் நிஷித்வ பரிஹாரேன பிஹிதம் லபதே த்ருவம் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இதற்கு ஒரு கதை உண்டு. ஒரு பிராம்ஹணனுக்கு ஒருபிள்ளை இருந்தான். அவன் ஸதா திருடிக்கொண்டு வருவதையே வழக்கமாகச் செய்துகொண்டு வந்தான். என்ன சொல்லியும் பையன் திருந்தவில்லை. இவனை எப்படி நல்வழிக்குத் திருப்புவது என்று தகப்பனார் யோசித்துப் பார்த்ததில் பையனிடத்தில் ஒரு குணம் இருப்பதாகக் கண்டார். அதாவது, அவன் பிரதிக்ஞை செய்துவிட்டால் அந்தமாதிரி நடப்பான் என்று தெரிந்து கொண்டார். திருடாதே என்று சொன்னால் அந்தமாதிரி பிரதிக்ஞையையே செய்யாமல் போய்விடுவான் எனத் தெரிந்துகொண்டு, தன் பையனைக் கூப்பிட்டு, ‘மகனே! நீ எப்பொழுதும் பொய் சொல்கிறதில்லை என்று எனக்குப் பிரதிக்ஞை செய்’ எனக் கேட்டார். பையன் அப்படியே ஆகட்டுமென்று கைதட்டிக் கொடுத்துவிட்டான்.

இப்படிச் செய்ததன் பிறகும் சிறு திருட்டாகவே கொஞ்சநாள் நடந்தது. பிறகு பையன் சிறு திருட்டில் அலுத்துப் போய் பெரிய திருட்டாய்த் திருடவேண்டுமென்று உத்தேசித்து ராஜகிருஹத்திலேயே திருடப் பிரயத்தனப் பட்டுக் கொண்டிருந்தான். அதற்காக ராஜதானியில் ஊருக்கு வெளியில் ஒரு குடிசை ஏற்படுத்திக் கொண்டு அதில் வசிக்க ஆரம்பித்தான். அந்த தினத்தன்றே நகர சோதனைக்காகப் புறப்பட்ட ராஜா புதிதாக ஒரு குடிசை ஏற்பட்டிருப்பதைக் கண்டு உள்ளே போய் விசாரித்தான். ‘நீ யார்?’ என்று கேட்க அவன் உண்மையைச் சொல்லிவிட்டான். “நான் திருடன். அரண்மனையில் திருட வந்திருக்கிறேன். மார்க்கம் விசாரித்துக் கொண்டிருக்கிறேன்.” என்றான். இதைக் கேட்டதும் ராஜாவுக்கு ஆச்சரியமுண்டாயிற்று. திருடனுடைய ஸத்திய வாக்கைக்கண்டு அதிசயித்தான். உடனே தனக்குள் தீர்மானித்துக் கொண்டு திருடனைப் பார்த்து “அப்பா! நான் ஸதா அந்த அரண்மனையிலேயே வசிக்கிறேன். அதிலிருக்கிற ஸகல ஸமாசாரங்களும் எனக்குத் தெரியும். நான் உனக்கு சகாயம் செய்கிறேன். எனக்கு என்ன தருவாய்?” எனக் கேட்டான். கிடைப்பதில் பாதி எனத் தீர்மானித்துக் கொண்டு மறுநாள் ராத்திரியே திருட ஏற்பாடு செய்து வைப்பதாகவும், அரண்மனை வாசலில் வந்து குறித்த ஸமயத்தில் சேரும்படியாகவும் ஏற்பாடு செய்துகொண்டு ராஜா புறப்பட்டுப் போனான்.

ஸங்கேதப்படி ராஜா மறுநாள் அரண்மனையில் வாசலைத் திறந்துவிட, அவன் நேராக பொக்கிஷசாலையை அடைந்து அதை நன்றாய்ப் பரிசோதித்ததில், விலையுயர்ந்த மூன்று ரத்னங்கள் அடங்கிய ஒரு ஸம்புடத்தைப் பார்த்தான். அதில் தனக்கு ஒன்றும் தன் கூட்டாளிக்கு ஒன்றும் எடுத்துக் கொண்டு மற்றொன்றை அவ்விடத்திலேயே வைத்துவிட்டு வெளியே வந்து கூட்டாளியாகிய ராஜாவிடம் ஒன்று கொடுத்துவிட்டு மற்றொன்றைத் தான் எடுத்துக்கொண்டு குடிசையை நோக்கிப் போய் விட்டான். பொழுது விடிந்ததும், பின் கதவு திறந்து கிடப்பதும் பொக்கிஷசாலை மூடாமல் திறந்து கிடப்பதும் கண்டு விசாரணை நடந்தது. மந்திரி வந்து பார்த்ததில் ஒன்றும் களவு போகாமல், மூன்று ரத்னங்கள் அடங்கிய ஸம்புடத்தில் ஒ ன்று நீங்கலாக மற்ற ரத்னங்கள் களவாடப் பட்டிருப்பதைக் கண்டு, மற்றொன்றும் திருட்டுப் போனதாகச் சொன்னால் எல்லாரும் நம்புவார்களாகையால், அது தனக்கு இருக்கட்டும் என நினைத்து அதை மடியில் வைத்துக் கொண்டான்.

பிறகு ஸேவகர்கள் வெளியில் போய் எங்கும் தேடி திருடனைக் கண்டுபிடித்து விசாரித்ததில் திருடன் தன் பிதாவுக்குக் கொடுத்த பிரதிக்ஞையால் உண்மையைக் கூறி தன் குற்றத்தை ஒப்புக்கொண்டான். ஆனால் தான் இரண்டு ரத்னங்கள் தான் எடுத்ததாகவும், அதில் ஒன்று அரண்மனை அதிகாரியிடம் கொடுத்ததாகவும், மற்றது தன்னிடமிருப்பதாகவும், தெரிவித்து அதை எடுத்துக்கொடுத்தான். உடனே ராஜன் தன்னிடமிருக்கும் இரண்டாவது ரத்னத்தை எடுத்து வைத்துவிட்டு மந்திரியை மூன்றாவது ரத்னத்தைக் கொண்டுவரும்படி உத்தரவிட்டான். மந்திரி வேறு வழியில்லாமல் தன் இடுப்பில் மறைத்து வைத்திருந்த ரத்னத்தை எடுத்துக் கொடுத்துவிட்டான். மேலும் தன்னை மன்னிக்கும்படியாகக் கேட்டான். திருடனாயிருந்தும் பொய் சொல்லாததால் அவனை மந்திரி வேலையில் அமர்த்தி அரசன் முந்தின மந்திரியை வேலையிலிருந்து நீக்கினான். மந்திரி ஸ்தானத்திற்குத் திருடன் வந்தது எப்படி? கூடாததை விலக்கினதாலல்லவா? கூடாததை விலக்கினது ஒன்று. நல்லதை நடத்தினது ஒன்று. இப்படி இரண்டும் கிடைக்கிறது. ஈசுவரானுக்கிரஹமும் அப்படியே பூர்ணமாகக் கிடைத்துவிடும்.
சாஸ்திரம் என்ன வெறுமனே கஷ்டமானதையா செய்யச் சொல்லும்? பிரபஞ்சத்தையே க்ஷேமமார்க்கத்திற்குத் திருப்புவதற்காக ஹிதமானதைத்தான் சாஸ்திரம் சொல்கிறது. அப்பேர்ப்பட்ட சாஸ்திரத்திற்கு விரோதமாகச் செய்தால் ஈசுவர கோபம்தான் நிச்சயமாக ஏற்படும். தற்காலத்தில் அர்த்தம் ஸம்பாதிப்பதுதான் நீதியாய்விட்டது. எந்த வழியிலும் பொருள் ஸம்பாதித்தே தீரவேண்டியது என்பது மதமாகிவிட்டது. இது நீதியாகுமோ? இது துர்நீதியல்லவா? எது நியாயமாகுமோ, எதன்படி நடந்தால் ஸகலருக்கும் க்ஷேமம் உண்டாகுமோ அதைத்தான் சாஸ்திரங்கள் சொல்கின்றன. இதுதான் தர்ம சாஸ்திரம். இப்பொழுது என்ன? எல்லாரும் மனம் போனபடி நடக்க வேண்டியது. பிதாவோடு புத்திரன் சண்டை; புருஷனோடு ஸ்திரீ சண்டை; முதலாளியுடன் தொழிலாளி சண்டை. இதனால் தர்மப் பிரதிஷ்டை வருமோ? பேச்சென்னமோ தர்மம்தான். நடப்பது முழுவதும் அதற்கு நேர் விரோதம். ஸகல தர்மத்திற்கும் காரணம் அவரவர்கள் ஸ்வதர்மானுஷ்டானம் அல்லவா? மேலதிகாரிக்கும் கீழ் அதிகாரிக்கும் சண்டையும், தகப்பன் பிள்ளைகளிடையே சண்டையுமெனில், எப்படி உலகம் நடக்கும்? ஆதி அடிப்படையான ஸ்வதர்மானூஷ்டானம் நடந்தால் ஸகலமும் கைகூடும். விக்னேசுவர பூஜைக்கே லோபம் வந்துவிட்டால், அப்புறம் மற்ற கர்மானூஷ்டானங்கள் எப்படி நடைபெறும்? கர்மம் எப்படி ஸார்த்தகமாகப் போகிறது? ஆகையால் சாஸ்திரப்படி அவரவர்கள் தங்கள் தங்கள் ஸ்வதர்மானுஷ்டானத்தை ஆசரித்து வந்தாலன்றி சந்தோஷம் கிடைக்காது. ஈசுவரனுக்கு அப்படி நடந்தால்தான் ப்ரீதி உண்டாகிறது. அவனுக்கு ஸந்தோஷம் வந்தால்தான் பிம்பம் பிரதிபிம்ப ரீதியாய் ஜீவர்களும் ஸந்தோஷத்தை அடைவார்கள். பகவானுடைய அனுக்கிரஹம் கிடைத்தால், ஸதா ஸந்தோஷத்துடன் இருக்கலாம். ஆகையால் ஸகலரும் தங்கள் தங்கள் தர்மம் இன்னதென்பதைத் தெரிந்துகொண்டு அதன் பிரகாரம் நடக்க ஏற்பாடுசெய்து அந்தப்படி நடந்து ஈசுவரனுக்கிரஹத்தை அடைய வேண்டும்.

-ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சந்திரசேகர பாரதீ மஹாஸ்வாமிகள்

Thursday 20 February 2014

ஸ்ரீ ஆதி சங்கரர் அருளிய மாத்ரு பஞ்சகம்

ஸ்ரீ ஆதி சங்கரர் அருளிய மாத்ரு பஞ்சகம்


ஸ்ரீஆதிசங்கரர் ஆபத்ஸன்யாஸம் எடுத்துக்கொள்ள நேர்ந்தபோது தன்மகன் எப்படியாகிலும் உயிருடன் இருந்தால் போதும், மரணத்தின் வாயினின்றும் முதலையின் வாயினின்றும் அவர் மீண்டால் போதும். உயிருடன் அவர் இருந்தால் தன் கடைசி காலம் வரை அவரைப் பார்த்துக்கொண்டாகிலும் இருக்கலாமே என எண்ணி அவர் தாயார் அவரை ஸன்யாஸம் எடுத்துக்கொள்ள அனுமதித்தார். அந்தச் சமயத்தில் ப்ரைஷோச்சாரண மந்திரத்தைக் கூறி ஆபத்ஸன்யாஸம் எடுத்துக் கொண்ட பகவத்பாதாள் தன் வயோதிக நிலையில் தன் ஒரே மகன் தன் ஈமச்சடங்குகளைச் செய்யக்கூட அருகில் இருக்கமாட்டானே என வருந்திய தன் தாய் ஆர்யாம்பாளிடம் சங்கரர் உறுதி அளிக்கிரார்

“ஹே அம்மா! நீ எப்போது நினைத்தாலும், அது பகலாக இருக்கட்டும், இரவாக இருக்கட்டும், இரண்டுக்கும் நடுவில் எப்போதாக வேண்டுமானாலும் இருக்கட்டும். நீ பிரக்ஞையுடன் இருந்தாலும், பிரக்ஞை இழந்த நிலையில் இருப்பினும், அல்லது துயருற்ற நிலையில் இருப்பினும், என்னை நீ நினைத்த மாத்திரத்தில் மற்ற எல்லா பணிகளையும் விட்டுவிட்டு உன்னிடம் வருவேன். நீ உயிர்நீத்தால் உன் இறுதிக் கடன்களை நானே செய்வேன். நீ என்னை நம்பலாம்.” எனக் கூறிய ஸ்ரீசங்கரர் தன் தாயார் மறைந்த பொழுது தன் மஹிமையால் தேவலோக விமானத்தில், வேத வாக்யங்கள் ஒலிக்க, தன் தாயைப் புண்ய லோகத்திற்கு, மோக்ஷபதத்திற்கு அனுப்பிய பிறகு ஸ்ரீசங்கரர் தன் தாயின் பூத உடலுக்கு, உறவினரின் எதிர்ப்புக் கிடையே, தனது வீட்டுப் பின்புறம் வாழை மட்டைகளை அடுக்கித் தன் யோகத் தீயினால் ஸம்ஸ்காரம் செய்தார். பிறகு தன் தாய் தனக்குச் செய்தவற்றையெல்லாம் நினைத்து அடங்காத் துயருற்றவராக பின்வரும் ஐந்து ஸ்லோகங்களான ‘மாத்ரு பஞ்சக’த்தினைப் பாடுகிரார் :
“தாயே! என்னை கருவாய்த்தாங்கி நான் இவ்வுலகில் வந்து பிறக்கும்வரை உடல் மெலிந்து நீ பட்ட கஷ்டங்களுக்கு என்ன கைம்மாறு செய்ய முடியும்? குழந்தையாயிருந்த என்னை இரவெல்லாம் கண் விழித்துக் காத்து, மலம் முதலிய துர்கந்தங்களிலிருந்து காத்து, பத்தியமிருந்து, முகமலர்ச்சியுடன் என்னைக் காப்பாற்றிய உனக்கு என்னால் என்ன கைம்மாறு செய்ய முடியும்? அன்று முதல் இன்று வரை நீ செய்தவற்றுக்கு கைம்மாறு செய்யப் பல ஜன்மங்கள் போதாது. அப்படிப்பட்ட உனக்கு என் நமஸ்காரங்கள்”

“ஒரு சமயம் நீ உன் அருமைப் புதல்வனாகிய நான் ஸன்யாஸம் பெற்றதாக விடியற்காலையில் கனவு கண்டு, குருகுலத்தில் வாசம் செய்த என்னிடம் ஓடிவந்து என்னை அணைத்துக் கதறினாய். அந்தச் சமயம் குருகுலத்தில் யாவரும் காரணம் கேட்க, உன் கனவைச் சொல்லிக் கதறி, அதைக் கேட்ட குருகுலம் முழுவதும் கதறிற்றே அத்தகைய தாயான உன் கால்களில் விழுந்து வணங்கிக் கதறுகிறேன்”. (இங்கு நாம் விதி வலியது எனக் காண்கிறோம். அந்தத் தாயின் கனவு மெய்யாகி ஸ்ரீசங்கரர் உண்மையிலேயே ஸன்யாஸம் ஏற்க நேர்ந்ததே!)
“எல்லாச் சக்திகளும் அற்றுப்போன உன் கடைசி காலத்தில் பிராண ரக்ஷணத்திற்குச் சிறிது நீர் தந்திருந்தால் எனக்கு மன ஆறுதல் உண்டாகியிருக்கும். அந்தப் பாக்யம் கூட எனக்குக் கிடைக்கவில்லையே. பின்பும் ஒவ்வொரு வருடமும் உனது திதியில் முறைப்படி சிராத்தம் செய்து உன் ஆத்மாவைத் திருப்தி செய்விக்கும் பாக்யத்தையும் ஸன்யாஸியான நான் அடையாது போய்விட்டேனே! மரண சமயத்தில் தாரக மந்திரத்தை உன் காதில் ஓதி அதன் மூலம் உன்னை மறுபிறப்பற்ற மோக்ஷத்தை அடைவிக்கும் பாக்யத்தையும் காலந்தாழ்த்தி வந்த காரணத்தினால் இழந்து விட்டேனே. அப்படிப்பட்ட என் மீது ஒப்பற்ற கருணையை வைப்பாயாக.”

 “அம்மா! என்னைக் கூப்பிடும் போதெல்லாம் 'முத்தே! மணியே! என் கண்ணே! இராஜாவே! குழந்தாய்! நீ வெகு காலம் ஜீவிக்க வேண்டும்' என்று வாழ்த்திய உன் வாய்க்கு வரட்டரிசியைப் போடுகிறேனே”
“அம்மா! பிரசவ வேதனையில் 'அம்மா! அப்பா! சிவா! கிருஷ்ணா! கோவிந்தா! ஹரே முகுந்தா!' என்றெல்லாம் கதறிய உன் ஒரு கதறலுக்குப் பிரதிபலன் செய்ய முடியுமா? அந்த உன்னதத் தாயான உனக்கு நமஸ்காரம் செய்கிறேன்.”

முற்றும் துறந்த ஸன்யாஸியான, ஸாக்ஷாத் பரமேஸ்வர அவதாரமான ஸ்ரீஆதிசங்கரரையே இவ்வாறு தாயன்பானது கதறச் செய்தது என்றால் அதற்கு உன்னதமானதொரு காரணமுண்டு, ஸ்ரீபகவத்பாதாள் சாதாரணமான உலகத்தில் நாமின்று காணும் ஸன்யாஸிகளைப் போன்றவர் அல்லர். தன் காலத்துக்குப் பின் வரக்கூடிய ஸன்யாஸிகளுக்கெல்லாம் வழிகாட்டத் தோன்றியவர். “தாயிற்சிறந்த ஆலயமில்லை” என்னும் சாஸ்திர வாக்யத்தை உறுதிபடுத்தத் தோன்றியவர் ஒருவன் பரம்பொருளில் லயித்த மனதினனாக சிறிது காலம் இருந்தான் என்றாலும் கூட, அப்படிப்பட்ட சாதகன் எல்லாப் புண்ய க்ஷேத்ரங்களிலும், நதிகளிலும், குளங்களிலும் ஆங்காங்கு நீராடிய பலனையும், பூவுலகம் அனைத்தையும் தானமாகத் தந்த பலனையும், ஆயிரம் யாகங்களைச் செய்த பலனையும், எல்லாத் தெய்வங்களையும் வழிபட்ட பலனையும், தன் முன்னோரை பிறவிச் சுழலினின்றும் மீட்ட பலனையும் அடைந்தவராக மூவுலகினாலும் வழிபடத்தகுந்தவராக ஆகிறான் என லகுயோக வாஸிஷ்டம் கீழ்வரும் ஸ்லோகத்தினால் கூறுகிறது :
இவ்வாறு இருக்கையில் மஹாப்ரஹ்ம ஞானியான ஸ்ரீஆதிசங்கரரைப் பற்றிக் கூறவும் வேண்டுமோ! அவரைப் பெற்றெடுத்த தாய், தந்தையின் மஹத்வத்தை விவரிக்க விழைவது சிரமஸாத்யம். அதிலும் முன்னறி தெய்வமான அவரது தாயாரின் பெருமை அளப்பரியது. அவரைப்போன்றதொரு மாமுனி தோன்றிய குலமே, அறுபது தலைமுறை முன்னோரும், அறுபது தலைமுறை பின்னோரும் உய்வை அடைகிறார்களென :
எனும் வரிகள் கூறுவதுடன் அப்படிப்பட்ட புனித மஹான்கள் புண்ய க்ஷேத்ரங்களுக்கு சமமாகி அவர்கள் செல்லும் இடமெல்லாம் புனிதமடைவதுடன் அவர்களின் பாதங்கள் பட்ட புழுதிகூடப் புனிதமடைந்து அவர்களைக் காணும் பாக்யம் பெற்றவர்களும் பவித்ர மடைகிறார்கள் எனக் கூறப்படுகிறது. அது மட்டுமா!
அப்படிப்பட்டதொரு பரமானந்தக் கடலில் திளைத்த மனதை உடைய மகனின் பிறப்பினால் அந்தக் குடும்பமே புனிதமடைகிறது. அவன் பிறந்த பூமியே புனித பூமியாகிறது எனவும் விவரிக்கப்படுகிறது.
சாதாரணமாகவே சாஸ்திரங்கள் முதலானவை தாயாரின் உயர்வைக் கூறுகின்ற வாக்யங்களை மனுதர்ம சாஸ்திர காலத்திலிருந்து காண்கிறோம். மனுவானவர் ஒரு மகன் நூறு வருடங்கள் பாடுபட்டாலும் தன் பெற்றோருக்குத் தான் பட்ட பிறவிக் கடனைத் தீர்க்க முடியாதெனக் கூறுகிறார் :
பெற்றெடுத்து, அதற்குப் பின் வளர்க்கும் போதும் தாய், தந்தை எடுத்துக் கொள்ளும் சிரமத்திற்கு ஒரு நூறாண்டு உழைத்தாலும் ஒருவன் பிறவிக்கடன் தீர்ப்பது அரிது. ஸ்ரீசாணக்யரும் தன் நீதி சூத்திரத்தில் தாயின் பெருமையை :

“தாயே தலை சிறந்த குருவாவாள்; எந்நிலையிலும் அவள் காக்கப்பட வேண்டியவள்” எனக் கூறுவதன் மூலம் விளக்குகிறார். “ஒருவனுடைய ஆத்ம ஸாக்ஷாத்காரத்திற்கு வித்திடுபவளும் அவளே என ஸ்ரீசங்கர பகவத்பாதாளே விளக்குகிறார்.

TIRUNELVELI VEDA SAMMELANAM - 18/02/2014 BY SRI SRINGERI SARADHA PEETAM, TIRUNELVELI


PHOTOS COURTESY: KM KASIVISWANATHAN, TIRUNELVELI






ஸ்ரத்தை இல்லாமல் செய்யும் காரியம் பலிதம் ஆகாது



பகவத் பாத சங்கரர் ஒரு விஷயம் சொல்லியிருக்கிறார். “முக்யௌ சாஸ்த்ரம் ப்ரமாணம் சகார்யா கார்ய வ்யவஸ்திதௌ” ஞாக்த்னா சாஸ்த்ர விதானோத்தம் கர்ம கர்து நிதார் ரஸி” என்று. அதாவது நாம் எதைச் செய்யணும், எதைச் செய்யக் கூடாது, எதைச் செய்தால் நமக்கு ஸ்ரேயஸ் உண்டாகும், எதைச் செய்தால் நமக்கு அஸ்ரேயஸ் உண்டாகும் என்கிற விஷயத்துலே சாஸ்த்ரம் ஒன்றுதான் ப்ரமாணம். “கார்ய கார்ய வ்யவ்ஸ்திதௌ சாஸ்த்ரம் ப்ரமாணம்” எதைச் செய்தால் நல்லதாகுமோ அதுதான் தர்மம். எதைச் செய்தால் கெடுதலோ அது அதர்மம். இந்த தர்மம், அதர்மம் என்கிற இரண்டு விஷயங்களைப் பற்றிச் சொல்லக்கூடிய, தீர்மானம் செய்யக்கூடிய உரிமை சாஸ்த்ரத்துக்குத்தான் உண்டு. இந்த விஷயத்தை பகவான் ஸ்பஷ்டமாகச் சொல்லியிருக்கிறான். ஆசார்ய சங்கரரும் கூட இந்த தர்மா தர்மங்களைப் பற்றிச் சொல்கிற போது “நஹி வேதமேகம் ம்ருத்பா தர்மா தர்மயோஹோ அன்யக்கிஞ்சித் ப்ரமாணம் அஸ்தி” என்று சொன்னார். வேதத்தை விட்டு தர்மா தர்மங்களைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு இன்னொரு ப்ரமாணம் இல்லை என்று அவர் சொல்வார். சாஸ்த்ரம், வேதம் என்று ஒரே அர்த்தத்துலேதான் சொல்லுவோம்.


அப்பேர்ப்பட்ட சாஸ்த்ரோக்தமான கர்மாவை நாம் ஸ்ரத்தையோடு அனுஷ்டித்தால் நமக்கு ஸ்ரேயஸ் கிடைக்கும். நல்லது ஏற்படும். அந்த ஸ்ரத்தையே இல்லாவிட்டால் நாம் அங்கு சொல்லி இருக்கப்பட்ட பலத்தை அடைய முடியாது. அநேகம் பேர் “நீங்கள் சொல்கிற கார்யங்களை எல்லாம் செய்கிறோம் ஆனால் பலன் கிடைக்கவில்லை.” என்று சொல்லிக்கொண்டு இருப்பார்கள். அங்கே காரணம் ஸ்ருத்தா லோபம். அதையும் பகவான் கீதையிலே சொல்லியிருக்கிறான்.

“அஸிரத்தையா உதன் தத்தம்
தபஸ்தத்தம் க்ருதஞ்சயதி
அதஸித்திர்யுத் பார்த்தா
நசதர் ப்ரேத்ய நூபிகா”

என்று ஸ்ரத்தை இல்லாமல் எதைச் செய்தாலும் அது உனக்குப் பலிக்காது. நீ, “இவ்வளவு ஹோமங்கள் செய்தேன். தானம் பண்ணினேன். தபஸு பண்ணினேன். யாகம் பண்ணினேன்.” என்று எவ்வளவு சொன்னாலும் ஸ்ரத்தை இல்லாமல் பண்ணினாய். ஸ்ரத்தை இல்லாமல் பண்ணினாய் என்றால் என்ன அர்த்தம்? என்று கேட்டால் ‘ஸ்ரத்தை’ என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்பதை முதலில் தெரிந்து கொள்ளவேண்டும். ஸ்ரத்தை என்ற வார்த்தைக்கு அர்த்தம், ஆசார்ய சங்கரரே சொல்லி இருக்கிறார். “சாஸ்த்ரத்திலேயும், குரு வாக்யத்திலேயும் அசஞ்சலமான விஸ்வாசம். அசைக்க முடியாத நம்பிக்கை. அதுதான் ஸ்ரத்தை. அதாவது சாஸ்த்ரத்திலே இப்படிச் சொல்லியிருக்கிறது அது அப்படித்தான் நடக்கும் என்கிற தீர்மானம். ஸ்ரத்தை இல்லை என்பதற்கு அர்த்தம் அந்தத் தீர்மானம் இல்லை என்று அர்த்தம். என்னமோ அப்படி பண்ண வேண்டுமாம். அப்படி பண்ணினால் அப்படி ஆகுமாம் அவர் சொல்கிறார் என்று சொல்வோமே தவிர, இப்படிச் செய்தால் இப்படித்தான் நடக்கும் என்கிற தீர்மானம் கிடையாது. பின்பு நாம் செய்வதை கேவலம் ஓர் ஆடம்பரத்துக்கு பத்துபேர் பார்க்க வேண்டும் என்பதற்கு செய்கிறோமா? இல்லை இன்னொருத்தன் பார்க்கணும் என்பது எனக்குக் கிடையாது. ஈஸ்வரப் ப்ரீதிக்காக நான் செய்கிறேன் என்று செய்யணுமா! என்று கேட்டால் நம்முடைய மனசிலே இருக்க வேண்டியது இந்தக் கார்யத்தை நான் செய்தால் எனக்கு க்ஷேமம். இதை இன்னொருத்தன் என்னை ப்ரஸம்ஸை செய்யணும் என்பதற்காக நான் செய்யவில்லை. என்னுடைய கர்தவ்யம் என்பதற்காக நான் செய்கிறேன் என்று நாம் செய்தோமானால் அவசியம் நமக்கு அங்கே பலம் கிடைக்கத்தான் செய்யும். அநேகம் பேருக்கு இந்தக் காலத்துலே ஒரு பெரிய ப்ரச்னை. என்னவோ யாகம், ஹோமம் என்று சொல்லி அநேக த்ரவியங்களை எல்லாம் நெருப்பிலே போட்டு விடுகிறார்கள். அதைக் கொண்டு யாராவது ஏழைகளுக்குக் கொடுத்தாலாவது எவ்வளவு நல்லது ஆகும்? எல்லாவற்றையும் விட்டுவிட்டு இவ்வளவு பதார்த்தங்கள் எல்லாம் கொண்டு போய் நெருப்பிலே போட்டுவிட்டால் யாருக்கு ப்ரயோஜனம்? என்று சிலர் சாஸ்த்ரத்தினுடைய மர்மம் தெரியாதவர்களுக்கு ஒரு ப்ரச்னை. சாஸ்த்ரம் என்ன சொல்கிறது என்று கேட்டால் நாம் செய்கிற காரியங்களுக்கு வரக்கூடிய பலம் ப்ரத்யக்ஷமாகத் தெரியணும் என்று இல்லை. அப்ரத்யக்ஷமாக வரும். “அது ஏன்? ப்ரத்யக்ஷமாக வரும் என்று தெரியவில்லை. அப்ரத்யக்ஷமாக வரும் என்று சொல்கிறீர்கள்? சரியாகப் புரியும்படி சொல்லுங்கள்” என்று அநேகம் பேர் கேட்கிறார்கள். உங்களுக்கு லௌகீகத்திலேயே நாம் எங்கேயோ ஒரு ஸ்விட்சு ஆன் பண்ணினால் அங்கே எல்லாம் தீபங்கள் எரியறது. எப்படி எரியறது? ஸ்விட்சு இருப்பது எங்கேயோ! தீபம் இருப்பது எங்கேயோ! எவ்வளவு ஆயிரக்கணக்கான மைல்கள் தூரத்துலே ஒருத்தன் பேசறான். இங்கே ஒருத்தன் ஸ்விட்சு ஆன் பண்ணினால் அவனுடைய குரல் கேட்கிறதே எப்படி கேட்கிறது? ப்ரத்யக்ஷமாக, லௌகீகமாகப் பார்த்தால் அந்த ஆசாமி நம் கண் எதிரில் இல்லை. அது எப்படி கேட்க முடியும்?
பழைய காலத்து ஆசாமிகள் சொல்லிக் கொண்டு இருந்தார்களாம், இந்த ரேடியோ மாதிரி சாதனங்கள் வந்த புதுசுலே அது பேசறபோது “ஏய்! அதுக்குள்ளே எவனோ உட்கார்ந்து பேசறாண்டா! இல்லாவிடில் எங்கோ பேசிக் கொண்டிருந்தால் இங்கே எப்படி கேட்க முடியும்? உலகத்துலே எப்படி இருக்கிறது? ஒருவன் நம் எதிரில் பேசினால் நமக்கு அவன் சொல்வது கேட்கும். நீ ஒரு குரல் கேட்கிறது என்றால் உள்ளே எவனோ உட்கார்ந்து இருக்கணும்” என்றானாம். இல்லையப்பா! அவன் இங்கு உட்கார வேண்டியது இல்லை. அது எப்படி கேட்கமுடியும்? கேட்க முடியும். ஸம்ஸ்க்ருதத்திலே ஒரு வசனம் “நவிதி த்ருஷ்டி அனுபனன்னன் 

நாம் “ப்ரத்யக்ஷமாக இருக்கிற விஷயத்துலே முடியாது என்று சொல்வதற்கு அவகாசமே இல்லை. அது எப்படி இருக்கும் என்று கேட்டால் ப்ரத்யக்ஷமாக இருக்கும் விஷயத்துலே முடியாது என்று சொன்னால் எவ்வளவு அவிவேகம் என்று சொன்னால் அதற்கு ஓர் உதாரணம் சொல்லலாம். ஒருத்தர் வந்து தன்னுடைய ஜாதகத்தை ஒரு ஜோஸ்யரிடம் கொண்டு போனார். கொண்டு போய் அந்த ஜோஸ்யரிடம் “எனக்கு பவிஷ்யம் சொல்லுங்கோ. என் வாழ்க்கை இனிமேல் எப்படி இருக்கும்?” என்று கேட்டாராம். அப்போது அந்த ஜோஸ்யர் கேட்டாராம், “இது உன் ஜாதகம் தானே?” என்று அதற்கு அவன் “ஆமாம் என் ஜாதகம்தான்” “அப்போது இந்த ஜாதகத்துப்படி நீ போய் ஐந்து வருஷம் ஆகி இருக்க வேண்டுமே!” என்றாராம். “இல்லையப்பா நான் போனால் எப்படி உயிரோடுதானே இருக்கிறேன். உங்கள் எதிரிலேயே வந்து நிற்கிறேனே. நான் போய் 5 வருஷம் ஆகிவிட்டது என்று சொல்கிறீர்கள்?” “நீ சொல்வதை நான் நம்ப முடியாது. நீ போய் 5 வருஷம் ஆகி விட்டது” என்றாராம். இனி அந்த ஜோஸ்யருக்கு நாம் என்ன பதில் சொல்வது? உயிரோடு ப்ரத்யக்ஷமாக எதிரில் வந்து நின்றாலும் “நீ உயிரோடு இருக்கிறாய் என்பதை நான் ஒத்துக் கொள்ள மாட்டேன்” என்று அவர் சொன்னார். நாம் என்ன செய்வது? “நவி த்ருஷ்டேன அனு பன்னன் நாம” அதே போல் லௌகீகமான விஷயங்களில் ஆயிரக்கணக்கான மைல் தூரத்திலே இருக்கிறவனுடைய குரல் இங்கே உனக்கு கேட்கிறது என்கிறபோது எதனால் கேட்கிறது என்று சொன்னால் அங்கே ஒரு க்ரமம் இருக்கிறது. அந்த க்ரமத்தின்படி செய்தால் அது கேட்கும் என்று எப்படி சொல்லுகிறீர்களோ. சாஸ்த்ரமும் அதே போல் சொல்லுகிறது. என்ன சொல்கிறது?
“அக்னௌ ப்ராஸ்தா ஹுதி ஸம்ய ஆதித்யமுபதிய்சதே
ஆதித்யாத்ய தயாயதே வ்ருஷ்டி: வ்ருஷ்டேரன்னன் ததஸ்ப்ரஜா:”
என்று சொல்கிறது.
“அக்னௌ ஸ்ம்யர் ப்ராஸ்தாஆஹுத் ஆதித்யம் உபதிஷ்டதி”
‘ஸ்ம்யத்’ என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம்? அக்னியில் விதி விதானத்தோடு நாம் போட்ட ஆஹுதி ஆதித்யனுக்கு ஸுர்யனுக்குப் போய்ச் சேரும். சூர்யனால் மழை ஏற்படும். மழையினால் நம்முடைய ஆகாரம் கிடைக்கும். ஆஹாசம் இருந்தால் மனுஷன் ஜீவிக்க முடியும். நான் அதை ஒத்துக்கொள்ள மாட்டேன் என்று சொன்னால் அப்போது அதுவும் நீ ஒத்துக்கொள்ள முடியாது. அவ்வளவு தூரத்துலே பேசுகிறவன் குரல் இங்கு ரேடியோவில் கேட்பதையும் நீ ஒத்துக்கொள்ள முடியாது என்று சொல்லலாமே. இதை மட்டும் ஒத்துக்கொள்ளும்போது அதை ஏன் ஒத்துக்கொள்ளக்கூடாது? இது இன்றைக்குக் கண்டுபிடித்தது. ஆனால் இதுவோ எத்தனையோ ஆயிரக்கணக்கான வருஷங்களுக்கு முன்பே சொல்லி வைத்தது.
எப்போதுமே மனுஷன் ஒரு யுக்திக்கு ஒரு ப்ரமாணத்துக்கு கட்டுப்படவேண்டும். “எனக்கு எந்தவிதமான யுக்தியும் இல்லை. ப்ரமாணமும் இல்லை. நான் எனக்குத் தோன்றியபடி பேசிக் கொண்டிருப்பேன்.” என்று சொன்னால், ஆசார்ய சங்கரர் அப்பேர்ப்பட்டவர்களுக்கும் பதில் சொல்லியிருக்கிறார். அந்த மாதிரி நாம் சொல்வதாக இருந்தால் “யஸ்மை யஸ்மை யுத்யத்ரோஜதே தத் ஸர்வமதி ப்ரமாணம் த்ஸ்யாத்” என்றார். அப்படி சொல்வதை எல்லாம் ஒத்துக் கொள்வதாக இருந்தால் அவனவனுக்குத் தோன்றுவதை எல்லாம் அவன் சொல்லுவான். அதெல்லாம்சரி என்று நாம் சொல்லவேண்டி வரும். வரட்டுமே! எல்லோரும் சொல்வதை சரி என்போம். ஆ! எல்லோரும் சொல்வதை சரி என்று சொல்ல ஆரம்பித்தால் ஒருத்தன் சாயங்காலம் ஆனவுடனே உபநயனம் ஆனவன் ஸந்த்யாவந்தனம் பண்ணனும் என்று சொல்றான். இன்னொருத்தன் கிடையாது, சாயங்காலம் ஆனவுடனே விளையாடுவதற்குப் போகணும் என்று சொல்கிறான். இன்னொருவன் அதுவும் கிடையாது. சினிமாவுக்கு போகணும் என்று சொல்கிறான். இன்னொருவன் அதுவும் வேண்டாம் சாயங்காலம் ஆனவுடனே “க்ளப்”புக்குப் போகணும் என்று சொல்கிறான். இவர்கள் எல்லாருடைய பேச்சும் ப்ரமாணம் என்று நாம் சொல்வதாக இருந்தால் இனி தர்மம் என்பதும் இல்லை. சாஸ்த்ரம் என்பதும் இல்லை. எதுவும் இல்லை. பசுக்கள் மாதிரி. ப்ராணிகள் மாதிரி நம்முடைய வாழ்க்கை. நம்முடைய வாழ்க்கை அந்த சதுஷ்பாத் ப்ராணிகள் மாதிரிதான் ஆகும். அப்படி ஆகக்கூடாது அல்லவா? இந்த மனுஷன் என்பது மனுஷ்ய சரீரம் என்பது. மனுஷ்ய ஜென்மம் என்பது இது ரொம்ப உத்தமமானது. “ஜெந்துனான் நர ஜென்ம துர்லபம்” என்று சாஸ்த்ரத்துலே மனுஷ்ய ஜென்மத்தை அவ்வளவு உயர்ந்ததாகச் சொல்லி இருக்கிறது. அப்படி இருக்கும்போது நாம் அவ்வளவு அவிவேகத்தோடு பேசுவதாக இருந்தால் அது நமக்கு நியாயமா? கொஞ்சமும் நியாயமில்லை.

ஆகையால் நம்முடைய கண்ணுக்குத் தெரியாத ரீதியிலே ஒரு சங்கதி நடந்துகொண்டு இருக்கிறது என்பது லௌகீகத்துலேயும் ஒத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. சாஸ்த்ரீயமாகவும் ஒத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. நாம் அக்னியிலே இவ்வளவெல்லாம் பதார்த்தங்களை வீணாக்கட்டும் என்று யாருமே நினைக்கக் கூடாது. நாம் இன்றைக்கு ஓர் அளவுக்கு த்ரவியத்தை அக்னியில் விதி விதான புரஸ்தரமாக ஸமர்ப்பித்தால் அது பத்து மடங்கு அதிகமாக நமக்குக் கிடைக்கிறது. ஒரு மழை வரணும் என்று சொன்னால் அது நம்மால் சாத்யமா? (லௌகீகமான காரணங்களால்) சாத்யமில்லை. ஆனால் சாஸ்த்ரத்திலேயே சொல்லப்பட்ட இந்த மாதிரி மார்க்கத்தினாலே சாத்யம். “ஆதித்யாத்யாயதே வ்ருஷ்டி: வ்ருஷ்டோன்னன் தத ப்ராஜ: என்று எந்த மார்க்கம் சாஸ்த்ரத்திலே சொல்லி இருக்கிறதோ அந்த மார்க்கத்தை அனுசரித்தால்தான் சாத்யம். ஆகையால் நாம் செய்யக்கூடிய இந்த பவித்ரமான கார்யங்கள் உலகத்துக்கு க்ஷேமகரமா இல்லையா? என்கிற ப்ரச்னைக்கு இது லோகக்ஷேமகரமான கார்யங்கள் என்று நாம் தீர்மானமாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
நாம் இப்பேர்ப்பட்ட கார்யங்களை நாம் இன்றைக்குப் புதிதாக ஆரம்பித்திருந்தால் ஏதோ இவர் தனக்குத் தோன்றியபடி செய்கிறார் என்று சொல்லலாம். நாம்

“சகயக்ஞா ப்ரஜா ஸ்ருத்வா புரோ வாசப் ப்ரஜாபதி:
ஆனேன ப்ரஷவித்யத்வம் ஏவிவோ
ஸ்விஷ்ட காம து: ஏவான் பாவயதேனே ந தேதேவா பாவயந்துவ:”
பரஸ்பரம் பாவயந்த: ஸ்ரேய ஸ்பரம் அவாப்த்யத 

என்கிற வார்த்தையை ரொம்பப் ப்ரமாணமாகத் தெரிந்து கொண்டிருக்கிறோம். என்ன அதற்கு அர்த்தம்? ஸ்ருஷ்டி கர்த்தாவான பரமாத்மா ஸ்ருஷ்ட்யாரம்பத்திலேயே ப்ரஜா ஸ்ருஷ்டியைச் செய்து அவர்களுக்கு இந்த தர்மங்களை உபதேசித்து நீங்கள் தர்மங்களை ஒழுங்காக அனுஷ்டியுங்கள். இதனால் தேவதைகள் ஸந்துஷ்டர்களாக ஆகிவிடுவார்கள். திரும்ப உங்களுக்கு அவர்கள் ஸகாலத்துக்கு மழை இத்யாதிகளைத் தருவார்கள். இப்படி உங்களால் அவர்கள், அவர்களால் நீங்கள் என்று பரஸ்பரம் ப்ரயோஜனத்தை அடைந்து ஸ்ரேயஸோடு இருங்கள் என்று பகவானுடைய கட்டளை ஆரம்பத்திலேயே. ஸ்ருஷ்டி ஆரம்பத்திலேயே. இதை நாம் அனுசரிக்காமல் போனால் என்ன ஆகும் என்பதையும் அங்கேயே பகவான் சொல்லியிருக்கிறான். குஷ்டான் போகான் விவோதேவா: தாஸ்யந்தே யக்ஞ பாவிதா: தைர்த்யத்தான் அப்ரதாயைத்ய: யோகுந்தே ஸ்தேன ஏவத:”
உங்களுக்கு தேவதைகள் இவ்வளவு உபகாரம் செய்கிறார்கள். ஸகாலத்துக்கு வ்ருஷ்ட்யாதிகள் வரவேண்டுமானால் அந்த தேவதா அனுக்ரஹம்தான். தேவதைகளால் இவ்வளவு உபகாரத்தை அடைந்து திரும்ப அவர்களுக்கு நீங்கள் இந்த ஹவிர்பாகங்களை சரியாகக் கொடுக்கவில்லை என்று சொன்னால் அது ரொம்பவும் தப்பிதம். எப்பேர்ப்பட்ட தப்பிதம் என்று சொன்னால் அவர்கள் உங்களுக்கு இவ்வளவு சௌகர்யங்கள் கொடுத்ததனால் அவர்களுக்குத் திரும்ப நீங்கள் அவிர்பாகங்களைக் கொடுக்காமல் நீங்கள் அனுபவிப்பதாக இருந்தால் உங்களை “ஸ்தேன ஏவச:” திருடன் என்று சொல்ல வேண்டி வரும். அவர்கள் நமக்கு இவ்வளவு அனுக்ரஹம் பண்ணும்போது திரும்ப தேவதைகளை நாம் ஆராதிக்கா விட்டால் அது பெரிய பாபம்.

சாஸ்த்ரத்திலேயும் கூட எவன் மற்றவனுக்கும் உபகாரம் செய்யாமல் ஈஸ்வரனுக்கும் எதையும் சமர்ப்பிக்காமல், கேவலம் தானே சாப்பிடுவானோ அது தன்னுடைய உதர போஷணம்தான் வேறு எதுவும் கிடையாது என்று எவன் நினைப்பானோ அப்பேர்ப்பட்டவன் சாதம் சாப்பிடுகிறான் என்று அல்ல. பாபத்தைச் சாப்பிடுகிறான் என்று அர்த்தம்.

“மோகம் அன்னம் ஹிந்த தேக ப்ரமததா:
சத்யம் ரவீனி வபதி சதஸ்யா நார்ய மணம் புஷ்யதி
நோசகாயம் விவலா போ வவதி கேவலாதி”
“நஅர்ய மணம் புஷ்யதி நோசகாயம்”

அப்பேர்ப்பட்டவனால் சமாஜத்துக்கும் உபகாரம் இல்லை. தேவதா சேவையும் நடக்கவில்லை. அப்போது அவன் என்ன சாப்பிடுகிறான்? “கேவல அதி” கேவலம் தன்னுடைய உதரபோஷணமே எவன் செய்து கொண்டு இருக்கிறானோ அவன் கேவலம் பாபத்தை அவன் சாப்பிடுகிறான். சாதத்தை இல்லை. அப்படி இருக்கும்போது நாம் இந்த பவித்ரமான கார்யங்களை தேவதாராதன ரூபமான கார்யங்களை அவ்வப்போது ஆங்காங்கே அனுஷ்டானம் செய்தால்தான் உலகத்துக்கும் க்ஷேமம். மக்களுக்கும் க்ஷேமம். இந்த ஒரு பாரம்பர்யத்தை நாம் அதி ப்ராசீன காலமாக அனுசரித்துக் கொண்டு வருகிறோம்.
எவ்வளவு புராணங்களைப் பார்த்தாலும் இதிகாசங்களைப் பார்த்தாலும் இந்த விஷயங்களை நாம் அங்கே தெரிந்து கொள்ளலாம். இராமாயண காலத்திலே எத்தனை மகான்கள் யக்ஞ யாகாதி கர்மாக்களைச் செய்து கொண்டிருந்தார்கள்? எத்தனை பவித்ரமான கார்யங்கள் நடந்து கொண்டிருந்தன? எத்தனை இடங்களில் தான தர்மங்கள் நடந்து கொண்டிருந்தன என்பதைப் பார்த்தால் மிக ஆச்சர்யமாக இருக்கும். அதேபோல் மஹாபாரதத்துலே எவ்வளவு பவித்ரமான கார்யங்கள் நடந்து கொண்டிருந்தன என்பதைப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கும். மஹாபாரதத்துலே துரியோதனன் அவன் ஒரு விதமான மனுஷன். மொத்தத்திலே பார்த்தால் அவன் துஷ்டன்தான். அதில் சந்தேகம் இல்லை. ஆனால் பஞ்சபாண்டவர்களை ஆரண்ய வாசத்துக்கு அனுப்பிய சமயத்துலே அவன் ஜனங்களுடைய ப்ரீதியை சம்பாதிக்கணும் என்பதற்காகவும் ஈஸ்வர ப்ரீதிக்காகவும் எத்தனையோ தான தர்மங்களைப் பண்ணிக்கொண்டு இருந்தான். எத்தனையோ யக்ஞ யாகாதிகளை நடத்திக் கொண்டிருந்தான் என்று இருக்கிறது. “கிராதார்ஜுனியம்” என்று ஒரு காவியம். அந்தக் காவ்யத்துலே தர்மராஜன் ஆரண்யத்துலேயே இருந்து அங்கேயே இருக்கக்கூடிய ஒரு ரொம்ப புத்திசாலியான ஒருத்தனை காட்டில் இருக்கச் கூடிய ஒரு வேடனை துரியோதனன் ராஜ்யம் எப்படி நடக்கிறது என்று நீ பார்த்துவிட்டு வா என்று சொல்லி அனுப்பினார். அவன் துரியோதனனுடைய ராஜ்யத்துலே எல்லா இடத்திலேயும் போய்ப் பார்த்திருக்கிறான். பார்த்து, இவரிடம் (தர்மராஜனிடம்) முழுச் செய்தியையும் சொல்லிக் கொண்டு வந்தான். அவன் சொல்கிறான் : அவன் ஜனங்கள் எல்லோரும் உங்களை மறந்துடணும் என்பதற்காக எவ்வளவோ பெரிய பெரிய கார்யங்களைச் செய்து கொண்டிருக்கிறான். இனி ஜனங்கள் யாருக்கும் தர்மராஜன் பெயர் ஞாபகத்தில் இருக்கக்கூடாது என்பதற்காக. எதனால்? நாம் இப்பேர்ப்பட்ட தான தர்மங்களைச் செய்தால் ஸமாஜத்துக்கும் நல்லது. தேசத்துக்கும் நல்லது என்பதற்காக அப்பேர்ப்பட்ட கார்யங்களை அவன் செய்து கொண்டிருந்தான். இனி இராமருடைய காலத்துலே எவ்வளவு மகாகார்யங்கள் நடந்தது என்பதை இராமாயணம் பார்த்தால் தெரிகிறது. இப்படி ஒரு பாரம்பர்யம் நம்முடைய இதே பவித்ரமான பாரததேசத்திலே அநாதி காலமாக வந்து கொண்டு இருக்கிறது.

ஆதிசங்கர பகவத் பாதாள் நமக்கு அநேக உபதேசங்களைக் கொடுத்தார். அந்த உபதேசங்களில் அவர் ஒரிரண்டு உபதேசங்களைச் சொன்னார். வேதோக்தமான கர்மாக்களை ஸ்ரத்தையோடு செய்யுங்கள். அதனால் ஈஸ்வரனை ஸந்த்ருப்தி படுத்துங்கள். இரண்டு உபதேசங்கள்:

“தது திதம் கர்மம் ஸ்வனுஷ்டீயதாம்
தேந ஏ ஈசஸ்ய விதீயதாம் அபசிதி:”

“ததுதிதம்” வேதத்தில் சொல்லப்பட்ட கர்மாவை ஸுஅனுஷ்டிதாம் ஸ்ரத்தையோடு செய்யுங்கள். அதனால்தான் ஈஸ்வரனை ஸந்துஷ்டனாக்க முடியும். ஏனஈசஸ்ச விதீயதாம் அபசிதி: “அபஸ்சிதி:” என்ற வார்த்தைக்கு பூஜை என்று அர்த்தம். அதனால் ஈஸ்வரனை பூஜியுங்கள். ஈஸ்வரனை ஸந்த்ருப்தி படுத்துங்கள். நான் எதற்கு சொல்ல வருகிறேன், எந்த ஒரு பாரம்பர்யம் ஸ்ருஷ்ட்யாதியிலிருந்து வந்திருக்கிறதோ எந்த தர்மம் நம்முடைய குருவான ஆதிசங்கரரும் சொல்லியிருக்கிறாரோ அந்த தர்மங்களை மறக்காமல் அனுஷ்டிக்கணும் என்று சொல்லி இருக்கிறார் என்பதைச் சொல்கிறேன். அநேகம் பேருக்கு ஆதிசங்கரர், அவரா அவர் அத்வைதம் ஒண்ணுமில்லையே என்பார்கள் அத்தைவதம் ஒண்ணுமில்லையே என்பது எப்போது? எவனுக்கு அந்த அத்வைத ஆத்ம த்ருஷ்டி வந்திருக்கிறதோ அவனுக்கு ஒன்றுமில்லை.

“யஸ்யதஸ்ய ஸர்வம் த்மைவாபுதத் தேனகம்
பஸ்யேத்கேனகம் ஜிக்ரேத் கேனகம் விஜானியாத்

எவனுக்கு ஸர்வத்ர ஆத்மதர்சனம் என்பது இருக்கிறதோ அவன் செய்ய வேண்டியது ஒன்றுமில்லை. அடையவேண்டியதும் ஒன்றுமில்லை. அவன் கேவலம் ஆத்மா இராமனாக இருக்கலாம். ஆனால் நம்முடைய நிலைமை அப்படி இருக்கிறதா? அப்படி இல்லையே. நாம் மீதி வ்யவகாரம் எல்லாம் பண்ணிக் கொண்டு இருக்கிறோம். தர்ம அனுஷ்டானம் வரும்போது அத்வைதம் என்று சொல்லி விடுகிறோம். இது எவ்வளவு ஸ்வாரஸ்யமாக இருக்கிறது.

ஒருவர் சொன்னார் “பகவான் பகவத் கீதையிலே ரொம்ப ஸாரபூதமாக கடைசியிலே இரண்டு விஷயங்களைச் சொல்லி இருக்கிறான்” என்று பெரியவர்கள் மூலமாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். அதை என் ஜீவிதத்துலே அனுஷ்டானத்துக்குக் கொண்டு வரவேண்டும் என்று பார்க்கிறேன். பாதியைக் கொண்டு வந்திருக்கிறேன். இனி பாதியைக் கொண்டு வரணும் என்று சொன்னார். என்னப்பா என்றேன். “ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் ஸரணம் வ்ரஜா” என்று இருக்கிறது. இதில் இரண்டு விஷயம். எல்லா தர்மங்களையும் விட்டு விட்டு என்னைச் சரணடைய வேண்டும். இரண்டு விஷயங்கள் இருக்கிறது. அதில் முதல் விஷயத்தை ரொம்ப அழகாகச் செய்துவிட்டேன். இரண்டாவது விஷயம் அது சாவகாசமாகச் செய்ய வேண்டியிருக்கிறது. “ஸர்வ தர்மான் பரித்யஜ்ய” எல்லாவற்றையும் விட்டாச்சு. இந்த மாதிரி நாம் சொன்னால் இது நமக்கு நியாயமாகுமோ? இது கேவலம் நம் மனசில் ஸ்ரத்தை இல்லை. நாஸ்திக்யம் இருக்கிறது. ஆலஸ்யம் இருக்கிறது. ஆலஸ்யம் என்று ஸம்ஸ்க்ருதத்தில் சொல்கிற வார்த்தைக்கு சோம்பல் என்று அர்த்தம். நம்முடைய அந்த ஆலஸ்யம் அஸிரத்தை, நாஸ்திக்யம் அதுதான் இப்பேர்ப்பட்ட வார்த்தைகளை நம் வாயால் சொல்ல வைக்கிறது. அது இல்லாவிட்டால் நாம் இந்த மாதிரி வார்த்தைகளைப் பேச மாட்டோம். நாம் ப்ரதி ஒருத்தனும் கூட இப்பேர்ப்பட்ட கார்யங்களில் ரொம்ப ஸ்ரத்தையோடும் ரொம்ப பக்தியோடும் பங்கெடுத்துக் கொள்ளவேண்டும். இங்கே திரும்ப ஒரு ப்ரச்னை அநேகம் பேருக்கு. “ஓ! நீங்கள் சொல்கிறீர்கள், இப்படி ஒரு பெரிய யாகம் பண்ணினால்தான் அவன்தான் தர்மிஷ்டன்.” என்கிறீர்கள். எங்களுக்கெல்லாம் அந்த மாதிரி யாகங்களைப் பண்ண முடியாது. நாங்கள் சாதாரணமானவர்கள். அப்போது எங்களுக்கு இதில் அவகாசமே இல்லை. அப்படி சொல்லவே சொல்லக் கூடாது.

சாஸ்திரத்திலே சொன்னார்கள், “என்ன ஓய்! பணக்காரன்தான் தர்மம் பண்ணலாம். இன்னொருத்தன் பண்ணக்கூடாது என்று உண்டோ” அப்படி எங்கேயும் இல்லை.

“அர்த்தானு ஸ்ருயதி விஜஹி மோ தர்ம
மர்த்தை ஹி சாத்யம் காயக் க்லேசை
கடிகடி இத சாதனியோ நதர்ம:”

பணம் இல்லை என்று சொன்னால் அதனால் தர்மத்தைச் செய்ய முடியவில்லை என்று நீங்கள் நினைத்துக் கொள்ளலாமா? ஒருத்தர் பெரியவர், இந்த மாதிரி ஒரு நல்ல கார்யம் பண்ணுகிறார் என்று சொன்னால் அதைப் பண்ணுவதற்கு நமக்கு சக்தி இல்லாவிட்டாலும் அது நடக்கக் கூடிய இடத்துக்கு வந்து தர்சனம் பண்ணினாலே ஒரு தர்மம் அல்லவா? அதுவே ஒரு புண்ணியம் அல்லவா? அல்ல என்று யார் சொன்னார்கள்? இந்த மாதிரி கார்யங்களில் ஒரு நல்ல கார்யத்திலே எத்தனை பேருக்குப் புண்ணியம் இருக்கிறது என்று சொன்னால் அதைச் செய்கிறவனுக்கும் அவனால் செய்ய வைக்கிறவனுக்கும் அதை நீ செய்யணும் என்று தீண்டினவனுக்கும் அதற்கு இடைஞ்சல் பண்ணாமல் இருக்கிறவனுக்கும் அவனுக்கும் அதில் ஒரு துளி பங்கு உண்டு.. அப்படி இருக்கும்போது நாம் நல்ல கார்யங்களைச் செய்யணும். செய்வதற்கு நமக்கு சக்தி இல்லை என்று சொன்னால் அந்த மாதிரி பவித்ரமான கார்யங்கள் எங்கு நடக்கிறதோ அங்கே போய் தர்சிக்க வேண்டும். நமக்கு சரீரத்தினாலே எவ்வளவு முடிகிறதோ அவ்வளவு செய்தாலும் போதும். வேறு ஒன்றும் வேண்டாம். உங்களுக்கு என்னால் ஏதாவது உதவி வேண்டுமானால் சொல்லுங்கள். நான் செய்கிறேன். என்னிடம் பணம் இல்லை. ஆனால் வேறு ஏதாவது உதவி செய்வதானால் செய்கிறேன் என்று சொல்லி செய்தோமானால் அதுவும் ஒரு பெரிய தர்மம் அல்லவா? அப்படி இருக்கும்போது நாம் யாருமே நமக்கு தர்மானுஷ்டானத்துக்கு அவகாசம் இல்லை என்று மட்டும் நினைத்துக் கொள்ளக் கூடாது. ப்ரதி ஒருத்தனுக்கும் இருக்கிறது. அப்பேர்ப்பட்ட சாரீரகமான சக்தி இல்லாதவனுடைய பரிஸ்திதி என்ன என்று சொன்னால் அவனுக்கும் இருக்கிறது. எனக்கு ஓடி ஆடுவதற்கு சக்தி இல்லை. ரொம்ப வயசாகி விட்டது. இப்போது நாம் ஒன்றும் செய்யக்கூடிய நிலமையிலே இல்லை என்று சொன்னால் நீங்கள் ஒண்ணும் செய்ய வேண்டாமப்பா! இருக்கிற இடத்திலேயே பகவத் தியானம் பண்ணுங்கள். அதுவே உங்களுக்குப் பெரிய தர்மம். அது இல்லை என்று யார் சொன்னார்கள்? ஆகமட்டும் மொத்தத்துலே ப்ரதி ஒருத்தனுக்கும் தர்மானுஷ்டானத்துக்கு அவகாசம் இருக்கவே இருக்கிறது. ஆகையால் நாம் சொன்ன உபன்யாஸத்தின் ஸாராம்ஸத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று சொன்னால் தர்மாதர்மங்களைப் பற்றி சாஸ்த்ரம்தான் ப்ரமாணமாகச் சொல்ல முடியும். சாஸ்த்ரத்துலே நாம் எதைச் செய்யணும் என்று சொல்லியிருக்கிறதோ அது தர்மம். அப்பேர்ப்பட்ட தர்மத்தை நாம் ஸ்ரத்தையோடு அனுஷ்டிக்க வேண்டும். நாம் இந்த மாதிரி யாகங்களைச் செய்வதில் த்ரவியங்களை வீணாக்குகிறோம் என்று நினைக்கக் கூடாது. அதனால் பத்து மடங்கு உபயோகம் திரும்ப நாம் அடைகிறோம். இந்த விஷயத்துலே யாருக்கும் எப்பேர்ப்பட்ட சம்சயத்துக்கும் அவகாசம் இருக்க வேண்டிய தேவை இல்லை. இது ஆரம்பத்திலிருந்தும் நாம் அனுஷ்டிக்கக் கூடிய பாரம்பர்யம். இதிகாச புராணங்களெல்லாம் இந்த விஷயத்தை நமக்குக் காட்டுகிறது. ஆதிசங்கர பகவத்பாதாளும் இந்த விஷயத்தை நமக்கு ப்ரபோதம் செய்தார். ஆகையால் ப்ரதி ஒருத்தனும் இந்த தர்மத்தை அனுஷ்டிக்க வேண்டும். அவனவனுடைய சக்தியை அனுசரித்து எல்லோரும் தர்மத்தை அனுஷ்டிப்பதற்கு அவகாசம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். இதை நாம் எல்லோரும் மனத்தில் வைத்துக் கொண்டு நம்முடைய ஜீவிதத்துலே சத் விஷயங்களை சிந்தனை செய்து சத் கர்மாக்களை அனுஷ்டானம் செய்து இந்த ஜென்மாவை ஸார்த்தகம் ஆக்கிக் கொள்ள வேண்டியது நம்முடைய கர்தவ்யம். சாஸ்த்ரத்திலே பகவானை ஆராதனம் செய்யணும் என்கிற விஷயத்தைச் சொல்லும்போது அந்த பகவானுடைய ஸ்த்ரீ ரூபமான அந்த தேவியை பரதேவதையை ஆராதித்தால் ரொம்ப விசேஷமான பலன் என்று சொல்லி இருக்கிறது.

நன்றி: அம்மன் தரிசனம்